ஆதிஜெகநாதர், திருப்புல்லாணி
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள இராமநாதபுரம் மாவட்டத்தின் தலைநகரான இராமநாதபுரத்திலிருந்து தெற்குத் திசையில் 10 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கிருந்து 5 கி..மீ தொலைவில் “ஆதிசேது” என்ற சமுத்திர ஸ்நான தீர்த்தம் இருக்கிறது.
மூலவர் : கல்யாண ஜகந்நாதன்
தாயார் : கல்யாணவல்லி, பத்மாஸநி
தீர்த்தம் : ஹேம தீர்த்தம், சக்ர தீர்த்தம், ரத்னாகர ஜமுத்ரம்
விமானம் : கல்யாண விமானம்
மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் -21 பாசுரங்கள்
தலச் சிறப்புகள்: இங்கு மூலவர் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். இந்த கோவில் தீர்த்தம், மூர்த்தி, தலம் என்ற மூன்று சிறப்புகளுடன் புராணப் புகழ் பெற்றும், சரித்திர புகழுடன் சிறந்த திவ்ய தேசமாக விளங்குகிறது.
இராவணனைக் கொன்று சீதையை மீட்டுவர, இராமபிரான் வானர சேனையுடன் இலங்கைக்கு செல்வதற்காக வருணனை பிரார்தித்து கடலைக் கடக்க வழி கேட்க 7 நாட்கள் தர்ப்பைப் புல்லில் கிடந்த தலமாதலால் இத்தலம் புல்லாணை என்றும், திருப்புல்லாணி என்றும் வழங்கப்பட்டது. இராமனே இப்பெருமாளை பூசித்துள்ளார். ராமன் இங்கே அணை கட்ட வந்தபொழுது இங்கே தவம் செய்த கண்வருக்கு திவ்யமான வில்லைக் கொடுத்தபடியால் ‘தெய்வச் சிலையார்’ என்ற நாமம் உண்டானதாக ஐதீகம். ஆதிஸேது என்று வைஷ்ணவர்கள் கொண்டாடும் சமுத்திரஸ்நான கட்டம் இங்கிருந்து 3 கி.மீ தொலைவில் இருக்கிறது.
புல்லவர், கண்ணுவர், காலவர் என்ற மூன்று மகரிஷிகளுக்காக பெருமாள் வைகுண்டத்திலிருந்து இங்கு எழுந்தருளி அரசமரமாக காட்சியளிக்க அதையே நாராயணன் வடிவமாக தியானித்தனர். அரசமரத்தில் லட்சுமி உறைகின்றாள் எனவும், அது இங்கு அசுவத்த விருட்சமாகவும், இம்மரத்தடியில் நாகப் பிரதிஷ்டை செய்தால் புத்திரப் பேறு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இராமன் இலங்கையினின்று திரும்பி இங்கு, பட்டாபிஷேகம் செய்து கொண்டதால் பட்டாபிராமன் எனவும் திருநாமம் பெற்றார். இராமனின் பாதம்பட்ட தலம். சேது மேன்மை பெற்றது. கடலுக்குள் இராமன் கட்டிய கல்அணை பார்த்தால் சகல பாவங்களும் விலகும்.
அருகிலுள்ள தேவிபட்டிணத்தில், ஸ்ரீராமன் கடலினுள் (கடற்கரையிலிருந்து 50 அடி தொலைவில்) பிரதிஷ்டை செய்து பூஜித்த நவகிரகத்திற்கு நவகிரகசாந்தி செய்து, சர்ப்பசாந்தி செய்து தர்ப்பசயனரை சேவித்து பால்பாயாசம் சாப்பிட்டு ஓர் இரவு தங்கி வந்தால் புத்திர பேறு ஏற்படும் என்று புராணவரலாறு கூறுகிறது.
விஷ்ணுவின் அவ தாரமான ராமபிரான் ஜெகநாதனை வணங்கி அவரால் கொடுக்கப்பட்ட வில்லைப் பெற்று ராவண சம்ஹாரம் செய்து சீதா பிராட்டியை மீட்க அனுக்கிரகிக்கப்பட்ட தலமாகவும், ராமபிரானை ராவணன் தம்பி விபீஷணன் சரண் அடைந்து இலங்கைக்கு அரசனாக முடிசூடப்பட்ட தலமாகவும் விளங்குகிறது. கடற்கடவுள் தன் பத்தினியோடு ராகவனை சரணடைந்து தன் குற்றம் மன்னிக்கப்பட்ட இடமாகவும், சுகசாரணர் களுக்கு அபயம் அளித்து, புல்லவர், கண்ணுவர் போன்ற முனிவர்கள் ஆதிஜெகநாதரை சரணடைந்து பரமபதம் பெற்ற தலமாகவும் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவில் விளங்குகிறது.
ஆகவே, இந்த தலம் சராணாகதி தருமத்தை அனுஷ்டிக்கக்கூடிய புண்ணிய ஸ்தலமாக திகழ்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இத்த லத்திலுள்ள மூர்த்தியை வணங்கி பகவான் பாதம் அடியில் அர்ச்சாரூபியாய் அமர பாக்கியம் பெற்ற பரிசுத்தமான அரசமர நிழலில் நாகப்பிரதிஷ்டை செய்து, நிவேதனம் செய்த பாயாசத்தை அருந்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதன் காரணமாக ஏராளமான தம்பதியர்கள் பெருமாளை தரிசிக்க வருகின்றனர்.
இத்தலத்தில் வழிபட்டால் கிரக தோஷங்கள் நீங்கும். தாயாருக்கு புடவை சாத்துதலையும், பெருமாள் சாமிக்கு துளசி மாலை அணிவித்தலையும் பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகின்றனர். ராமர் சயன நிலையில் இருப்பது இக்கோவிலின் சிறப்பு அம்சம். எங்கும் காண இயலாத விசேஷ அசுவத்தமும் (அரசமரம்), நாகத்தின் மீது நடமாடும் சந்தானக்கண்ணனும், சிற்பக்கலையின் களஞ்சியமாக கிரீடம், பட்டாக்கத்தியுடன் காட்சியளிக்கும் தர்ப்பசயணன் ராமனும், ரசாயண சத்துக்கள் நிரம்பிய சக்கர தீர்த்தமும் இத்தலத்தின் மாபெரும் சிறப்புக்கு சான்றுகளாய் திகழ்கின்றன.
கோவில் தல விருட்சமாக உள்ள அரச மரம் சாமி சன்னதியின் மேற்கில், வெளிப் பிரகாரத்தில் நாய்ச்சியார் சன்னதிக்கு பின் பக்கம் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. ஆற்று நீர், குளத்து நீர், கடல் நீர் என மூன்று நீர்ப் பெருமை பெற்ற தலமாக திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் சாமி கோவில் விளங்கி வருகிறது. பழங்கால சிற்பக்கலையின் நுணுக்கங்களை கோவிலுக்குள் எங்கும் காண முடிகிறது. பெருமாள் சன்னதிக்கும் தாயார் சன்னதிக்கும் எதிரில் வெளிப்பக்கம் பக்தி உலாவு மண்டபத்தில் காணப்படும் சேதுபதிகளின் வண்ண வடிவங்கள், தானீகர்களின் பதுமைகளும் கண்ணைக் கவரும் வகையில் உள்ளது. தர்ப்பசயன ராமன் திருமேனி அமைப்பும், அவருடைய நாபீ கமலத் தண்டின் அமைப்பும் பார்க்க பார்க்க பக்தர்களின் மனதை பரவசப்படுத்தும்.
திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் கோவிலில் ஆதி ஜெகநாதருக்கு பங்குனி மாதத்திலும், ராமருக்கு சித்திரை மாதத்திலும் பிரம்மோற்சவ விழா மிகவும் கோலாகலமாக நடைபெறும். இந்த விழாக்களின்போது ஜெகநாதர், ராமர் இருவரும் கருட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். ஜெகநாதர் பங்குனி உத்திரத்தன்றும், சித்ரா பவுர்ணமியன்று ராமரும் தேரில் எழுந்தருளுவது கண் கொள்ளாக் காட்சியாகும். வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, பொங்கல், தீபாவளி மற்றும் வாரத்தின் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். கடலரசனுக்கு மன்னிப்பு வழங்கிய இடம்
ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு வெளியில் விளங்கும் 22 தீர்த்தங்களுள் இத்திருத்தலத்தில் உள்ள தீர்த்தமும் அடங்கும். ஆதி சேது என்னும் இடம் இங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. ராமேஸ்வரத்தில், தீர்த்தங்கள் வகையில் கூறப்படும் தேவிபட்டணம் என்பது இத்தலத்தின் அருகில் உள்ளது. இங்குக் கடலில் நவக்கிரகம் உள்ளது. மக்கள் அதனை வழிபட்டுப் புத்திரப் பேறு அடையும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள். விபீஷணன் இங்குதான் சரண் அடைந்தான். இலங்கை வேந்தனாக முடி சூட்டப்பட்டதும் இங்குதான். புத்திரப்பேறு இல்லாதவர்கள் நாகப்பிரதிஷ்டை செய்து இங்கு தரப்படும் பால் பாயாசத்தை அருந்தினால் மலட்டுக்குறை நீங்கும். திருமணமாகி தாம்பத்திய வாழ்க்கையில் சந்தோஷம் பெற இயலாதவர்கள் ஆண்- வாரிசு இல்லாதவர்கள், பிரம்மகத்தி தோஷம் உடையவர்கள் அனைவரும் இத்தலத்திற்கு வந்து நாக பிரதிஷ்டை செய்து கோவில் பால் பாயாசத்தை உண்டு, சர்ப்பசாந்தி ஹோமம் செய்தால் முன் வினைப்பாவம் விலகும்.
பங்குனி மாதத்தில் ஆதி ஜெகநாத பெருமாள் சாமி பிரம்மோத்சவம், சித்திரையில் பட்டாபிராமன் பிரம்மோத்சவம், ஆடியில் சூடிக்கொடுத்த நாச்சியார் உற்சவம், ஆவணியில் திருப்பு வித்திரோத்சவம், மார்கழியில் பகல்பத்து, ராப்பத்து உற்சவங்கள், புரட்டாசியில் தாயார் நவராத்திரி உற்சவம், விஜயதசமி ஆகிய உற்சவங்கள் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. மனிதனுக்கு பிரச்சினைகள் ஏற்படும் போது தெய்வங்களை வணங்கி பிரார்த்தனை செய்வது என்பது மரபு.
தினமும் காலை 7.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 12.15 மணி வரை நடை திறந்திருக்கும். அதன் பின்னர் நடை சாத்தப்பட்டு பிற்பகல் 3.30 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். இரவு 8.00 மணிக்கு நடை சாத்தப்படும். புரட்டாசி சனிக்கிழமைகளில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1.00 மணி வரை நடை திறந்திருக்கும். பின்னர் நடை சாத்தப்பட்டு பிற்பகல் 3.30 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8.30 மணி வரை திறந்தே இருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : இராமநாதபுரம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை