கோவை குமரன் கோட்டம், சுவாமி நாத சுவாமி
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கோயம்புத்தூர் மாவட்டம் திருச்சி சாலையில் கோவைக் குமரன் கோட்டத்தில் அமைந்துள்ளது.
மூலவர்: சுவாமிநாத சுவாமி
தலச் சிறப்புகள் : சுவாமி நாத சுவாமி திருக்கோயிலில் தான் ஆறுபடை வீடு முருகனும் ஒரே இடத்தில் தனிதனி சன்னதிகளில் அருள்பாலிக்கிறார்கள். இதில் மிகப்பெரும் விசேஷம் என்னவென்றால் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி திருத்தணி, சுவாமிமலை, சோலைமலை மண்டபம் ஆகிய ஆறுபடைவீடுகளில் முருகப்பெருமான் எந்த பெயரில் எந்த திசை நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கிறாரோ, அதே பெயரில் அதே திசையில் இங்கும் அருள்பாலிக்கிறார். இந்த சுவாமிநாத சுவாமி திருக்கோயிலுக்கு வந்து இங்குள்ள ஆறு முருகப்பெருமானை தரிசித்தால் ஆறுபடைவீடும் சென்று தரிசித்த திருப்தி ஏற்படும்.
முருகப்பெருமானின் ஆறுபடைவீடுகளில் நான்காம் படைவீடு சுவாமிமலை. தந்தையாகிய சிவ பெருமானுக்கு குருவாக இருந்து, “ஒம்” என்னும் பிரணவ மந்திரத்திற்கு பொருளை உபதேசித்தவர் முருகன். இந்த சுவாமிநாத சுவாமியை வணங்கினால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதோடு ஞானமும் கிடைக்கும். ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமானது கல்விச்செல்வம். இத்தகைய கல்வி செல்வம் வற்றாமல் கிடைப்பதற்காகத்தான் குமரன் கோட்டத்தில் சுவாமிநாதசுவாமி கோயில் எழுந்தருளியிருக்கிறது.
கோவில் அமைப்பு : ஐந்து நிலை கொண்ட இராஜகோபுரத்தின் உள்ளே சென்றதும் வலதுபக்கத்தில் வினைதீர்க்கும் விநாயகன் தனது தம்பியின் கோயிலில் முழுமுதற்கடவுளாக முதல் ஆளாக அமர்ந்திருக்கிறார். அடுத்ததாக குன்றிருக்கும் இடமெல்லாம் இருக்க கூடிய குமரன் சரவணப்பொய்கையில் அவதரித்ததை நினைவுகூறும் வகையில் பிரம்மாண்டமான தீர்த்த தொட்டியின் நடுவிலே தாமரை இதழ்களில் குழந்தை முருகனின் அவதார நிலை. கொடிமரத்தையும் மயில் வாகனத்தையும் தாண்டிச் சென்றால், உலக நாயகனான தந்தை ஈசனுக்கே பாடம் சொன்ன சுவாமிநாத சுவாமி சந்தனக்காப்புடன் இராஜ அலங்காரத்தில் “நானே அழகு” என்பது போல் மூலஸ்தானத்தில் வீற்றிருக்கிறார். முருகனுக்கு மயில்தானே வாகனம். ஆனால் இங்கோ சுமாமிமலையில் இருப்பது போலவே யானை வாகனமாக உள்ளது.
மூலஸ்தான சுவாமிநாதனை தரிசித்து விட்டு வலம் வந்தால் திருத்தணிகை வேலன், வள்ளி தெய்வானையுடன் தனி சன்னதியில் அருள்புரிவதை தரிசிக்கலாம். சூரனை வதம் செய்த திருச்செந்தூர் செந்திலாண்டவர் வேலுடன் தனி சன்னதியில் காட்சிதருகிறார். அடுத்துதெய்வானையுடன் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி வீற்றிருக்கிறார். தனக்கு வேண்டிய மாம்பழத்தை தன் அண்ணனுக்கு கொடுத்ததற்காக கோபித்து சென்ற பழநி தண்டாயுதபாணி, கையில் தண்டம் ஏந்தி, துறவியாக தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இப்படி ஆறுபடை வீடு திருமுருகனும் ஒரே இடத்தில் தனித்தனி சன்னதியில் உள்ளது. காசி விஸ்வநாதர் விசாலாட்சி தனி சன்னதிகளில், அத்துடன் 63 நாயன்மார்களும், ஒரே கல்லினாலான நவக்கிரகமும் அமைந்துள்ளது சிறப்பம்சமாகும்.
இங்கு ஆறுகால பூஜை நடைபெறுகிறது. கார்த்திகை, சஷ்டி, சித்திரை வருடப்பிறப்பு, தைப்பூசம், பங்குனி உத்திரம், விசாகம், பங்குனி உத்திரத்தில் பிரம்மோத்சவம் ஒரு வாரம். அறியாமை அகல, வலிமையும், ஊக்கமும் பெற, மனதில் வைராக்கியம் ஏற்பட, தீமைகள் அகல, மகிழ்ச்சி பெருக இங்கு பிரார்த்தனை செய்துகொள்கின்றனர். வேண்டுகோள் நிறைவேறியவர்கள் முருகனுக்குப் பால் திருமுழுக்காட்டு செய்து, சந்தனக்காப்பு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
காலை 5.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : கோயம்புத்தூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : கோயம்புத்தூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு