கந்தசுவாமி கோவில், மாவிட்டபுரம்
திருத்தல அமைவிடம் : இலங்கையில் காணப்படும் இந்து திருத்தலங்களில் மிகவும் பழமையும் தொன்மையும் வாய்ந்த திருத்தலமாக மாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் காணப்படுகிறது. யாழ்பாணத்தில் இருந்து 15 கி.மீ தூரத்திற்கு அப்பால் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
மூலவர் : வேல்
தீர்த்தம் : கீரிமலை கண்டகி தீர்த்தம்
தல சிறப்புகள் : தேவாரப் பதிகம் பெற்ற திருகோணமலை, திருக்கேதீச்சரம் திருப்புகழ் பாடப்பெற்ற கதிரமலை ஆகிய தொன்மை வாய்ந்த திருத்தலங்கள் உள்ளன. யாழ்ப்பாணத்தின் வடபால் கடல் மருங்கில் “கண்டகி” என் முற்காலத்தே அழைக்கப்பெற்ற கீரிமலை புனித தீர்த்தம் உண்டு. அதில் நீராடி பிணிகள் பல நீக்கினோர் பலர். அத்தீர்த்தத்து மருங்கில் கோயில் கொண்டெழுந்து அருள்பாலிக்கின்றார் திருத்தம்பலேசுவரி சமேத திருத்தம்பலேஸ்வரப்பெருமான். மாருதபுரவீகவல்லி வழிபட்ட வேல் இன்றும் கூட மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டு வழிபடப்படுவதைக் காணலாம்.
தல வரலாறு : 7ம் நூற்றாண்டில் இந்தியாவில் தமிழ் நாட்டில் மதுரையை ஆட்சி புரிந்த உக்கிரப்பெருவழுதி எனும் சோழ மன்னனின் மகள் மாருதபுரவீகவல்லி குதிரை முகத்துடன் காணப்பட்டதுடன் குண்ம நோயினாலும் வருந்தினாள். எல்லா வகையான வைத்தியர்களும் வைத்தியம் செய்தும் இவளுடைய நோய் தீரவில்லை. சாந்தலிங்க முனிவருடைய வழிக் காட்டலின் கீழ் இவ்விளவரசி தென்னிந்தியாவில் இருந்து கீரிமலை வந்து நீராடி கந்தசாமி ஆலயத்தையும் வழிப்பட்டு வந்தார். இந்நிலையில் இவருடைய நோய் நீங்கியதுடன் குதிரை முகமும் நீங்கி மகா பேரழகு பெற்று காணப்பட்டாள். இக்காரணத்தால் இவ்வூருக்கு மாவிட்டபுரம் (மா (குதிரை) + விட்ட + புரம்) என்ற பெயர் ஏற்பட்டது எனக் கருதப்படுகின்றது. திசையுக்கிர சோழனின் மகள் மாருதப்புரவீகவல்லி என்னும் அரசிளங்குமாரி சோழநாட்டினின்றும் இங்கு அவள் தங்கியிருந்த இடம் “குமாரத்தி பள்ளம்” என இன்றும் வழங்கப்படுகின்றது. எவ்விடத்தில் அவள் குதிரை முகம் நீங்கியதோ அவ்விடம் இன்று மாவிட்டபுரம் என அழைக்கப்படுகின்றது. சோழநாட்டு இளவரசி தன் குதிரைமுகம் நீங்கியதன் கைமாறாக மதுரையில் இருந்து ஆலயத்தை நிர்மாணிப்பதற்காக சிற்பாசிரியர்களையும் பொருட்களையும் கொண்டுவந்து மாவிட்டப்புரம் கந்தசுவாமி ஆலயத்தை நிர்மாணித்தார். இந்த ஆலயம் பல நூறு வருடங்கள் பழமை வாய்ந்ததாகும். கும்பாபிஷேகம் கி.பி 789ல் நிகழ்ந்ததாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.
போர்த்துகேயர் இலங்கை மீது படையெடுத்து இலங்கையைக் கைப்பற்றிய வேளையில், மத மாற்றும் முகமாக இந்து ஆலயங்களை அழித்து தேவாலயங்களை நிர்மாணித்தார்கள். அப்போது மாவிட்டபுரம் கந்தசுவாமிகோவிலும் பகுதியாகச் சேதப்படுத்தப்பட்டது. அவ்வேளையில் ஆலயத்தில் இருந்த விலையுயர்ந்த பொருட்களை மக்கள் கிணறு ஒன்றினுள் மறைத்து வைத்தார்கள். ஆனால் மாருதபுரவீகவல்லியால் நிருமாணிக்கப்பட்ட மூலஸ்தானமும் மூலவர் கந்தசுவாமியும் இட்டவரை அவ்வாறே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொடியேற்ற திருவிழா தினத்தன்று கொடியேற்றத்திற்கு பதிலாக காம்போற்சவ திருவிழாக்கள் 25 நாட்கள் இடம்பெறுகின்றன. திருவிழாக்கள் காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.00 மணிவரை சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள், ஆராதனைகள், பிராத்தனைகள், திருமுறை ஓதுதல், மகேஸ்வர பூஜை என்பன இடம்பெறுகின்றன. மேலும் முக்கிய நிகழ்வாக அருணகிரி நாதரின் திருப்புகழ் கானாமிதங்களோடு சண்முகார்ச்சனைகளும் இடம்பெறுகின்றன. ஆலயத்தே நித்திய பூசைகளும், வெள்ளிக்கிழமை, கார்த்திகை நட்சத்திரம் பொருந்திய நாள் ஆகிய காலங்களில் விசேட பூசைகளும், வருடந்தோறும் ஆடி அமாவாசையன்று 25ம் திருவிழாவாகிய தீர்த்தத்திருவிழா அமைய 25 திருவிழாக்களும் நடைபெற்று வருகின்றன.
அருகிலுள்ள விமான நிலையம் : யாழ்ப்பாணம் ( பலாலி விமான நிலையம் )
அருகிலுள்ள ரயில் நிலையம் : யாழ்ப்பாணம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு