ரகுநாயகன்,பைசாபாத் (திருவயோத்தி)
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஃபைசாபாத் என்னும் மாவட்டத்தின் தலைநகரான ஃபைசாபாத் ரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.
மூலவர் : ஸ்ரீராமன், சக்ரவர்த்தித் திருமகன்
தாயார் : சீதா தேவி
தீர்த்தம் : பரமபதஸத்ய புஷ்கரிணி, சரயு நதி
மங்களாசாசனம் :பெரியாழ்வார் - 6 ,குலசேகராழ்வார் - 4, தொண்டரடிப்பொடியாழ்வர்ர் -1,திருமங்கையாழ்வார் - 1, நம்மாழ்வார் - 1 பாசுரம்
தலச் சிறப்புகள் : மூலவர் வீற்றிருந்த கோலத்தில் வடக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். இங்கு ராம லட்சுமண, சீதை, அனுமார் என எண்ணற்ற கோயில்கள் உள்ளன.
தல வரலாறு : உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ளது அயோத்தி. சரயு நதிக்கரையில் ராமனுக்கு கோயில் எழுப்பப் பட்டுள்ளது. மனித குல முதல்வரான மனு இவ்வூரை கட்டியாதக் சொல்வர். தேவர்களே இந்நகரை கிருஷ்ணனின் ராம அவதாரத்துக்காக எழுப்பினார் என புராணங்களில் சொல்லப்படுகிறது. மனுவின் வம்சத்தில் வந்த ஹரீஷ் சந்திரா, சாகர், பரகீதர் ஆகியோர் இந்த புண்ணிய பூமியை ஆண்டனர். அதன் பிறகு பகீரதரின் பேரனான தசரதர் ஆட்சிக்கு வந்தார். அவருக்கு கோசலை, கைகேயி, சுமித்திரை என்னும் முன்று மனைவிகள். இவர்களில் கோசலைக்கு பிறந்தவரே ராமன். ராமாயணம் மறைமுகமாக சுட்டிக் காட்டும் உண்மை இதில் தான் புதைந்து கிடக்கிறது. தசரதர் கோசலையை மட்டும் மணந்திருந்தால் அவள் மூலமாகவே நான்கு புத்திரர்களைப் பெற்றிருக்க முடியும். ஆனால் அவர் மூன்று பெண்களை திருமணம் செய்து நான்கு மக்களைப் பெற்றார். ஆனால் கைகேயியின் சொல்லைக் கேட்டு வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகி, புத்திர சோகத்தால் தன் உயிரையே விட்டார். இதே போல ராவணனும் இன்னொரு பெண்ணை விரும்பியதால் இறந்தான். அயோத்தி மாநகர் ஆலயத்தில் இன்று ஒரு குறிப்பிட்ட பகுதியில் ராமரை வழிபட எந்தத் தடையும் இல்லை. இங்கு ராமன், ரகுநாயகன் என்ற பெயரில் வீற்றிருக்கும் கோலத்தில் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இப்போது சரயு நதிக்கரையில் அம்மாஜி மந்திர் என்ற பெயரில் புதிய தலம் எழுப்பப்பட்டுள்ளது. இங்கு ரங்கநாதர் சன்னதியும், ராமர் சன்னதியும் உள்ளன. ராமனின் சன்னதியில் சீதாதேவியும், தம்பிகள் மூவரும், அனுமனும், கருடனும் உள்ளனர். இத்தனை பேரையும் ஒரு சேர வழிபடும் இடம் இதுவே.
ஸ்லாயம்புலான் என்பவன் பிரம்மாவின் முதல் புத்திரன் ஆவான். அவனுக்கு பெருமாள் வைகுந்தத்தின் மத்தியிலிருந்து அயோத்தி என்னும் பாகத்தை பிரம்மா மூலம் கொடுக்க, அதை அவர் மனுச்சக்கரவர்த்திக்கு அளித்தார். அவர் பூலோகத்தில் சரயு நதியின் தென்கரையில் நிலைநாட்டினார். ஆகவே இந்நகரம் ஸ்ரீராமன் பிறப்பதற்க்கு முன்பே வானவர்களுடன் தொடர்புடையதாக இருந்துள்ளது. முக்தி தரும் 7 தலங்களினுள் ஒன்றான இந்த அயோத்தியில் திரோதாயுகத்தில் உதித்த ராமநாமம் இன்று உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. ராம நாமத்தின் மகிமை அதனை எழுத்தில் எழுதி விவரிக்கமுடியாத ஒன்றாகும். எண்ணிய உடனே ராம பாணம் போல் பாவங்களைச் சுட்டெரிக்கும் தலமாகும்.
ராமனின் ஜெனன ஜாதகத்தில் ஐந்து கிரகங்கள் உச்சத்தில் உள்ளன. இவ்வாறு ஒருவரின் ஜாதகம் அமைவது மிகவும் சிரமமானது. எனவே அவரது ஜாதகத்தை பூஜை அறையில் வைத்து வணங்கினால் அனைத்து தோஷங்களும் நீங்கும்.இந்தக் கோயிலில் இருந்து 6 கி.மீ., தொலைவில் சரயு நதியில் தனது சகோதரர்களுடன் சங்கமம் ஆன குப்தா படித்துறை உள்ளது. இங்க நீராடுவது புண்ணியம் தரும். இந்த ஆற்றின் கரையில் உள்ள அனுமன் விஸ்வருப வடிவம் கொண்டவராக இருந்தார். இப்போது தலை மட்டுமே தெரிகிறது. குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், தொண்டரடி பொடியாழ்வார் ஆகியோர் அயோத்தி பற்றி பாடியுள்ளார்கள்.
ராமன் ஏக பத்தினி விரதன். அனுமான் களங்கமற்ற தூய பிரம்மச்சாரி. இந்த இரண்டையும் நாம் உற்று நோக்க வேண்டும். பிரம்மச்சாரியாக வாழ்பவன் அனுமனைப் போல பிற பெண்களை தாயாக நேசிக்க வேண்டும். சீதாவை அனுமான் தாயாகவே நேசித்தான். இல்லற வாழ்க்கையில் இறங்குபவன் பக்கத்து வீட்டு பெண்ணை நோக்கக்கூடாது. ராவணனுக்கு மண்டோதரி மனைவி ஒருத்தி இருக்கும் போது அவன் அடுத்தவன் மனைவியான சீதா மீது ஆசைப்பட்டான். விளைவு அவன் உயிரே போனது. இதற்கு காரணம் சீதாவும் அல்ல. ராமனின் வீரமும் அல்ல. மண்டோதரியின் மனக்குமுறலே ராவணனை அழித்து விட்டது. நாம் இருக்கும்போது இன்னோருத்தியை தனது கணவர் நாடுகிறாரே என அவள் மனம் எந்த அளவு புண்பட்டிருக்கும். அந்த புண்பட்ட மணம் தன்னை அறியாமல் விட்ட சாபமே ராவணனின் அழிவுக்கு காரணமாயிற்று.
காலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும். மேலும், தங்குவதற்கும் சாப்பாடு சாப்பிடுவதற்கும் வசதிகள் உள்ளன. சரயு நதிகருகில் தென்னிந்தியப் பாணியில் கட்டப்பட்டுள்ள அம்மாஜி மந்திர் (மதராசி மந்திர்) என்ற கோயில் உள்ளது. இங்கேயே தங்கவும், உணவும் தரப்படுகிறது.
அருகிலுள்ள விமானதளம் : லக்னோ
அருகிலுள்ள ரயில் நிலையம் : ஃபைசாபாத்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு