ஸ்ரீ பரமபத நாதன், திருப்பரமபதம்
திருத்தல இருப்பிடம் : திருப்பரமபதம், திருநாடு, வைகுண்டம், பரம் என்றும் அழைப்பர். இப்வூவுலகில் இல்லாத இரண்டாவது தலம் இது.
மூலவர் : பரமபதநாத், பரவாஸதேவன்
தாயார் : பெரிய பிராட்டி
தீர்த்தம் : விரஜா நதி, அயிரமதி புஷ்கரிணி
விமானம் : அநந்தாங்க விமானம்
மங்களாசாசனம் : பெரியாழ்வார் - 4 பாசுரங்கள்
ஆண்டாள் - 1 பாசுரம்
திருமழிசையாழ்வார் - 2 பாசுரங்கள்
திருப்பாணாழ்வார் - 1 பாசுரம்
திருமங்கையாழ்வார் - 1 பாசுரம்
பொய்கையாழ்வார் - 2 பாசுரங்கள்
பேயாழ்வார் - 1 பாசுரம்
நம்மாழ்வார் - 24 பாசுரங்கள்
தலச் சிறப்புகள் : மூலவர் வீற்றிருந்த கோலத்தில் தெற்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். பலபிறப்பு பிறந்து பெரும் துன்பமுற்று இழிவுபட்டு வாழ்ந்தேன். இனிநான் அடைய வேண்டியது பரமபதம் மட்டுமே, எனக்கு முக்தி வீடாகிய வைகுந்தத்தை கொடு, அதுவே இனி நான் அடையவேண்டிய நாடாகும் என்று திருமழிசையாழ்வார் முக்தி வீடான பரமபதம் பற்றிக் கூறுகிறார்.
இங்கே சென்றவர் யாரும் திரும்புவதில்லையாகையால், “தெளிவிசும்பு திருநாடு” “நலமந்தமில்லாதோர் நாடு” “சுடரொளியாய் நின்ற தன்னுடைய சோதி” என்றெல்லாம் ஆழ்வார்கள் வர்ணித்திருப்பதே நமக்குச் சான்று. ஸ்ரீமந்ராமானுஜர் தமது “வேதார்த்த ஸங்க்ரஹம்” என்ற க்ரந்த்தத்தில் இதனை வெகு விரிவாகவும் நேரில் பார்ப்பது போலவும் வர்ணித்துள்ளார். 106 திவ்ய தேசங்களையும் சேவித்த பக்தர்களை, அவர்கள் பரமபதித்தபின், பகவானே இந்தத் திவ்யதேசத்தை அவர்களுடைய நிரந்தர வாஸஸ்தலமாக்கி மகிழ்விப்பான் என்பது பெரியோர் வாக்கு.
திருப்பரமபதம் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். வைணவ அடியவர்கள் கடைசி நிலையாகிய வீடுபேறு அல்லது மோட்சம் அல்லது முக்தி என்ற நிலை எய்தி செல்லும் இடமாகும். 8 ஆழ்வார்களால் 36 பாசுரங்களில் பாடல் பெற்ற தலமாகும். வைணவ அடியார்கட்கு, இறைவனன்றி தமக்குப் புகலிடம் யாதுமில்லை என்றெண்ணி அடியவர்கட்கு மோட்சத்தை நல்கும் இந்தப் பரமபதமே வைணவர்களின் கடைசி இலக்காகும். இதனை திருநாடு என ஆழ்வார் பாசுரங்களில் குறிக்கின்றனர். திருநாட்டைப் பற்றிப் புராணங்களாலும் ஆழ்வார் பாசுரங்களாலும் உணரலாம். இராமானுஜர் இயற்றிய வேதாந்த சங்கிரஹம் என்னும் நூல் திருநாட்டைப் பற்றித் தெளிவாகவும், நேரில் பார்ப்பது போலவும் விளக்கிப் பேசுகிறது. இராமானுஜர் இயற்றிய கத்யத்ரயத்தில் ஒன்றான வைகுண்டகத்யத்தில் பரமபத வர்ணனை சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. இராமானுஜரின் வரலாற்றைப் பேசும் “ப்ரபந்நாம்ருத தர்ப்பணம்” என்னும் நூலில் பரமபதம் விளக்கப்பட்டுள்ளது.
வைணவ சித்தாந்தங்களின் படி இங்கு செல்லும் ஜீவாத்மாக்கள் நித்யசூரிகள் ஆகின்றன. அதாவது எப்போதும் அழிவற்ற சக்தியைப் பெறுகின்றன. இங்கு இறைவனைப் போலவே வடிவம் அவர்கட்கும் உண்டாகிறது. ஆயினும் இறைவனோடு இரண்டறக் கலக்காமல் உடனிருந்து தொண்டு செய்து கொண்டு எப்போதும் பல்லாண்டிசைத்துக் கொண்டிருப்பர். நித்ய சூரியாகி இங்கு சென்றுவிட்டால் படைப்புகளும், பிரபஞ்சங்களும் என்னவென்று தெளிவாகத் தெரிவதால் இதற்கு தெளிவிசும்புத் திருநாடு என்று பெயர்.இதற்குமேல் அறிவதற்கு ஒன்றுமில்லையாதலால் இதற்கு எல்லைநிலம் என்பது பொருள். இங்கு அடையும் இன்பத்திற்கும் நலத்திற்கும் முடிவே இல்லாததால் நலமந்தமில்லதோர் நாடு என்பதும் இதற்குப் பெயர். இங்கு கிடைக்கும் இன்பம் “அந்தமில் பேரின்பம்” என்று நம்மாழ்வார் பாடுகிறார். வாசுதேவன் வாழும்படியான இருப்பிடமாதலால் வைகுண்டம் என்றும் பெயருண்டு