வள்ளியூர், சுப்ரமணியர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில், திருநெல்வேலியிலிருந்து 42 கி.மீ., தொலைவில் உள்ளது. ரயில் நிலையத்தில் இருந்து அரை கி.மீ தொலைவில் கோவில் அமைந்துள்ளது. வள்ளியூர் பஸ் நிலையத்தில் இறங்கினால் 2 கி.மீ தூரத்தில் கோவிலை அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு.
மூலவர் : சுப்ரமணியர்
அம்பாள் : வள்ளி, தெய்வானை (அமிர்தவல்லி, சுந்தரவல்லி)
தலச் சிறப்புகள் : நான்கு திருக்கரங்களில் வஜ்ஜிரம், சக்தி, மலரும் ஏந்தி, இடக் கரத்தை தொடையின் மீது வைத்த கோலத்தில் முருகப்பெருமான் காட்சி தருகிறார். மேலும் வள்ளி, தெய்வானையும் கூட இந்தக் கோயிலில் அமிர்தவல்லி, சுந்தரவல்லியாகவே காட்சி தருகிறார்கள். அகத்தியர், இடைக்காடர், வண்ணச்சரபம் தண்டபாணி தேசிகர் உள்ளிட்ட பலரும் வணங்கிப் போற்றிய மகாமூர்த்தி இவர். அகத்தியருக்குப் 'பிரம்ம ஞான உபதேசம்' அருளிய காரணத்தினால் வள்ளியூர் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி, 'ஞானஸ்கந்தன்' என்றும் அழைக்கப்படுகிறார். அகத்தியர், இந்த அற்புதக் காட்சியை தரிசித்தது பங்குனி மாதத்தில் வரும் கடைசி வெள்ளிக்கிழமை என்பது தலபுராணம்.
தல வரலாறு : திருத்தணியில் வள்ளியை மணம் முடித்த முருகப்பெருமான் மகேந்திரகிரி மலையின் கிழக்குப் பக்கத்தில் உள்ள இந்தக் குன்றில் குடியேறியதால் இவ்வூர் ’வள்ளியூர்’ என்றானது. சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்த வேளையில் மலையையும் தகர்த்தெறிந்தார். அதன் துண்டுகள் விழுந்து உருவான மலையே வள்ளிமலை என்கிறார்கள். முருகனின் வேல் பட்டு ஒளிர்ந்த மலை என்பதால் இதைப் பூரணகிரி என்றும் அழைக்கிறார்கள். தென் பகுதிக்கு வந்த அகத்திய முனிவர், இந்த வள்ளி மலைக்கு வந்து வள்ளியுடன் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானை வழிபட்டார். முருகப்பெருமான் குரு ஸ்தானத்தில் கிழக்கு முகமாக நின்று உபதேசிக்க, அகத்திய முனிவர் சீடரின் நிலையிலிருந்து மேற்கு முகமாக நின்று உபதேசம் பெற்ற தலம். உபதேசம் பெற்ற பிறகு, அந்தக் குன்றை பிரதட்சிணமாகக் கிரிவலம் வந்து கந்தக் கடவுளை வழிபட்டார்.
கிரிவலம் வரும் வழியில், குகையின் தென் பகுதியில் சோகத்துடன் நின்ற தெய்வானையை அணுகினார் அகத்தியர். முருகப்பெருமானைக் காண வந்த தன்னை, வள்ளி அனுமதிக்காததால், தான் வெளியில் நிற்பதாக மனவருத்தத்துடன் கூறினார் தெய்வானை. அதைக் கேட்ட அகத்தியர், தெய்வானை சமாதானப்படுத்தி, முருகப்பெருமானிடம் அழைத்துச் சென்றார். வள்ளிக்கும் தெய்வானைக்கும் இடையில் சமாதானம் செய்து வைத்த முருகப்பெருமான், அவர்கள் இருவரும் திருமாலின் கண்களிலிருந்து தோன்றிய அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்னும் சகோதரிகள் என்பதை உணர்த்தினார். மேலும், அவர்களே தற்போது தெய்வானையாகவும் வள்ளியாகவும் தோன்றி தன்னைத் திருமணம் செய்துகொண்டார்கள் என்று தெரிவித்து, அவர்களுக்கு சடாட்சர மந்திரத்தை உபதேசித்தார். அதைத் தொடர்ந்து இருவரும் சமாதானமாகி முருகப்பெருமானுக்கு இரண்டு புறங்களிலும் நின்று அகத்தியருக்கு அருள்புரிந்தனர்.
கோவில் அமைப்பு : குகைக்கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். ஒரே ஒரு குகைக் கோயிலைக் கொண்ட அரிய வேறுபாட்டை வள்ளியூர் கொண்டுள்ளது. இந்த கோவிலைக் கட்ட பூரணகிரி என்ற பாறை தோண்டப்பட்டது. கோவில் வடிவம் “ஓம்” வடிவத்தில் உள்ளது. கருவறைக்கு அடுத்து அர்த்த மண்டபமும் பின்னர் மகா மண்டபமும் அமைந்துள்ளது. அர்த்த மண்டபத்தில், ஆறுமுக பகவான் வள்ளி தெய்வானை ஆகியவற்றுடன் தரிசனம் செய்கிறார். அர்த்த மண்டபத்தை சுற்றுவதற்கு வசதியாக, சிவபெருமானின் கருவறை வரை ஒரு குகைப் பாதையை அமைக்க மலை துளையிடப்பட்டுள்ளது. இந்த கோவிலில், சிவபெருமான் ஜெயந்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இந்த கோவிலில் சிவலிங்மேற்கு நோக்கி உள்ளது.
முருகப்பெருமானுக்கு எதிரே எதிரே மயில் சிலை வைக்கப்பட்டுள்ளது, அர்த்த மண்டபத்தில் விநாயகர், வீரபாஹு, வீர மகேந்திரன் சிலைகளும் உள்ளன. அர்த்த மண்டபத்தின் வலது பக்கத்தில் ஒரு குகை உள்ளது. குகையின் நுழைவாயிலுடன் விநாயகர், சாஸ்தா மற்றும் சிவன் உள்ளனர். முருகன் கோவிலில் 13 ஆம் நூற்றாண்டின் கல் சிற்பங்கள் உள்ளன. முருக பகவான் வள்ளிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட கருவறை உள்ளது. மகா மண்டபத்தில் காஷி விஸ்வநாதர், விசாலட்சி மற்றும் சனி பகவான் உள்ளனர். கோயிலில் தட்சிணாமூர்த்தி சிலையும் உள்ளது. திருக்குருங்குடியில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்றபின் வேட்டைப் பயணத்தில் இங்கு வந்த ஒரு பாண்டிய மன்னரால் இந்த கோயில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் அவரது சந்ததியினரால் இந்த கோயில் விரிவாக்கப்பட்டது என்றும் புராணம் கூறுகிறது.
பரதேசி சித்தர் : சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் நான்குநேரி அருகே உள்ள செண்பகராமபுதூரில் பிறந்தவர் வேலாண்டி சுவாமிகள். சிறு வயது முதலே முருகப்பெருமான் மீது அதிகப் பற்று கொண்டவர். அதுவும் வள்ளியூர் முருகன் மீது அலாதி பிரியம். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், அந்த காலத்தில் இவர் கோவிலுக்குள் நுழைய மறுப்பு தெரிவிக்கப்பட்டது. கோவில் வெளியில் நின்றே முருகப்பெருமானைத் தரிசிப்பார். தன்னுடைய 13 வயதில் வள்ளியூர் முருகப்பெருமான் ஆலயத்தில் நடந்த கார்த்திகை தெப்பத் திருவிழாவுக்கு வேலாண்டி சுவாமிகள் வந்தார். அதன் பின் கோவில் வாசலிலேயே தங்கி விட்டார். பெற்றோர்கள் அவரை ஊருக்கு அழைத்தும், செல்ல மறுத்து விட்டார். முருகனுக்கு சேவை செய்ய ஆரம்பித்தார். வேலாண்டி சுவாமிகள் தினமும் சரவணப் பொய்கையில் நீராடுவார். முருகனைச் சுற்றிக் கிரிவலம் வருவார். வடக்கு மற்றும் கீழ்வாசல் வெளியே நின்று முருகனை வணங்குவார். அதன் பின் கீழ்வாசலிலேயே நிரந்தரமாக தங்கி பரதேசிக் கோலம் பூண்டார். மக்களிடம் யாசகம் செய்து அதைக் கொண்டு முருகன் கோவிலில் திருப்பணி செய்தார்.
அந்தக் காலத்தில் சாதிப் பெயரைக் கூறி அழைப்பது சர்வ சாதாரணமாக வழக்கில் இருந்தது. எனவே மக்கள் அவரைப் பரதேசி என்று அழைத்தனர். வேலாண்டி சுவாமிக்கு அந்த பரதேசி என்ற பெயரே நிலைத்தது. மனிதர்களுக் குத்தான் சாதி, மதம் எல்லாம். இறைவன் அதற்கு அப்பாற்பட்டவர். அவருக்கு மனித மனங்களும், பக்தியும் தான் முக்கியம்.
இளம் துறவியான பரதேசி சித்தருக்கு, முருகப்பெருமான் அருள் சக்தியை வழங்கினார். பரதேசி சித்தர், ஒருவருக்கு விபூதி பிரசாதம் கொடுத்தால் தீராத நோய் கூட தீர்ந்து விடும். நோய் தீர்ந்த மக்கள் நெல், வாழை போன்ற விளை பொருட்களை அவருக்குக் காணிக்கையாக வழங்கினர். கருப்பட்டி, காசு என அவர் முன் கொண்டு வந்து கொட்டினர். பொருட்களைப் பணமாக்கி கோவிலுக்கு விளைநிலங்களை வாங்கினார். அழகப்பபுரம், கீக்குளம், பரதேசிபத்து, சாமியார் பத்து, தாழக்கடி, தெரிசனம் தோப்பு ஆகியக் கிராமங்களில் கோவிலுக்காக சுவாமிகள் வாங்கிய நிலங்கள் உள்ளன. கீக்குளத்தில் வீடு கட்டி பகலில் விவசாயம் செய்தார். அதில் கிடைக்கும் பொருளை கொண்டு மாலையில் முருகன் ஆலயத்தில் பணிவிடை செய்து வாழ்ந்தார்.
தான் பரதேசியாய் இருந்தாலும், சுவாமிகள் மாமன்னர் போன்று முருகனுக்கு தங்க அங்கித் தயார் செய்தார். அவருக்கு அதை அணிவித்து மகிழ்ந்தார். ஆலயத்துக்குள்ளே வராமல் அவர் கீழ் வாசலில் அமர்ந்திருப்பார். அப்போது அவரை மக்கள் வணங்கி, குழந்தைப்பேறு, வியாபாரம், தொழில்விருத்தி, நோய் நிவாரணம் ஆகியவைப் பெற்றனர். வாசலில் அமர்ந்தே தனது மனக்கண்ணால் கோவிலுக்குள் நடக்கும் அத்தனைத் திருவிழாக்களையும் காணுவார்.
ஒருநாள்,மூலஸ்தானத்தில் தீப்பற்றி எரிகிறது என பரதேசி சித்தர் கூறவே, அனைவரும் ‘அது எப்படி மூலஸ்தானத்தில் தீப்பிடிக்கும்’ என ஆச்சரியத்துடன் கேட்டனர். உள்ளே சென்று பார்த்தால், சித்தர் சொன்னது போலவே தீ பிடிப்பதைக் கண்டனர். இந்த நிகழ்வுதான் பக்தர்கள் மத்தியில் அவருக்கு இருந்த சக்தியை உணர்த்தியது. அனைவரும் அவரை மகா சித்தர் என்று போற்றினர். அதன் பிறகு பரதேசி சித்தரின் திருப்பணிக்கு கூடுதலாக காணிக்கை சேர ஆரம்பித்தது.
பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, வடக்கு வாசல் அருகில் பக்தி மணம் பரப்ப ஒரு மடம் ஏற்படுத்தினார். அதன் பின் கோவிலைச் சுற்றி வர கிரிவலப்பாதையை உருவாக்கினார். கோவிலுக்கு தென்புறம் காணிக்கை வாங்கிப் பாதுகாக்க காணிக்கை மடமும் அமைத்துக் கொண்டார். எல்லா வெள்ளிக்கிழமை மற்றும் திருவிழாக் காலங்களிலும் காணிக்கை மடத்தில் வடக்கு பார்த்து தியானத்தில் அமர்ந்து இருப்பார். அப்போது அவருக்கு முருகப்பெருமானின் திருமணக்கோல காட்சி மனக்கண்ணில் கிடைத்துக்கொண்டே இருக்குமாம்.
பரதேசி சுவாமிகள் தனது இறுதி காலத்தை அறிந்தார். குறிப்பிட்ட காலத்தில் தான் சமாதி நிலை அடைவதாகவும், தன்னை சரவணப் பொய்கையின் தென் கிழக்கு மூலையில் சமாதி வைக்கவும் மக்களிடம் வேண்டுகோள் வைத்தார். அதன் படி பக்தர்கள் இவருக்கு சமாதி கோவில் அமைத்தனர். அதன் பிறகு அவரது அருட்கடாட்சம் வள்ளியூரை சுற்றி மலர ஆரம்பித்தது. இந்தத் துறவியின் அருள் தொடர்வதை அனுபவித்த மக்கள் அவர் சமாதி மீது லிங்கம் பிரதிஷ்டை செய்தனர்.
பரதேசி சித்தர் பீட மகிமை வெளிப்பட இன்னொரு காரணம், தினமும் முருகன் கோவில் மயில் ஒன்று, இவரது பீடத்திற்கு வந்து தரிசனம் செய்து விட்டுச் செல்வதைச் சொல்கிறார்கள். இந்த மடத்திற்கு வருபவர்கள், தங்களது பெயரைக் குறிப்பிடாமல், தங்களின் வேண்டுதலை மட்டும் ஒரு காகிதத்தில் எழுதி ஜீவ சமாதி பீடம் அல்லது காணிக்கை மடத்தில் சமர்ப்பித்தால் கேட்ட வரம் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது.
பரதேசி சுவாமிகள் முருகப்பெருமானின் அருளைப் பெற்றிருந்தாலும், அவர் உயிரோடு இருக்கும் வரை, மேல்தட்டு மக்கள் அவரைக் கோவிலுக்குள் அனுமதிக்கவே இல்லை. அதை புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டார் பரதேசி சித்தர். ஆனால் அவர் ஒரு அருளாசி கூறியிருந்தார். அது யாதெனில், ‘வருங்காலத்தில் ஒருவன் இக்கோவிலுக்கு திருப்பணி செய்ய வருவான். அவனிடம் எல்லாம் ‘உள்ளே வராதே..’ என்று யாரும் கூற முடியாது. அவன் திறமையானவனாக விளங்குவான்’ என்று கூறியிருந்தார். அதுபோலவே பிற்காலத்தில் மிளகாய் சாமியார் என்கிற வேலாண்டி தம்பிரான் சுவாமிகள் அவதரித்தார்.
1859-ல் சித்திரை மாதத்தில் அசுபதி நட்சத்திரத்தில் வேலாண்டித் தம்பிரான் பிறந்தார். இவரது தந்தை சிதம்பரத் தேவர். மகனை இறைப்பக்தியுடன் வளர்த்தார். இறை நாட்டம், தந்தையின் ஊக்குவிப்பு வேலாண்டி தம்பிரானை ஆன்மிகச் சுடராய் உயர்த்தியது. பரதேசி சித்தரை போலவே 13-வது வயதிலேயே உலக வாழ்வை வெறுத்து துறவற வாழ்வில் விருப்பம் கொண்டார். சுவாமிகள் 33 வருடங்கள் கோவில் தர்மக்கர்த்தாவாகப் பணியாற்றினார். அக்காலத்தில் திருக்கோவிலுக்கு பல திருப்பணிகளைச் செய்தார். திருத்தேர் உருவாக்கினார். சண்முகர் மற்றும் அம்மாளுக்கு வெள்ளி அங்கியை உருவாக்கினார். சண்முகருக்கு தனி பிரதிஷ்டை மடம் அமைத்தார். கோவிலில் கொடி மரம் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தினார். இறைவன் பிரசாதமாகத் திருநீறு வைத்து வழங்க, பன்னீர் இலைகளுக்காகப் பன்னீர் மரங்களை உருவாக்கி அதை நன்கு வளர்த்தார். அன்னமே இல்லாமல் வாழ்நாள் முழுவதும் வாழைப்பழம், மிளகாய் வத்தல், மோர் ஆகியவற்றால் தனது பசியை போக்கிக் கொண்டார். எனவே இவரை ‘மிளகாய் வத்தல் சாமி’ என்று மக்கள் அழைத்தனர். இவர் கோபத்திலும் குணத்திலும் சிறந்தவராக விளங்கி வந்தார். இவர் 1966-ம் ஆண்டு ஐப்பசி மாதம் 10-ம் நாள், இறைவன் திருவடி நிழலில் யோக சமாதி அடைந்தார். இவரது சமாதி வெளி சுற்று பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது. இவரை வழிபாடு செய்தால் நாள்பட்ட நோய்கள் நீங்கும். தீராத கடன் பிரச்சினை தீரும் என்கிறார்கள்.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறும். ஆடி கிருத்திகை, பங்குனி உத்திரம் சஷ்டி, பவுர்ணமி, அமாவாசை, தீபாவளி, பொங்கல், தமிழ் - ஆங்கில ஆண்டு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
காலை 6.00 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருவனந்தபுரம்
அருகிலுள்ள ரயில் நிலையம் : வள்ளியூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு