ஏரகரம் , கந்தநாதசுவாமி கோயில்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இருப்பினும் முருகன் கோயில் என்றே அழைக்கின்றனர். கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை செல்லும் பாதையில் மூப்பக்கோயிலிலிருந்து பிரியும் சாலையில், ஆசூர் வாய்க்காலுக்கு மேற்புறம் இக்கோயில் உள்ளது. இன்னம்பரில் இருந்து திருப்புறம்பியம் செல்லும் சாலை வழியில் வலதுபுறம் ஏரகரம் செல்லும் சாலை பிரிகிறது. அவ்வழியாகச் சென்றும் ஏரகரம் அடையலாம். இவ்வூருக்கு அருகில் புகழ் பெற்ற மற்றொரு முருகன் கோயில் சுவாமிமலை உள்ளது. இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.
சுவாமி : கந்தநாதசுவாமி, சங்கரநாதர்
அம்பாள் : சங்கரநாயகி.
தல மரம் : நெல்லி
தீர்த்தம் : சரவணப் பொய்கை
பாடியோர் : கச்சியப்ப சிவாசாரியார், நக்கீரர், அருணகிரிநாதர்
தல சிறப்புக்கள் : இச்சன்னதியில் சுப்பிரமணியர் நின்ற நிலையில் ராஜகோலத்தில் உள்ளார். கருவறையில் லிங்கத்திருமேனி உள்ளது. மூலவர் சன்னதிக்குப் பின்புறம் ஆதிகந்தநாதசுவாமி சன்னதி உள்ளது. அசுரர்களால் முனிவர்களின் தவத்திற்கு இடையூறு ஏற்பட்டபோது சிவபெருமானை வேண்டினர். அப்போது சிவன் கந்தனை அழைத்து முனிவர்களைக் காத்திடும்படிக் கூறியதோடு ஒரு அஸ்திரத்தையும் வழங்கி அதனை செலுத்தும் இடத்தை அவருடைய அகமாக அமைத்துக்கொள்ளும்படி அருளியுள்ளார். முருகனின் அஸ்திரம் பூமியில் பாய்ந்த இடம் ஏரகம்.
தல வரலாறு: கி.பி.1120 முதல் 1136 வரை சோழ நாட்டை ஆட்சிபுரிந்த விக்கிரம சோழன் காலத்திய இத்தலத்து கல்வெட்டின் படி ஏரகரம் என்ற இத்தலம் "இன்னம்பர் நாட்டு ஏராகிய மும்முடி சோழமங்கலம்" என்று அந்நாளில் அழைக்கப்பட்டது. இதற்கேற்ப இத்தலத்தைக் குறிப்பிடும் வைப்புத்தல பாடல்களில் இன்னம்பர் என்ற சொற்றொடரை அடுத்து இத்தலத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம்.
ஒரு சமயம் முருகக் கடவுள், படைத்தல் தொழில் செய்து வரும் பிரம்மாவிடம் ஓங்காரத்திற்குப் பொருள் உரைக்குமாறு வினவினார். பிரம்மா பொருள் தெரியாது திகைத்து நிற்க, பிரணவப் பொருள் தெரியாத பிரம்மா படைப்புத் தொழிலுக்கு தகுதியற்றவன் எனக்கருதி, படைப்புத் தொழிலை தானே ஏற்றுக் கொண்டு பிரம்மாவை சிறையிலும் அடைத்தார். மகாவிஷ்ணு ஈசனை அணுகி, பிரம்மாவை விடுவிக்க வேண்டினார். ஈசனும் முருகனிடம் பிரம்மாவைச் சிறையிலிருந்து விடுவிக்க ஆணையிட்டார். அதன்பின் தந்தைக்கு அவர் விரும்பியபடி பிரணவ மந்திரத்தின் பொருள் உரைக்க, அதனால் மகிழ்ந்த சிபெருமான் குமரக் கடவுளை இத்தலத்திலேயே தங்கி அருள் பாலித்துக் கொண்டிருக்கும்படி ஆணையிட்டார். தந்தைக்குப் பிரணவத்தின் பொருள் உரைத்த முருகப் பெருமானின் ஆறபடைவிடுகளில் ஒன்றான சுவாமிமலை ஏரகரம் தலத்திலிருந்து அருகிலுள்ளது. முருகப் பெருமான் சூரபத்மன் முதலான அரக்கர்களை அழிக்க பூமிக்கு வந்து தான் தங்கும் இடமாக தேர்தெடுத்த இடம் தான் ஏரகரம் என்ற இத்தலம். அசுரர்களை அழிப்பதற்கு முன்பு குமரக் கடவுள் தன் பெற்றோர்களையும், விநாயகரையும் துதித்து ஆசி பெற வேண்டி வணங்க, எம்பெருமானும், உமையும் முருகன் அமைத்த ஏரகரத்திற்கு கந்தநாதசுவாமியாகவும், சங்கரநாயகியாகவும் வந்து அமர்ந்தனர்.
கோவில் அமைப்பு : நான்கு புறமும் மதிற்சுவருடன் ஒரு முகப்பு வாயிலைக் கொண்டும், ஒரு பிராகாரத்துடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது. முகப்பு வாயிலைக் கடந்தால் ஒரு நீண்ட மண்டபம் நேரே இறைவன் சந்நிதிக்குச் செல்கிறது. நீண்ட மண்டபத்தின் முகப்பிலேயே வலதுபுறம் தெற்கு நோக்கியவாறு அம்பாள் சங்கரநாயகியின் சந்நிதி அமைந்துள்ளது. மண்டப முகப்பில் இடதுபுறம் நர்த்தன விநாயகர் காட்சி தருகிறார். கருவறைக் கோஷ்டத்தில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி கண்டு தரிசிக்க வேண்டும். நவக்கிரக சந்நிதியும் இவ்வாலயத்தில் உள்ளது. கோயில் வளாகத்தில் சங்கரநாயகி அம்மன் சன்னதி விநாயகர், சிவலிங்கம், மகாலிங்கம், சூரியன், பைரவர், நாககன்னியர் உள்ளது.கருவறை கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா உள்ளனர். திருச்சுற்றில் சண்டிகேஸ்வரர் சன்னதியும், நவக்கிரக சன்னதியும் உள்ளன.
கார்த்திகை, பங்குனி உத்திரம் இவை இரண்டும் இத்தலத்தின் திருவிழாக்கள் ஆகும்.
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : கும்பகோணம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு