சிங்கனாப்பூர், சனி
திருத்தல இருப்பிடம் : இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில், அகமதுநகர் மாவட்டத்தில், நய்வாசா வட்டத்தில் சீரடி நகரிலிருந்து 60 கி.மீ., தொலைவிலும், அகமது நகரிலிருந்து 35 கி.மீ தொலைவிலும், அவுரங்காபாத்திலிருந்து 84 கி.மீ., தொலைவிலும் பூனாவிலிருந்து 160 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது.
தலச் சிறப்புகள் : சிவன் மற்றும் அனுமார் சிலைகளுக்கு முன்பு, சனி பகவான் கோயில் கட்டிடம் இன்றி திறந்த வெளியில் ஐந்தரை அடி உயர சுயம்பு வடிவில் கருங்கல்லில் அருள் புரிகிறார். கருங்கல்லில் சிவ பெருமானின் சூலாயுதமும், நந்தியும் காணப்படுகிறது. சனிபகவானை வழிபட இக்கோயிலுக்கு நாள்தோறும் 30,000 முதல் 45,000 பக்தர்கள் வருகின்றனர். அமாவாசை மற்றும் பெளர்ணமி நாட்களில் மூன்று இலட்சம் பக்தர்கள் இக்கோயில் கூடுகிறார்கள். சனிக்கிழமையில் வரும் அமாவாசை நாளில், சனி பகவானுக்கு நல்லெண்னெய், பூ மற்றும் கறுப்பு உளுந்து படைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
தல வரலாறு : சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் பெய்த பெருமழை காரணமாக பனாஸ்னாலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடும் மழை பெய்து மக்கள் வெள்ளத்தால் கடும் அவதிப்பட்டனர். கடவுளை மனதாரப் பிராத்தித்ததன் பேரில் ஆற்றில் வெள்ளம் வடிந்தது. அப்போது கரையருகே ஒரு தூண் வடிவிலான கல் அடித்து வரப்பட்டு ஓதுங்கி இருப்பதைக் கண்டனர். அதை அகற்ற முயற்சித்த போது பலர் ஒன்று சேர்ந்தும் முடியவில்லை. அப்போது தாய் மாமனும் அவரது சகோதரி மகனும் சேர்ந்து முயற்சித்தால் இக்கல்லை அகற்ற முடியும் என வானத்தில் அசரீரி ஒலிக்க, அவ்வாறான இருவரை அழைத்து வந்து கல்லை அகற்ற கல் அசைந்தது. அதை ஊரின் நடுவே ஓரிடத்தில் தாபித்து வழிபட்டனர். மாமன், சகோதரி மகன் இருவர் கனவிலும் சனிஸ்வரர் தோன்றி கல்லாய் வந்திருப்பது தான் தான் என்றும் எனக்கு அங்கு எழுப்படும் கோவிலில் மேற்கூரை இல்லாது வெட்டவெளியில் வைத்து வழிபடும்படி கூறியும் தன்னால் அவ்வூருக்கும் மக்களுக்கும் மேன்மையே கிட்டும் எனக் கூறி மறைந்தார். ஊர் மக்களும் அவ்வாறே செய்து வழிபட ஊர் நல்ல நிலையை அடைந்தது. இங்குள்ள சனிஸ்வரருக்கு காலை 4.30 மணி தொடங்கி இரவு 1௦ மணி வரை ஆர்த்தி நேரம் தவிர, இடைவிடாது எள் எண்ணையால் பக்தர்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. விசேஷ நாட்களில் சுமார் 10000 லிட்டர் எள் எண்ணை அபிஷேகத்துக்கு வருமாம்.
சிங்கனாப்பூரின் எந்த வீடுகளுக்கும், வணிக நிறுவனங்களின் கட்டிடங்களுக்கும் கதவுகள் இல்லை. ஆனால் நிலைக்கதவுகள் மட்டும் உண்டு. காரணம் அவ்வூரில் திருட்டுப் பயம் என்பதே இல்லை. இங்குள்ள காவல் நிலையத்தில் இதுவரை எந்த ஒரு குற்ற வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இவ்வூரில் திருடினால் சனி பகவான் தண்டித்து விடுவார் என்ற ஆழமான நம்பிக்கையே காரணம். வீடோ கடையோ வியாபாரம் முடிந்த பின் குறுக்கே ஒரு பலகையை வைத்து விடுவார்கள். இங்கு திருடுபவர்கள் கண் குருடாகியும் சித்தம் குழம்பியர்வகளாகவும் மாறி விடுவார்களாம். வாகனங்கள் கூட கதவு இல்லாத வாகனங்களையே உபயோகிக்கிறார்களாம். சனிக்கிழமை, சனிப்ரதோஷம், அமாவாசை, இங்கு வெகு ஜனக் கூட்டம் இருக்கும். அன்று அபிஷேக சிறப்பு வழிபாடுகள் உண்டு. ஏழரைசனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டமச்சனி உள்ளோர் இங்கு வழிபட நன்மைகள் கிட்டும்.
அருகிலுள்ள விமானதளம் : அவுரங்கபாத்
அருகிலுள்ள ரயில் நிலையம் : ஸ்ரீராம்பூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை