திருநாகேஸ்வரம் - நாகநாதசுவாமி கோயில்
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கில் காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் 6 கி.மீ தொலைவில் திருநாகேஸ்வரம் அமைந்துள்ளது.
மூலவர்.நாகேஸ்வரர், நாகநாதர்
உற்சவர்
அம்மன்/தாயார்:பிறையணி வானுதலாள் (கிரிகுஜாம்பிகை தனி சன்னதி)
தல விருட்சம்: செண்பகம்
தீர்த்தம்: சூரிய தீர்த்தம்
திருப்பதிகம் பாடியவர் : திருஞானசம்பந்தர்
“காளமேகந் நிறக்காலனோடு அந்தகன் கருடனும்
நீளமாய் நின்று எய்த காமனும் பட்டன நினைவுறின்
நாளுநாதன் அமர்கின்ற நாகேச்சர நண்ணுவார்
கோளும் நாளும் தீயவேனும் நன்காங் குறிக்கொண்மினே.”
சிறப்புகள் : இங்கு மூலவர் நாகேஸ்வரர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் ராகு பகவானுக்கு பாலபிஷேகம் செய்யும்போது , பால் நீல நிறத்தில் மாறுகிறது. இக்கோயிலில் ஒரே சன்னதியில் கிரிகுஜாம்பிகை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் காட்சி தருகின்றனர். பொதுவாக ராகு மனித தலை, நாக உடலுடன்தான் காட்சி தருவார். ஆனால், இக்கோயிலில் மனித வடிவில் காட்சி தருகிறார் இவருக்குகந்த நிறம் நீலம் என்பதால் அணிகின்ற ஆடை மட்டுமல்ல, இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தைப் பார்க்கலாம். இவருக்கு உகந்த மலர் மந்தாரை. 1986ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் நாள் ராகு பகவானின் மீது ஐந்தரை அடி நீளமுள்ள நாகமானது தனது சட்டையை மாலையாக இராகு பகவானுக்க் அணிவித்து இவரது பெருமையை உலகிற்கு உணர்த்தியது. அதை எடுத்து பத்திரப் படுத்திக் கண்ணாடிப் பேழைக்குள் வைத்திருக்கின்றனர்.
கோவில் அமைப்பு: ஒரு காலத்தில் இத்தலம் செண்பக வனமாக காட்சி அளித்தது. செண்பக மரத்து நிழலில் சிவபெருமான் லிங்க வடிவில் எழுந்தருளியிருந்தார். ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி இத்தலம் அமைந்துள்ளது. மற்ற 3 திசைகளிலும் கோபுரங்களையும் மூன்று பிரகாரங்களையும் கொண்டு விளங்குகிறது. கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே வந்ததும் நிருத்த கணபதி, நந்திதேவர் காட்சி தருகின்றனர். இடது பக்கம் சூரியபுஷ்கரணியும், வலது பக்கம் நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளன. புஷ்கரணி சமீபம் எழுந்தருளியுள்ள மழுவாயுதம் தரித்த விநாயகரைப் போற்றித் துதித்து உள்ளே செல்ல வேண்டும். கருவறையில் மூலவர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறை சுற்றுப் பிரகாரத்தில் 63 நாயன்மார்கள், நடராஜர் சந்நிதி, நால்வர் சந்நிதி ஆகியவை அமைந்துள்ளன. சேக்கிழார்,அவரது தம்பி பாலறாவாயர், அவர் தாயார் அழகாம்பிகை மூவருக்கும் இத்திருக்கோவிலில் தனி தனிச் சந்நிதி உள்ளது.
அம்பாள் பிறையணியம்பாள் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவள் தவிர, இக்கோயிலில் ஒரே சன்னதியில் கிரிகுஜாம்பிகை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் காட்சி தருகின்றனர். மார்கழியில் இந்த மூன்று அம்பிகைக்கும் புனுகு சாத்துகின்றனர். அப்போது 45 நாட்கள் இந்த அம்பிகையரை தரிசிக்க முடியாது. இந்நாட்களில் அம்பிகையின் சன்னதி முன்புள்ள திரைச்சீலைக்கே பூஜை நடக்கிறது. தை கடைசி வெள்ளியன்று இவரது சன்னதி முன்மண்டபத்தில் அன்னம், காய்கறி, பழங்கள் போன்றவற்றை படைக்கின்றனர். இவளது சன்னதியில் பாலசாஸ்தா, சங்கநிதி மற்றும் பதுமநிதியும் இருக்கின்றனர். இங்கு முத்தேவியரை வணங்கி, இவர்களை வழிபட குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை. நூற்றுக்கால் மண்டபம் சூரியதீர்த்த்தின் கரையில் மழுப்பொறுத்த விநாயகர் சந்நிதி, இரண்டாம் பிரகாரத்தில் நாகராஜா உருவமுள்ளது. சேக்கிழார் திருப்பணி செய்த மண்டபமுள்ளது. சேக்கிழார் அவர் தாயார், தம்பி உருவங்கள் உள்ளன. இத்தலத்திற்கு மிகு அருகில் ஒப்பிலியப்பன் திருக்கோயில் உள்ளது. இங்கு அன்னை தவக்கோலத்தில் காட்சி அளிக்கின்றாள். இவள் உருவம் சுதையால் ஆனதால் அபிஷேகம் செய்வதில்லை. புனுகுச் சட்டம் மட்டுமே சார்த்துகிறார்கள்.
தல வரலாறு: சிவபெருமானை மட்டுமே வணங்கி வந்தார் பிருங்கி முனிவர். இதனால் கோபம் கொண்ட பார்வதி சிவனிடம் அர்த்தநாரீஸ்வர வடிவம் வேண்டி கடும் தவம் புரிந்தாள். பார்வதியின் தவத்திற்கு மகிழ்ந்த இறைவன், அவளுக்கு தன் உடலில் பாதி கொடுத்து உமையொருவரானார். அர்த்தநாரீஸ்வர வடிவம் உலகின் பல பகுதிகளில் அமையவேண்டும் என வேண்டினாள். அதன்படி இத்தலத்தில் அர்த்தநாரீஸ்வர வடிவில் சிவ பார்வதி காட்சியளிக்கின்றனர். மூலவர் நாகேஸ்வரர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
சுசீலர் என்ற முனிவரின் மகன் சுகர்மன். ஒருசமயம் அவன் வனத்தின் வழியே சென்று கொண்டிருந்தபோது, நாக அரசனான தக்ககன் என்ற பாம்பு தீண்டியது. இதையறிந்த முனிவர் கோபம் கொண்டார். தன் மகனை தீண்டிய தக்ககன் மானிடனாக பிறக்கும்படி சபித்துவிட்டார். சாபவிமோசனம் பெற, தக்ககன் காசிப முனிவரிடம் ஆலோசனை கேட்டான். "பூலோகத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து, சிவபூஜை செய்து வழிபட்டால் சாபம் நீங்கும்' என்றார் அவர். அதன்படி பூமிக்கு வந்த தக்ககன், சிவலிங்க பூஜை செய்தான். சிவன் அவனுக்கு காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார். இவரே இத்தலத்தில் அருளுகிறார். நாகமாகிய தக்ககனுக்கு அருளியதால் இவர், "நாகநாதர்' என பெயர் பெற்றார்.
சிறந்த சிவபக்த கிரகமாகிய இராகு சில இடங்களில் மேன்மை பெற்று விளங்கிய போதிலும் நாகநாதசுவாமி கோயிலின் இரண்டாவது பிரகாரம் தென் மேற்கு மூலையில் நாகவல்லி, நாக்கன்னி ஆகிய தன் இரு தேவிமாருடன் மங்கள ராகுவாக தனிக்கோயிலில் அமர்ந்து காட்சி அளிக்கின்றார்.
ராகு தோஷ பரிகார வழிபாடு :ராகு பகவான் ஒரு சிறந்த சிவபக்தர். ராமேஸ்வரம், காளகஸ்தி, திருக்களர் ஆகிய திருத் தலங்களில் ராகு சிறப்பானவர் எனினும் திருநகேஸ்வரத்தில் மட்டுமே, தனது தேவியர் இருவருடன் தனிக் கோயில் கொண்டு அருள்பாளிக்கிறார். இத் தலத்தில் செய்யப்படும் பால் அபிஷேகம் மிகச் சிறந்த ராகு தோஷ நிவர்த்தியாகும். அர்ச்சனை, ஆராதனைகள் கூடுதல் சிறப்பு. 11 ஞாயிற்று கிழமைகள் துர்க்கைக்கு எலுமிச்சம் பழ தோலில் ஏற்றப்படும் நெய் தீபம் சிறந்த ராகு தோஷ பரிகாரமாகும். ராகு கால வேளைகளில் துர்க்கை வழிபாடு மிகச் சிறந்தது. அபிஷேக, ஆராதனைகள் முடித்த பின்னர் நவக்கிரக பீடத்தில் உள்ள ராகு பகவானை வலம் வர வேண்டும். கோமேதகம் கொண்ட ஆபரணங்களை அணிந்து கொள்ளலாம்.
வெள்ளியாலான சர்ப்பத்தையும், உளுந்து தானியத்தையும், கருப்பு வண்ண ஆடைகளையும் தானம் கொடுக்கலாம். நீல நிற ஆடை அணிந்து, ராகு பகவானுக்கு நீல நிற ஆடை அணிவித்தும், உளுந்து பொடி கொண்ட அன்னத்தை நைவேத்யம் செய்தும், மந்தார மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்தும், அருக்கு சமித்து தூபம் காண்பித்தும், நெய் விளக்கு ஏற்றியும் ராகு பகவானை வழிபட வேண்டும். அருக்கம் புல்லினால் விநாயகருக்கு செய்யப்படும் அர்ச்சனைகளும், ராகுவின் அதி தேவதைகளான காளி, பசு, பாம்பு வழிபாடும் ராகு பகவானுக்கு மிகவும் பிரீத்தியானவை.
இத்தலத்தில் ஒரு காலத்தில் பன்னிரண்டு தீர்த்தங்கள் இருந்கதாகக் குறிப்புக்கள் உள்ளன. இன்று கோயிலின் உள்ளேயே சூரிய புஷ்கரிணி என்ற ஒரு தீர்த்தம் காணப்படுகின்றது. இத்தீர்த்தத்தின் வலப் பக்கத்தில் நூற்றுக்கால் மண்டபம் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுவதோடு ஒரு தேரின் மீது இம்மண்டபம் அமைந்திருப்பதுபோல மண்டபத்தின் கீழே கற்களாலான சக்கரங்களுடன் சுற்றிலும் நாட்டியமாடுவது போன்ற உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
தரிசன நேரம்: காலை 6.00 முதல் பகல் 1.00 வரை, மாலை 4.00 முதல் இரவு 9.00 வரை, ராகு கால வேளைகளில் ராகு சன்னதி திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : திருச்சி 82 கி.மீ
அருகிலுள்ள ரயில் நிலையம் : கும்பகோணம் 6 கி.மீ
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு