ரத்தினகிரி முருகன், சரவணம்பட்டி
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், கோயமுத்தூர் மாவட்டத்தின் மத்தியப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள சரவணம்பட்டியில் ரத்தினகிரி மலைக்கோவில் உள்ளது. கோயம்புத்தூரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில், சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ளது.
மூலவர் : ரத்தினகிரி முருகன்
தலச் சிறப்புகள் : நின்ற திருக்கோலத்தில் இங்குள்ள முருகன் சிலை நான்கு கரங்களைக் கொண்டதாகவும், அவருக்கு அருகில் தனது வாகனமான மயிலை வைத்திருக்கும்படியும் உள்ளது. இத்தலத்தில் பாறையில் தானாக தோன்றிய சுயம்பு விநாயகர் அருள்பாலிக்கிறார்.
தல பெருமை : பல்லாண்டுகளுக்கு முன்பு முருகனின் தீவிர பக்தையான பெண் ஒருவர் நீண்ட வருடங்களாக குழந்தைபாக்கியம் இன்றி தவித்தார். தினசரி ரத்தினகிரியில் குடிகொண்டிருந்த முருகனை தரிசித்து தனக்கு குழந்தை வரம் தரும்படி மனமுருகி வேண்டி கடும் விரதம் மேற்கொண்டார். ஓரு நாள் அவர் தனிமையில் யாரும் இல்லாத வேளையில் ரத்தினகிரிக்கு வந்து முருகனை நீண்ட நேரம் வணங்கி, தனது குறையைக் கூறி கண்ணீர் விட்டு சுவாமியை வலம் வந்தார். அப்போது அங்கு வந்த ஆடுமேய்க்கும் சிறுவன் ஒருவன் அவரிடம், அழுவதற்கான காரணத்தைக் கேட்க அவர், தனக்கு புத்திர பாக்கியம் இல்லாததைக் கூறி வருந்தினார்.
அவர் கூறியதை பொறுமையுடன் கேட்ட அச்சிறுவன் கோயிலில் இருந்த விபூதியை எடுத்து அவரிடம் கொடுத்து விட்டு பக்தியுடன் சுவாமியை வலம் வரும்படி கூறினான். அதன்படி அப்பெண் பக்தை விபூதியை பெற்றுக்கொண்டு சுவாமியை வலம் வந்தார். சுவாமியை ஒரு முறை வலம் வந்த அவர் தன்னிடம் விபூதி கொடுத்த சிறுவனைக் காணாது அதிர்ந்தார். இச்சம்பவம் நிகழ்ந்த சில தினங்களிலேயே அப்பெண் கருவுற்றார். அதன் பின்பே அவரிடம் ஆடு மேய்க்கும் சிறுவனாக வந்து பேசியது முருகப்பெருமான் தான் என அறிந்து கொண்டார். முருகனே நேரில் வந்து பெண் பக்தைக்காக அருள்புரிந்து அற்புதம் நிகழ்த்திய சிறந்த தலம்.
இந்தக் கோயிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு பழக்கம் இருந்தது. முறைப்பெண்ணும், முறை மாப்பிள்ளைகளும் பொங்கலுக்கு மறுநாள் இங்கு வருவர். தங்கள் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் வகையில், தாங்கள் கொண்டு வரும் பூக்களை மாப்பிள்ளைகள் தங்கள் வருங்கால மனைவியருக்கு சூட்டுவர். பின்னர், முருகப்பெருமானுக்கு மாலையணிவித்து தங்களை மணமக்களாக சிரமமின்றி இணைத்து வைக்க வேண்டுவர். இந்த வழிபாட்டிற்கு சூபூப்பறித்தல் நோன்பு’ என்று பெயர். இப்பழக்கம் தற்போதைய நாகரீகத்தின் காரணமாக குறைந்து விட்டது. இருப்பினும், விஷயமறிந்த காதலர்கள் இப்போதும் இங்கு வந்து முருகனை வழிபட்டுச் செல்கின்றனர். திருமணத்துக்கு பிறகு தம்பதி சமேதராக வந்து வணங்கிச் சென்றால் நல்ல குழந்தைகள் பிறக்கும் என்பதும் நம்பிக்கை.
தல வரலாறு : சிவனை நோக்கி யுகங்கள் பல கடுந்தவம் இருந்து அண்டசராசரங்களையும் அழிவிலாது அடக்கி ஆளும்படி வரம் பெற்ற அசுரன் தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தான். அவனது இன்னல்களுக்கு பயந்த தேவதலைவன் இந்திரன் உட்பட தேவர்கள் அனைவரும் அசுரனின் கண்ணுக்கு புலப்படாமல் ஒளிவுமறைவாக வசித்து வந்தனர். அப்போது ஓர் முறைஇந்திரன் மறைந்திருந்ததைக் கண்ட அசுரன் அவரை துன்புறுத்துவதற்காக வந்தான். இதனை அறிந்த இந்திரன் அவனிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடினார். அவ்வாறு ஓடி வந்த அவர் ரத்தினகிரி மலையின் மீது ஏறி மறைந்து கொள்ள இடம் தேடினார். அப்போது அங்கு இந்திரனுக்கு காட்சி தந்த குமரக்கடவுள் அவரை தனது வாகனமான மயிலாக மாற்றிக் கொண்டார். அங்கு இந்திரனைத் தேடி வந்த அசுரன் அவர் இல்லாததைக் கண்டு ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றான். இவ்வாறு அசுரனிடமிருந்து இந்திரனைக் காப்பதற்காக அவரை தனது மயில் வாகனமாக முருகன் மாற்றிக்கொண்ட அற்புதம் நிகழ்ந்தது இந்த ரத்தினகிரி மலையில் என புராண வரலாறு கூறுகிறது.
தைப்பூசம், மாட்டுப்பொங்கல், அமாவாசை, கிருத்திகை, வைகாசி விசாகம் ஆகிய நாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன. அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், வெள்ளிக்கிழமைகளில் சிவ-பார்வதி, திருமால் மற்றும் பூதேவி ஆகியோரின் திருவுருவங்களில் முருகப்பெருமான் திருக்காட்சி தந்தருள்வது சிறப்பு என்கின்றனர். அப்போது முருகப்பெருமானுக்கு நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தைத் தரிசிக்க, சரவணம்பட்டியில் உள்ள கோயிலில் இருந்து சிவ-பார்வதி, திருமால், பூதேவி ஆகியோர் மலையில் தரிசனம் தருகின்றனர். இதேபோல், தை அமாவாசை நாளில், இங்கு பால் குடம் எடுத்து முருகப்பெருமானைப் பிரார்த்தித்தால், நினைத்த காரியம் யாவும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியம், மாங்கல்ய வரம் கிடைக்கப் பெறுவார்கள். இப்படியாக, வருடம் முழுவதும் விசேஷங்களும் விழாக்களும் இருந்தாலும், பங்குனி உத்திரத் திருநாள்தான் இங்கு அதிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கையில் கூடை கூடையாகப் பூக்களைச் சுமந்தபடி, காவடி எடுத்தபடி, மலையை வலம் வந்து, பிறகு மலையேறி, அழகுக் குமரனுக்கு பூக்கள் சார்த்தி வழிபடுகின்றனர்.
காலை 6.00 மணி முதல் பகல் 1.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்து இருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : கோயம்புத்தூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : கோயம்புத்தூர்- சத்தியமங்கலம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு