வயலூர்,சுப்பிரமணிய சுவாமி கோயில்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், திருச்சிராப்பள்ளி மாநகரிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது. கௌமார வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக முருகப் பெருமானின் அடியாரான அருணகிரிநாதர் பாடிய தலமாகவும் திருமுருக கிருபானந்த வாரியார் போற்றிய தலமாகவும் இது விளங்குகிறது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து நேரடியாக வயலூருக்கு பஸ் வசதி உள்ளது.
சுவாமி : சுப்பிரமணிய சுவாமி
அம்பாள் : வள்ளி,தெய்வானை
தீர்த்தம் : சக்தி தீர்த்தம்
தலவிருட்சம் : வன்னி மரம்
தலச் சிறப்புக்கள் : வயலூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி ஒரு முகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் வள்ளி தெய்வானையுடன் காட்சி அளிக்கின்றார். மயில் வாகனம் அம்பாள் தெய்வானையின் பக்கம் திரும்பியுள்ளது சிறப்பம்சம் ஆகும். மேலும் இத்தலத்தில் முத்துக்குமார சுவாமி, தக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீ அருணகிரிநாதர், மஹாலெஷ்மி, விஷ்ணுதுர்க்கை, சண்டேசுவரர் மூர்த்தங்களுக்கு தனி சன்னதிகள் உள்ளன. இத்தலத்தில் உள்ள உற்சவ மூர்த்திகளில், ஸ்ரீ முத்துக்குமார சுவாமி, சதுர தாண்டவ நடராஜர் மூர்த்தங்கள் கலை நயம் மிக்கவை. ஆதிநாதர் என்னும் மூலவரை மறப்பிலி நாதர் எனவும் வழங்குகின்றனர். அக்னி வழிபட்டமையால் அக்னீஸ்வரன் என்றும் வழங்கலானார். வடமுகம் நோக்கி அமர்ந்திருக்கும் ஆதிநாயகி இத்தலத்தின் தனிச்சிறப்பு. வயலூரை முத்தித் தலம் எனப் போற்றுவர்.
இங்கு தாண்டவக் கோலத்தில் இருப்பினும், உற்சவரின் காலடியில் முயலகன் உருவகம் கிடையாது. தில்லை அம்பல நடராசனைப் போலன்றி, ஆடிய பாதனார் இத்தலத்தில் அமைதியான தோற்றம் கொண்டு காணப்படுகிறார். தெய்வானை, வள்ளி ஆகிய இருவருடனும் ஆதி நாதரையும் ஆதி நாதியையும் முருகப் பெருமான் பூசிப்பது வயலூரின் தனிச் சிறப்பு. இங்குள்ள சக்தி தீர்த்தம் முருகப் பெருமான் தமது வேலால் குத்தி உருவாக்கியது எனக் கூறுவர்.
அருணகிரிநாதருக்கு முருகபெருமான் காட்சி தந்து அவருடைய நாவிலே தன்வேலினால் ஓம் என்று எழுதி திருப்புகழ் பாட அருளிய தலம். அருணகிரிநாதரை திருவண்ணாமலையில் தடுத்தாட்கொண்ட எம்பிரான் முருகப் பெருமான் வயலூருக்கு அவரை அழைத்து அதன் சிறப்புக்களைப் பாமாலையாகத் தொடுக்க வைத்தான். திருமுருக கிருபானந்த வாரியார், வயலூர் முருகனிடத்தே மாறா பக்தி பூண்டிருந்தார். வழக்கமாக குன்றின்மேல் குடியிருக்கும் முருகன் இங்கு குன்றில்லாத சமவெளியில் குடியிருக்கிறான். ஆ என்ற காமதேனுவும், சோமன் வழிபட்ட சோமரசம்பேட்டையும் சூழ இருக்கிறது. அருணகிரிநாதர் மட்டுமல்ல, ஞானவரோதயர் என்ற அடியாருக்கு அருள் புரிந்த திருத்தலம். இந்த ஞானவரோதயர், கந்தபுராணத்தில் 7 ஆவது காண்டமாகிய உபதேச காண்டம் பாடியவர். இந்த திருத்தலத்தில் உள்ள கணபதி பொய்யாக்கணபதியாக பெயர் கொண்டுள்ளார். இவரிடம் வேண்டினால் பொய்க்காது என்பது வாக்கு. இவர் சந்நிதிக்கு அருகே அருணகிரி நாதருக்கு பீடம் அமைக்கப்பட்டு இருக்கிறது.
தலவரலாறு : இத்திருக்கோயில் உறையூரைத் தலைநகராகக் கொண்ட சோழ மன்னர்களால் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பின்னர் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் இத்திருக்கோயிலின் வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியுள்ளார். இறைவன் தம்மைத் தாமே வெளிப்படுத்திக் கொண்ட சிறப்பு வாய்ந்த தலங்களில் ஒன்றாக வயலூரைக் கருதுகின்றனர். இக்கோயில் உருவான காலம் குறிப்பாக அறியப்படாவிடினும், தொன்மையானதாகச் சோழர்களின் காலம் தொட்டே இருப்பதாகக் கூறுவர். காட்டு விலங்குகளை வேட்டையாடச் சென்ற ஒரு சோழ அரசன் தனது தாகம் தணிக்க கண்ணில் பட்ட கரும்பொன்றை உடைத்து அதன் சாற்றினை அருந்த முற்படுகையில் அது மூன்று கிளைகளாக முறிந்து நின்ற அற்புதம் கண்டு வியப்புற்றான். மேலும் முறிந்த கரும்பிலிருந்து குருதியும் உதிரவே, அக்கரும்பு பயிரான வயலைத் தோண்டிப் பார்க்கையில், சிவலிங்கம் இருக்கக் கண்டான். கரும்பினைக் கண்ணுற்ற இடத்திலேயே அச்சிவலிங்கத்தை ஆகம விதிகளின்படி நிறுவி கோயில் ஒன்று எழுப்பினான். மூலவரான சிவன் ஆதிநாதர் எனவும், மூலவி ஆதி நாதி எனவும் வழங்கலாயினர். வயலிடை கண்ணுற்ற மூலவர் என்பதனால், வயலூர் என அவ்விடம் வழங்கப் பெறலாயிற்று.
கோவில் அமைப்பு : முத்துகுமார சுவாமியை தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சகிதமாக காட்சியளிக்கிறார். வடபுற மூலையில் மகாலட்சுமி அருள்பாலிக்கிறார். கோயிலின் வெளியே கல்லால மரத்தடியில் வேல் வடிவில் உள்ள தோற்றத்தை இடும்பன் கோயில் என்றும், கிராம தேவதைக்கோவில் என்றும் சொல்கிறார்கள். முருகன் கை வேலின் வடிவமாகிய தேரடியான் கோயிலும் வந்தோர்க்கு வளம் தரும் அம்சமாக காட்சியளிக்கிறது. இத்தலத்தின் ஆதிநாதர் சன்னதி கர்ப்பகிரக சுவரில் 20 கல்வெட்டுக்கள் உள்ளன. முருகன் தன் வேலினால் உருவாக்கிய சக்தி தீர்த்தம் என்ற பெயருடன் திருக்குளம் ஒன்று கோயிலின் முகப்பில் தென்கிழக்கு மூலையில் உள்ளது. சித்தர்கள் தேடிவந்து முக்தி அடையும் இடம் வயலூர். இத்திருக்கோயிலின் கல் தூண்கள் மற்றும் கற்சுவர்களில் அமைக்கப்பெற்ற கலைகள் மற்றும் கட்டிடக்கலைகள் அனைத்தும் சோழமன்னர்களால் உயிர் உள்ளவன போல அமைக்கப்பெற்றுள்ளது கண்கொள்ளாக் காட்சி ஆகும். சிறிய சட்டத்தேர் ஒன்று மட்டும் உள்ளது. வைகாசி விசாக சுவாதி நட்சத்திரத்தன்று இத்தேரோட்டத் திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றது. வசந்த மண்டபம், தியான மண்டபம், முன்மண்டபங்கள் மற்றும் இரண்டு திருமண மண்டபங்கள், ஓய்வு விடுதி மாடி மண்டபம் ஆகியவை உள்ளன. அருணகிரிநாதரை வயலூருக்கு "வாவென" அழைத்து திருப்புகழ் பாட அடி எடுத்துக்கொடுத்த திருத்தலம் ஆகும். முருகன் இத்தலத்தில் தன் தாய் தந்தையர் ஆகிய ஆதிநாதர், ஆதிநாயகியை முன்னதாக வணங்கிய பின்னர் தான் தன் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார். இத்தலத்தில் அமைந்துள்ள நவக்கிரக சன்னதியில் ஸ்ரீ சூரியன். தனது தேவியர் சாயாதேவி மற்றும் உஷாதேவியுடன் மேற்கு நோக்கியும் ஏனைய எட்டு கிரகங்களும் சூரியனை நடுநிலையாக நோக்கியும் உள்ளன.
இத்தலத்தில் வள்ளி தெய்வானை சமேதராக சுப்ரமணிய சுவாமி அருள்புரிவதால் இத்தலத்தில் திருமணம் செய்து கொள்வது சிறப்பாகும். குழந்தைகளின் தோஷங்களை நிவர்த்திக்கும் தலமாகும் சோழர் காலத்திய கல்வெட்டுகள் திருகோவிலின் பழமைக்கு சான்றாகும். கால சர்ப்ப தோஷம் நீக்கும் வல்லமை உடையது. பழனி, திருச்செந்தூருக்கு வேண்டுதல் வைத்தவர்கள் இந்த கோயிலில் வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தலாம். ஆனால், வயலூரானுக்கு வைத்த வேண்டுதலை வேறு கோயிலில் செலுத்த முடியாது அசலோடு வசூலித்துவிடுவான் இந்த வடிவேலன் என்பது இந்த ஊர் மக்களின் சொல்லாக இருக்கிறது. தத்து திருப்புதல் என்ற நேர்த்திக்கடன் இந்த கோயிலின் வழக்கமாக இருக்கிறது. தோஷம் உள்ள குழந்தைகளை குறிப்பிட்ட காலம் வரை கோயிலுக்கு தத்து கொடுத்தலும், உரிய காலம் முடிந்ததும் தத்து திருப்புதலும் செய்கிறார்கள். கோயிலில் வைகாசி விசாகம், கார்த்திகை திருவிழா, சஷ்டி விழா என வழக்கமான விழாக்களும் வெகு விமரிசையாக நடக்கின்றன.
காலை 6.00 மணி முதல் 1.00 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருச்சிராப்பள்ளி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு