மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாட்டின், கடலூர் மாவட்ட விருத்தாசலம் நகருக்கு மேற்கே சுமார் 2 கி.மீ தொலைவில் மணவாளநல்லூரில் அமைந்துள்ளது. கோவிலுக்கு செல்லும் வழி விருத்தாசலத்தில் இருந்து மணவாளநல்லுர் செல்லும் பாதையில் உள்ளது. விருத்தாசலத்தில் இருந்து பேருந்து வசதிகள் உண்டு.
சுவாமி : கொளஞ்சியப்பர்
தீர்த்தம் : மணிமுத்தாறு
தலவிருட்சம் : கொளஞ்சிமரம்
தல சிறப்புக்கள் : முருகப் பெருமானின் சிலை கிழக்கு நோக்கி உள்ளது. இடும்பன், கடம்பன் ஆகியோருக்கு தனித்தனி கோவில் உள்ளது. கருவறையை நோக்கி முனீஸ்வரர், வீரர் ஆகிய கடவுள் சிலைகள் உள்ளது. சித்தி விநாயகருக்கு தனி சந்நிதி உள்ளது. கொளஞ்சியப்பர் இங்கு மூலவராக வீற்றிருக்கும் சிவபெருமான் சுயம்பு மூர்த்தி என்ற பெருமையை கொண்டவர். இந்தக் கோவிலில் சிவபெருமானுக்கு உருவமும் இல்லை. கண்ணுக்குப் புலப்படாத அருவமாகவும் இல்லை. உருவமும் அருவமும் சேர்ந்து ஒரு பலிபீட வடிவமாக பக்தர்களுக்கு காட்சி தருகின்றார் மூலவர். இங்கு மூன்று அடி உயரத்தில் உள்ள சுயம்புவாக தோன்றிய பலிபீடமே மூலஸ்தனமாக இருக்கின்றது. இந்த பலிபீடத்திற்கு கீழ்ப்பகுதியில் முருகனது உருவம் பொறிக்கப்பட்ட ஸ்ரீசக்கரம் ஒன்று உள்ளது. இங்கு நடத்தப்படும் அபிஷேகங்கள் எல்லாம் முருகப்பெருமானுக்கு நடக்கின்றது.
இந்தக் கோவிலின் மற்றொரு சிறப்பு வேப்பெண்ணை மருந்து. இங்கு வரும் பக்தர்கள் வேப்பெண்ணையை வாங்கிக் கொண்டுவந்து அர்ச்சகரிடம் கொடுத்து அந்த இறைவனின் காலடியில் வைத்து பூஜை செய்து சிவபெருமானின் பிரசாதமான திருநீற்றை சிறிதளவு அந்த எண்ணெயில் போட்டு வாங்கிச் செல்வார்கள். இந்த எண்ணெயானது பல விதமான நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்டதாக, பக்தர்கள் நம்பிக்கையோடு வாங்கி செல்கிறார்கள். ஆறாமல் இருக்கும் புண்கள், கட்டிகள் இவற்றுக்கு மருந்தாக இந்த எண்ணெய் நல்ல ஒரு தீர்வினை கொடுக்கிறது. மனிதர்களுக்கு மட்டுமல்ல மாடுகளுக்கு ஏற்படும் காமாலைகட்டிக்கும் இந்த எண்ணெயானது மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இந்த ஊர் மக்கள் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் கூட இந்த எண்ணெயானது கொண்டு செல்லப்படுகிறது. இக்கோயிலின் சிறப்பு இங்கே நடைமுறையில் இருக்கும் “பிராது” எனும் வழக்கு பதிவு செய்யும் முறை, சூறை விடுதல் போன்றவையாகும். இங்கு பங்குனி உத்தரம் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பக்தர்களின் கோரிக்கைகள் பிரார்த்தனை சீட்டில் எழுதப்பட்டு இங்குள்ள தல விருட்சத்தில் வேண்டுதலாக கட்டப்படுகிறது.
தல வரலாறு : கட்டடக்கலை இக் கோயிலில் 5 அடுக்கு கோபுரம் உள்ளது. சுற்றுசுவர் வெட்டி எடுக்கப்பட்ட பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ளது. சிறுவயதில் தேவாரம் பாடிய சுந்தரர் திருமுதுகுன்றம் பகுதிக்கு வருகை தந்தார். இந்த ஊரில் இருந்த பழமலைநாதர் கோவிலில் சிவபெருமானும், விருத்தாம்பிகையும் சேர்ந்து சுந்தரருக்கு காட்சி தந்தனர். இந்த ஊரில் இருக்கும் கோவில்கள் எல்லாம் மிகவும் பழமை வாய்ந்தது என்பதை அறிந்து கொண்ட சுந்தரர், இந்த கோவிலில் இருக்கும் சிவபெருமானையும் அம்பிகையையும் போற்றி படாமலேயே சென்றுவிட்டார். ஏனென்றால் இவ்வளவு பழமைவாய்ந்த கோவிலைப்பற்றி பாடல் பாட சுந்தரருக்கு தகுதி இல்லை என்று நினைத்துக் கொண்டார். சுந்தரர், பாடலை பாடாமல் சென்றதில் சிவபெருமானுக்கு வருத்தம் இருந்தது. சிவபெருமான் முருகனை அழைத்து நடந்ததை கூறினார். முருகப்பெருமான் உடனே வேடனாக உருமாறி சுந்தரரிடம் சென்று அவர் கையில் இருந்த செல்வத்தை எல்லாம் திருடி விட்டார். ‘இந்த செல்வங்கள் எல்லாம் என்னுடையது அல்ல. அந்த இறைவனின் திருப்பணிக்காக வைத்திருப்பது. எனவே இதையெல்லாம் என்னிடம் திருப்பி கொடுத்துவிடு’ என்று அந்த வேடனிடம் முறையிட்டார். உனக்கு இந்த பொருட்கள் எல்லாம் திரும்பவும் வேண்டுமென்றால் திருமுதுகுன்றத்தில் வந்து பெற்றுக் கொள்ளும்படி’ சொல்லிவிட்டு வேடன் ரூபத்தில் இருந்த முருகன் மறைந்து விட்டார்.
திருமுதுகுன்றம் சென்று ஈசனிடம் மன்னிப்பு கேட்டு பாடலைப் பாடி இழந்த செல்வத்தை திரும்பவும் பெற்றுக்கொண்டார். சுந்தரரை வழிமறித்த வேடன், முருகப்பெருமான்தான் என்பதை உணர்த்துவதற்கு திருமுதுகுன்றம் மேற்கு பகுதியில், சுந்தருக்கு காட்சியளித்து அருள் பாவித்தார் முருகன். காட்சியளித்த அந்த இடத்தில் ‘குளஞ்சி’ எனப்படும் மரங்கள் அதிகமாக இருந்ததால் அந்த இடம் ‘குளஞ்சியப்பர்’ என்ற பெயரைக் கொண்டது. காலப்போக்கில் ‘குளஞ்சியப்பர்’ என்ற பெயர் மருவி ‘கொளஞ்சியப்பர்’ என்று தற்போது அழைக்கப்பட்டு வருகிறது.
கொளஞ்சியப்பர் கடந்த சில நூற்றாண்டுகட்கு முன்பு தோன்றியது. திருக்கோவில் அமைந்துள்ள இடம் முன்னொரு காலத்தில் அடர்ந்த காடாக சூழ்ந்துள்ளது. பசு மாடு ஒன்று அடர்ந்த காட்டில் நிறைந்திருந்தகொளஞ்சிச் செடிகளின் நடுவே தன் கால்களால் சீய்ந்து பலிபீட உருவில் இருந்த கற்சிலையின் மேல் தானாக பால் சொறிவதை மக்களால் காணப்பட்டு இது ஒரு புனித தெய்வம் எனக் கருதி வழிபாடு செய்துவரப்பட்டது.சுவாமி உருவமின்றி உள்ளதால் என்ன தெய்வம் என்பது குறித்து ஆராய்ந்த போது சுந்தரமூர்த்தி நாயனார் தில்லையில் இருந்து பதிகம்பாடி விருத்தாசலம் அடைந்த ஊர்.சுவாமி பெயர்களைக் கேள்வியுற்று முதுமைதன்மை வாய்ந்த இவர்களால் பொன்,பொருள் எனக் கருதி பாடாதொழிந்து சென்றபோது திருமுதுகுன்றத்து ஈசனாகிய பரம் பொருள் பக்தனோடு விளையாட எண்ணி தனது மைந்தன் முருகனிடம் ”சுந்தரன் மதியாது செல்வதால் அவரை எமது இடத்திற்கு வருவிக்கச் செய்” என ஈசன் பிராது கொடுத்த இடம் மணவாளாநல்லூர் எல்லைஎன்பது தெரியவந்தது.அதன்படி விருத்தாசலம் நகருக்கு மேற்கு திசையில் “முருகன் தான் பலிபீடஉருவில்” அமைந்துள்ளார்என உறுதி செய்யப்பட்டது கொளஞ்சி செடிகளின் ஊடேயும். பசுவின் கொளம்பின் மூலமாகவும் வெளிப்பட்ட அவருக்கு அருள்மிகு கொளஞ்சியப்பர் எனும் திருநாமத்தை சூட்டி வழி பட்டு வந்துள்ளார்கள்.
நம் மனதில் இருக்கும் குறைகளை ஒரு வெள்ளைக் காகிதத்தில் எழுதி அர்ச்சகரிடம் கொடுத்து கொளஞ்சியப்பரின் காலடியில் வைத்து அர்ச்சனை செய்து, பின்பு ஒரு சிறிய நூலில் கட்டி முனியப்பர் சந்நிதியில் இருக்கும் வேலில் தொங்க விட்டால் நினைத்த காரியமானது 90 நாட்களில் நிறைவேறும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை. நம்பிக்கையோடு சீட்டு கட்டுபவர்களின் பிரார்த்தனையும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நாம் வேண்டிக்கொள்ளும் கோரிக்கையானது நிறைவேறிவிட்டால் ‘அந்த சீட்டை திரும்பவும் வந்து பெற்றுக் கொள்கின்றேன்’, என்றும் வேண்டிக்கொண்டு, நம் கோரிக்கையானது நிறைவேற்றப்பட்ட பின்பு, திரும்பவும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி கொளஞ்சியப்பரை வழிபட்டு செல்வது வழக்கமாக இருக்கிறது.
மக்கள் காகிதத்தில் எழுதி கொடுக்கும் குறைகள் முதலில் மூலவரான கொளஞ்சியப்பர் சன்னிதானத்தில் வைக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது. அதன்பிறகு, கோயில் வளாகத்தின் உள்ளேயே இருக்கும் முனியப்பர் சன்னிதானத்தின் முன்புறத்தில் அமைந்துள்ள சூலம், ஈட்டி போன்றவற்றில் கட்டப்படும். தங்கள் வேண்டுதல், கோரிக்கை நிறைவேறிய பிறகு மக்கள் மீண்டும் இந்தக்கோயிலுக்கு வந்து தங்கள் பிராதினை திரும்பப் பெற்றுக்கொள்கிறார்கள். பிராது கட்டும் வேண்டுதலுக்கு வசூலிக்கும் கட்டணத்திலும் ஒரு புதுமையான முறைமை கடைபிடிக்கப்படுகிறது. கோயில் நிர்வாகத்தின் பொதுவான கட்டணத்திற்குப் பிறகு, பிராது கட்டும் நபர் எங்கிருந்து வருகிறாரோ அந்த இடத்திற்கும் கோயிலுக்கும் இடையே உள்ள தொலைவு கணக்கிடப்பட்டு, ஒரு கிலோமீட்டருக்கு 25 பைசா வீதம் வசூலிக்கப்படுகிறது.
காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : பாண்டிச்சேரி, சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : விருத்தாசலம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு
கோவிலுக்கு செல்லும் வழி விருத்தாசலத்தில் இருந்து மணவாள நல்லலுர் செல்லும் பாதையில் உள்ளது. விருத்தாசலத்தில் இருந்து பேருந்து வசதிகள் உண்டு.