வேலாயுத சுவாமி கோயில், உகந்தை
திருத்தல அமைவிடம் : இலங்கையின் உகந்தை அம்பாறை மாவட்டத்தில் கடற்கரை மற்றும் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமம். வேலாயுத சுவாமி கோயில் கதிர்காமம் செல்லும் யாத்திரிகர்கள் வழியில் இங்குள்ள தங்கிச் செல்லும் முக்கியமான கோவிலாகும். உகந்தை மலை வேலாயுத சுவாமி கோயில் இலங்கையில் புகழ் பெற்ற இந்துக் கோயில்களுள் முக்கியமானது. கிழக்கு மாகாணத்தில் இலங்கைத் தலைநகரமான கொழும்பிலிருந்து 320 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
மூலவர் : வேலாயுத சுவாமி
தீர்த்தம் : ஏழு நீர்ச்சுனைகள்
தல விருட்சம் : வெள்ளை நாவல் மரம்.
தல சிறப்புகள் : உகந்தை முருகன் ஆலயம், திருப்படைக்கோவிலாக விளங்கியமைக்கான போதிய சான்றுகள் கிடைக்கவில்லை. எனினும், மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் இக்கோவிலின் வரலாற்றைக் குறிபிடுவதாலும், கதிர்காமப் பாதயாத்திரிகரின் முக்கிய கோயிலாக இது விளங்குவதாலும், திரைமறைவில் வழிபடப்படும் வேலை மூலவராகக் கொண்டிருப்பதாலும் இது புராதனமான கோயிலாகக் கருதப்படுகின்றது. ஆலயம் அருகேயுள்ள இருகுன்றுகளில் வள்ளியம்மனும், வேற்சாமியும் கோயில் கொண்டுள்ளனர். இவ்விரு குன்றங்களிலும் அமைந்துள்ள ஏழு நீர்ச்சுனைகளில் மூழ்கி நீராடினால் புண்ணியம் என நம்பப்படுகிறது.மலையடிவாரத்தில், தலவிருட்சமருகே பிள்ளையாருக்கு ஒரு திருமுன் உண்டு. கோவிலின் பலிபீடத்திற்கு முன்னே மயிலுக்குப் பதிலாக மூசிகமே தென்படுகின்றது.
குன்றம் எறிந்த குமரவேள், அவுணர்குல மன்னனை அழித்த பின்னர் எறிந்த வேலானது ஆறு பொறிகளாகியது. அவற்றுள் முதன்மையானது இம்மலையில் தங்கிற்று. முருகப்பெருமான் போருக்கு முன்னரும் பின்னரும் தங்கியிருக்க உகந்த பிரதேசமாகக் கருதி தங்கியிருந்தமையினால் இப்பெயர் பெற்றது எனலாம். ஈழத்து ஆறுபடைவீடுகளான திருப்படைகோயில்களுள் இதுவும் ஒன்றாகும்.
தல வரலாறு : கொத்துப்பந்தரின் கீழ் முத்துக்குமரன் வீற்றிருந்த இத்தலத்தில், யாழ்ப்பாணத்து மார்க்கண்டு என்னும் வணிகர் 1885ஆம் ஆண்டு புதிய கோயில் ஒன்றை நிர்மாணித்ததாகவும் வரலாறு கூறுகின்றது. அந்நேரம் இத்திருத்தலத்தின் வண்ணக்கராக சேகர ஸ்ரீ வர்ணதிசாநாயக்கா என்றும் முதியன்சே பண்டார மகாத்மியா என்றும் அழைக்கப்பட்ட ஒருவரை நியமித்தார்கள். இவர்தான் இக்கோயிலின் முதலாவது வண்ணக்கர் என்ற இடத்தை வகித்தார். பின்னர் இவருடைய பரம்பரையினரே இன்றுவரை வண்ணக்கராகக் கடமை புரிகின்றனர். கதிர்காம விழாக் காலத்தையொட்டியே இங்கும் திருவிழா முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கதிர்காமம் செல்லும் பக்தர்கள் இங்கு தங்கிச் செல்வது வழக்கம் ஆகும்.
திருவிழாக்காலங்களில், இரவு திருவீதியுலாவைத் தொடர்ந்து, முருகப்பெருமான் திருட்டுத்தனமாக வள்ளியம்மனைச் சந்திக்கும் "மலைத்திருவிழா" நடப்பதும், குன்றிலிருந்து இறங்கும்போது, அண்ணனுக்கு வெட்கப்பட்டு தன் ஆலயம் நோக்கி ஓடுவதும், இங்குள்ள சுவாரசியம். ஈழத்தைப் பொறுத்தவரை சிங்களவரும் தமிழரும் முருகப் பெருமானைத் தரிசிக்க ஒன்றுகூடும் இடங்களுள் கதிர்காமத்திற்கு அடுத்ததாக உகந்தை ஸ்ரீ முருகன் ஆலயத்தைக் குறிப்பிடலாம்.
அருகிலுள்ள விமான நிலையம் : அம்பாறை விமான நிலையம்
அருகிலுள்ள ரயில் நிலையம் : மட்டக்களப்பு
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு