நீலமேகம், திருக்கண்டங்கடிநகர் (தேவப்ரயாகை)
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் திருக்கண்டங்கடிநகர், ஹரித்வாரிலிருந்து பத்ரிக்குச் செல்லும் வழியில் 93 கி.மீ தொலைவில் உள்ளது. அலகாநந்தா நதியும் பாகீரதி நதியும் சங்கமம் ஆகிற புண்ணிய தலம் இது. சமுத்திர மட்டத்திலிருந்து 1700 அடி உயரத்தில் உள்ளது. ரகுநாத்ஜி மந்திர் என்றால் தெரியும்.
மூலவர் : நீலமேகப் பெருமாள்
தாயார் : புண்டரீகவல்லி
தீர்த்தம் : மங்கள தீர்த்தம், கங்கைநதி
விமானம் : மங்கள விமானம்
மங்களாசாசனம்: பெரியாழ்வார் - 11 பாசுரங்கள்
தலச் சிறப்புகள் : மூலவர் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். இங்குப் பெருமாளை ரகுநாத்ஜி என்று அழைக்கிறார்கள். இங்கு ஸ்ரீசக்கரவர்த்தித் திருமகன் எழுந்தருளியிருக்கிறார். கோவிலுக்கு பின்புறம் சிறிய அளவு ஹனுமார் சேவை சாதிக்கிறார்.
இரண்டு நதிகள் கூடுமிடம் பிரயாகை எனப்படும். இங்கு அளகநந்தா மற்றும் பாகீரதி நதிகள் சங்கமம் ஆகின்றன. பிரம்மதேவன் தேவர்களுக்கெல்லாம் தேவரான திருமாலைக் குறித்து இங்கு வேள்வி செய்ததால் தேவப்பிரயாகை என்று அழைக்கப்பட்டது. கங்கை கரைமேல் இருக்கும் கண்டம் என்னும் கடி நகர் என்பதே கண்டங்கடிநகர் என்று விளங்கிற்று. கங்கை, யமுனை போன்ற புனித நதிகள் கூடுமிடமே 'ப்ரயாகை' இங்கு யாகம் செய்பவர்கள் மோட்சம் அடைவார்கள். தேவேந்திரன் ப்ரயாகையைப் பாதுகாக்கிறான். இங்குள்ள ஆலமரம்தான் பிரளய காலத்தில் அழியாமல் இருக்குமென்றும் அதனிலையில் தான் பெருமாள் குழந்தையாக பள்ளி கொள்வார் என்றும் கூறுவர். பாண்டவர்கள் போரில் சகோதரர்களைக் கொன்ற பாவத்தைப் போக்க ப்ரயாகையில் நீராடினால் போதும் என்று மார்க்கண்டேயர் கூற, அவர்கள் அவ்வண்ணமே செய்ய பாவம் தீர்ந்தது. பிரம்மா இவ்விடத்தில் செய்த யாகத்திற்குப் பின்னே தனது படைக்கும் தொழில் சக்தியை அதிகரித்துக் கொண்டாராம். பரத்வாஜர் இங்கு யாகம் செய்தே, சப்தரிஷிகளுள் ஒருவராக ஆனார்.
இவ்விடத்தில் நாம் அன்னதானம் செய்தால் மிகவும் பலன் அளிக்கும். இறைவனை காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையும், மாலை 5.00 முதல் 9.00 மணி வரையும் சேவிக்க முடியும். மேலும், பத்ரிநாத், காலபைரவர், மஹாதேவர், ஹனுமார் முதலியோரின் அழகான மூர்த்திகளும் உள்ளன.
அருகிலுள்ள விமானதளம் : டேராடூன்
அருகிலுள்ள ரயில் நிலையம் : ரிஷிகேஷ்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு