காய்சினவேந்தப் பெருமாள், திருப்புளியங்குடி
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.
மூலவர் : காய்சினவேந்தப் பெருமாள், புஜங்க சயனம்
உற்சவர் : எம் இடர் களைவான்
தாயார் : மலர் மகள் நாச்சியார், நிலா மகள் நாச்சியார், புளிங்குடி நாச்சியார்
உற்சவத் தாயார் : புளியங்குடிவல்லி
தல தீர்த்தம் : வருணநீருதி தீர்த்தம்
விமானம் : வேதாஸார விமானம்
மங்களாசாசனம் : நம்மாழ்வார் - 1 பாசுரம்
தலச் சிறப்புகள் : இத்தலம் நவதிருப்பதிகளில் ஒன்றாகும். மூலவர் புஜங்க சயனத்தில் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். பெருமாளின் பாதங்களை வெளிப்பிரகாரத்திலிருந்து ஒரு சன்னல் வழியாகப் பார்க்க வேண்டும். இங்கு பகவானை நெருப்பு என்று கருதுவதால் சடாரி சாய்ப்பதில்லை, மற்றும் இங்கு கருட சேவை விசேஷம்.
மகாவிஷ்ணு இலக்குமியுடன் வைகுண்டத்திலிருந்து, இப்பூவுலகில் தாமிரபரணி நதிக்கரையில் தனித்திருக்க விரும்பி இங்கு வந்தும் இலக்குமி தேவியுடன் இருக்கிறாரே என்று எண்ணி பொறாமை கொண்ட பூமாதேவி, சினங்கொண்டு பாதாள லோகம் சென்றாள், அதனால் உலகம் இருளடைந்தது. தேவர்கள் இருள் விலக வேண்டும் எனப் பெருமாளை வேண்ட அவரும் பாதாள லோகத்தில் உள்ள பூமாதேவியைச் சந்தித்து இருவரும் தமக்குச் சமமே என உபதேசிக்க பின்பு இருவரும் சேர்ந்தே இவ்விடத்தில் காட்சி தந்தனர். அதனால் பெருமாள், பூமிபாலர் என்றும், காசினி வேந்தர் என்றும் பெயர் பெற்றார். அந்தணன் யக்ஞசர்மா தனது பத்தினியிடம் தனித்திருக்கையில் வசிட்டரின் மகனான சக்தியென்பவர் தமது ரிஷிகள் புடைசூழ அங்கு வந்தனர். கண்டும் காணாததுபோல இருந்த அந்தணணை ஓர் அரக்கனாகும்படி சக்தி சபிக்க தன் நிலை மாறிய அந்தணன் அம்முனிவர்களின் பாதத்தில் வீழ்ந்து பாவ விமோசனம் வேண்டினார். இந்திரனின் யாகத்தை நீ அழிக்க முற்படும் போது பெருமாளின் கதையால் அடிபட்டு சாபவிமோசனம் பெறுவாய் என்றனர். அந்த அந்தணன் சாப விமோசனம் அடைந்தது இத்தலத்தில் தான்.
வரகுணமங்கையிலிருந்து ஒரு மைல் தொலைவில் புதன் தலமுமான இக்கோவில் அமைந்துள்ளது. மூலவர் பூமிபாலகர் திருமால் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட நிலையில் காட்சி தருகிறார். சயனப் பெருமாளின் திருப்பாத தரிசனத்தை மூலவர் சன்னதியைச் சுற்றி வரும்போது உள்ள சிறிய ஜன்னல் வழியாகத் தரிசிக்கலாம். லக்ஷ்மி தேவியும் பூமாதேவியும் பெரிய திருவுருவங்களாக பெருமாளின் திருப்பாதத்தின் அருகில் அமர்ந்த கோலத்தில் உள்ளனர். இத்தகைய பெரிய திருமேனியைக் கொண்ட பெருமாளுக்கு எண்ணைகாப்பு சாத்துவதற்கு 128 படி எண்ணெய் தேவைப்படுகிறது. பெருமாளின் நாபிக் கமலத்தில் இருந்து தாமரைக்கொடி சுவற்றில் பிரம்மன் அமர்ந்திருக்கும் தாமைரையுடன் சேரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
தல வரலாறு : ஒரு சமயம் ஸ்ரீ லக்ஷ்மி தேவியுடன் திருமால், கருடன் மேலேறி இப்பூவுலகைச் சுற்றி வரும்போது தாமிரபரணி நதிக்கரையில் அழகிய மணற்பரப்பைக் கண்டு மகிழ்ந்து அங்கேயே தங்கி விட்டார். பூலோகம் வந்தும் தன்னை கவனிக்கவில்லையே என்று மனம் வருந்திய பூமாதேவி, லக்ஷ்மி தேவி மீது பொறாமைக் கொண்ட பூமாதேவி, கோபித்துக் கொண்டு பாதாள லோகம் சென்று விட்டாள். இதனால் உலகம் தன் நிலை மாறி வறட்சி அடைந்தது. அனைத்து ஜீவராசிகளும் துன்புற்றனர். இதனைக்கண்ட தேவர்கள் திருமாலிடம் வந்து முறையிட்டனர்.
தன்னை வந்து சந்தித்த தேவர்களை சமாதானம் செய்துவிட்டு பின் லக்ஷ்மி தேவியுடன் பாதாள லோகம் சென்று பூமாதேவியை தேற்றி, பூமாதேவியின் மன வருத்தத்தைப் போக்கி மீண்டும் பூலோகம் அழைத்து வந்தனர். இவ்வாறாக பூமாதேவியை அழைத்து வந்து பூலோகம் காத்ததால் பூமிபாலகர் என்ற நாமத்துடன் நமக்கெல்லாம் அருள்பாலிக்கிறார். திருப்புளியங்குடியில் மண்மகள், மலர்மகள் இருவருடனும் பூமிபாலகராய் இங்கு எழுந்தருளியுள்ளார்.
இமயமமலையில் ஒரு முனிவரும் அவரது மனைவியும் மானுருவில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது இந்திரன், மானுருவில் இருந்த முனிவரை தனது ஆயுதத்தால் கொன்று பிரம்மஹத்தி தோஷத்திற்கு ஆளானான். வியாழ பகவானின் ஆலோசனைப்படி, இந்திரன் இத்தலத்திற்கு வந்து பூமிபாலகனை வணங்கி வேண்டி இத்தல தீர்த்தத்தில் நீராடி தன் தோஷம் நீங்கப் பெற்றான். அது முதல் இத்தீர்த்தம் இந்திர தீர்த்தம் என பெயர் கொண்டது. தனது தோஷம் நீங்கிய மகிழ்ச்சியில் இந்திரன் இந்த புண்ணிய தீர்த்தக் கரையில் யாகம் ஒன்றினை நடத்த நினைத்து அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தான். அந்த நேரத்தில், இந்திரன் நடத்தும் யாகத்தினை தடுக்கும் நோக்குடன் அரக்கன் ஒருவன் அங்கு வந்து இந்திரனுக்கு பல்வேறு இடையூறுகளைச் செய்தான். அந்த அரக்கனால் இன்னலுக்கு ஆளான இந்திரன் பூமிபாலகரை மனதார நினைத்து மனமுருக வேண்டி நின்றான். இந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க பூமிபாலகரும் அந்த அரக்கனைக் கொன்றார். அதன்பிறகு அந்த அரக்கன் தனது சுய உருவத்தைப் அடைந்தான். அப்போது பூமிபாலகர், அவனை நோக்கி, நீ யார் என்று கேட்க நான் முன்ஜென்மத்தில் யக்ஞ சர்மா என்ற பெயரில் ஒரு பிராமணனாகப் பிறந்தேன். நான் எனது இல்லத்தில், வசிஷ்ட புத்திரர்களால் செய்யப்பட்ட யாகத்திற்கு உரிய மரியாதை செய்யாமல் அவர்களை அவமதித்ததன் காரணமாக, அவர்கள் என்னை கொடிய அரக்கனாக ஆகும்படி சாபமிட்டனர். நான் என் தவறை உணர்ந்து அவர்களிடம் மன்னிப்பு கேட்டு சாப விமோசனம் கூறும்படி கேட்டேன். அதற்கு அவர்கள் பூலோகத்தில் பொருநை ஆற்றின் நதிக் கரையோரமாக இந்திரன் தனது பாவத்தைப் போக்கிக் கொள்ள யாகம் மேற்கொள்வான். அந்த சமயம் நீ போய் யாகத்தை நடத்த விடாமல் தடுக்கும் நேரத்தில் திருமால் உன்னை கதையால் தாக்குவார். அன்றைய நாளில் இருந்து உன் பழைய உருவம் பெற்று நீ வாழ்வாய்எனக் கூறினார். அரக்கனும் தன் நிஜ உருபெற்று மகிழ்ச்சியுடன் சென்றபின் இந்திரன் தான் செய்ய நினைத்த சதிபதிவேள்வியினை சிறப்புடன் செய்து முடித்தான்.
காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரையும், மதியம் 1.00 மணி முதல் இரவு 6.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை, தூத்துக்குடி
அருகிலுள்ள ரயில் நிலையம் : ஸ்ரீவைகுண்டம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை