விருந்திட்ட ஈஸ்வரர் கோவில், திருக்கச்சூர் ஆலக்கோவில்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாம்பரம் - செங்கல்பட்டு சாலையில் சிங்கப் பெருமாள் கோயில் என்னும் ஊரிலிருந்து மேற்கே, ரயில்வே கேட் தாண்டி 2 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு இரண்டு கோயில்கள் உள்ளன. ஊர் நடுவே உள்ள கோயில் 'கச்ச பேசம்' என்பதாகும்.
சுவாமி : கச்சபேசர், விருந்திட்டவரதர்
அம்பிகை : அஞ்சனாட்சியம்மை
தலமரம் : ஆல்
தீர்த்தம் : கூர்ம(ஆமை) தீர்த்தம்
பதிகம் : சுந்தரர் - 1
திருத்தலச் சிறப்புகள்: கச்சூர் என்பது ஊர்ப்பெயர். ஆலக்கோயில் என்பது கோயிலின் பெயர். இங்கு தியாகராஜர் சந்நிதி தனிச் சிறப்புடையது. சுந்தரர் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலம். அமிர்த தியாகேசர் என அழைக்கப்படுகிறார்.
இத்திருத்தலம் பாற்கடலைக் கடையும் போது மத்தாக விளங்கிய மந்தார மலையை திருமால் ஆமை வடிவம் கொண்டு தாங்கினார். அதற்குரிய ஆற்றலை திருமால் இப்பெருமானைப் பூசித்து பெற்றதால் 'கச்சூர்' எனப் பெயர் பெற்றது. இங்கு சுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர்.
மலையடிவாரக் கோயில்
சுவாமி : மருந்தீசர்
அம்பிகை : அந்தக நிவாரணி, இருள் நீக்கித் தாயார்
தலமரம் : வேர்ப்பலா
தீர்த்தம் : ஔஷதி தீர்த்தம்
திருத்தலச் சிறப்புகள்: இத்திருத்தலத்தின் கொடிமரத்தின் கீழ் உள்ள மண் திருநீற்றின் தன்மை கொண்டு விளங்குகிறது. இத்தலத்தில் சண்டேசுவரர் நான்கு திருமுகங்களோடு காட்சி தருவது சிறப்பு. சுந்தரர் வாக்கு "மாலை மதியே மலைமேல் மருந்தே" என்பதாம்.
இம்மலைக்கு மருந்துமலை, ஔஷதகிரி என்பது பெயர். மருந்து மூலிகைகளை அசுவினி தேவர்களுக்கு அருளிச் செய்ததால் இச்சிறப்புப் பெயர் உண்டாயிற்று. மூலிகையை மறைத்து இருந்த அறியாமையாகிய இருளை நீக்கியதால் அம்பிகைக்கு இருள் நீக்கித் தாயார் என்னும் பெயர் வழங்கலாயிற்று. அம்பாள் மேற்கு நோக்கி நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார். இத்திருத்தலத்தில் தான் சுந்தரர் பசித்திருந்த நிலையில் இறைவன் அந்தணர் வடிவம் கொண்டு, இரந்திரட்டு உணவு கொண்டு வந்து பசியாற்றுவித்தார்.
தலவரலாறு : தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்திற்காக பாற்கடலை கடைந்தார்கள். மந்தார மலையை மத்தாக்கி வாசுகி பாம்பைக் கயிறாக்கி பாற்கடலைக் கடையும் சமயத்தில் மந்தார மலை கனம் தாங்காமல் மூழ்கத் தொடங்கியது. அது கடலில் மூழ்காமல் இருக்க திருமால் ஆமை (கச்சபம்) வடிவெடுத்து மந்தார மலையின் அடியில் சென்று மலையை தாங்கி நின்றார். திருமால் இவ்வாறு ஆமை உருவில் மலையின் கனத்தைத் தாங்கக்கூடிய ஆற்றலை பெற இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டதாக வரலாறு கூறுகின்றது. ஆமை வடிவத்தில் வந்து சிவபெருமானை வழிபட்டதால் இத்தலம் திருக்கச்சூர் என்று பெயர் பெற்றது. இத்தலம் ஆதிக்கச்சபேசம் என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் உள்ள கச்சபேஸ்வரரை வணங்கினால் எல்லா தோஷங்களும் நீங்கி சுகம் உண்டாகும் என்று புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவபெருமான் சுந்தரருக்காக கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து, சுந்தரரின் பசியைப் போக்கிய தலம் என்ற பெருமையும் இத்தலத்திற்கு உண்டு. இத்தலத்திற்கு வந்த சுந்தரர் ஆலயத்தினுள் சென்று சிவபெருமானை பக்தியுடன் வழிபட்டு வெளி வந்தார். வெகு தொலைவில் இருந்து திருக்கச்சூர் வந்த காரணத்தால் களைப்பும், அதனுடன் பசியும் சேர்ந்து தள்ளாடியபடி கோவிலின் வெளியே உள்ள மண்டபத்தில் படுத்து கண்களை மூடினார். சுந்தரரின் நிலையைக் கண்ட இறைவன் கச்சபேஸ்வரர் ஓர் அந்தணர் உருவில் சுந்தரரின் தோளைத் தட்டி எழுப்பி தான் பிச்சை எடுத்து வந்த அன்னத்தினை வழங்க அன்னம் பலவித வண்ணங்களுடனும், பலவகை சுவையுடனும் இருப்பதைக் கூறி சுந்தரர் காரணம் கேட்க சமைத்து உணவு கொண்டுவர நேரம் இல்லாததால் பல வீடுகளுக்குச் சென்று பிச்சை வாங்கிவந்து உணவு கொடுத்ததாக அந்தணர் கூறினார். அந்தணர் செயலில் நெகிழ்ந்து போன சுந்தரர் எதிரே உள்ள குளத்திற்குச் சென்று கைகளைக் கழுவிக் கொண்டு திரும்பி வந்து பார்த்தால் அந்தணர் மறைந்து போயிருக்க கண்டார். இறைவனே தனக்காக திருக்கச்சூர் வீதிகளில் தனது திருவடிகள் பதிய நடந்து சென்று, பிச்சையெடுத்து அன்னமிட்டதை நினைத்து இறைவனின் கருணையைக் கண்டு மனம் உருகினார் சுந்தரர்.
கோயில் அமைப்பு : திருக்கச்சூர் தலம் ஆலக்கோவில் என்ற பெயருடனும் அழைக்கப்படுகிறது. இவ்வாலயத்தின் மூலவர் கச்சபேஸ்வரர் இருந்தாலும், இவ்வாலயம் தியாகராஜசுவாமி திருக்கோவில் என்றே அழைக்கப்படுகிறது. கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு கோபுரமில்லை. கோவிலுக்கு எதிரில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. இது கூர்ம தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது. திருமால் கூர்மாவதாரம் எடுத்தபோது இக்குளத்தை உண்டு பண்ணியதாகக் கருதப்படுகிறது. இக்குளத்திற்கு அருகில் தான் சுந்தரர் பசிக் களைப்பால் படுத்திருந்த 16 கால்மண்டபம் இருக்கிறது. மண்டபத் தூண்களில் அழகிய சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கிழக்கிலுள்ள நுழைவாயில் வழியாக உள்ளே சென்றவுடன் கிழக்கு வெளிபிரகாரத்தில் கொடிமரம் நந்தி பலிபீடம் ஆகியவை அமைந்துள்ளன. தெற்கு வெளிப் பிரகாரத்தில் 27 தூண்களை உடைய நட்சத்திர மண்டபம் உள்ளது. நட்சத்திர மண்டபத்தைக் கடந்து நேரே சென்றால் தியாகராஜர் சந்நிதி உள்ளது. இவர் உபயவிடங்கர் எனப்படுகிறார். மகாவிஷ்ணுவிற்கு இத்தலத்தில் இறைவன் தனது நடனத்கை காட்டி அருளியுள்ளார். நட்சத்திர மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் ஆமை உருவில் மகாவிஷ்ணு சிவலிங்கத்தை வழிபடும் சிற்பம் ஒன்று உள்ளது.
மண்டபத்தில் உள்ள தெற்கு வாயில் வழியே உள்ளே சென்றால் இறைவி அஞ்சனாட்சியின் சந்நிதி உள்ளது. நான்கு திருக்கரங்களுடன் நின்ற நிலையில் அம்பாள் அருள்பாலிக்கிறாள். வலம் வருவதற்கு வசதியாக அம்மன் சந்நிதி ஒரு தனிக் கோவிலாக உள்ளது. அம்பாள் சந்நிதி முன் உள்ள மண்டபத்திலிருந்து மற்றொரு கிழக்கு நோக்கிய வாயில் வழியாக உள்ளே சென்றால் கருவறையில் கிழக்கு நோக்கிய சந்நிதியில் இறைவன் கச்சபேஸ்வரர் காட்சி தருகிறார். திருமாலுக்கு அருளிய இவர் ஓர் சுயம்புலிங்கமாவார். கருவறை அகழி போன்ற அமைப்பு கொண்டது. கருவறை சுற்றில் தென்கிழக்கில் வடக்கு நோக்கிய நால்வர் சந்நிதியைக் காணலாம். கருவறை சுற்று வலம் வரும்போது வடக்குச் சுற்றின் வடகிழக்கு மூலையில் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது. கருவறை கோஷ்ட மூர்த்திகளாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். வடக்கு வெளிப்பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய முருகன் சந்நிதியும், விருந்திட்ட ஈஸ்ரவர் சந்நிதியும் அமைந்துள்ளது. வடக்கு வெளிப் பிரகாரததில் தெற்கு நோக்கிய பைரவர் சந்நிதியும் இருக்கிறது.
திருக்கச்சூர் கோவிலின் இணைக்கோவிலான மலைக்கோவில், ஆலக்கோவிலில் இருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
காலை 8 மணி முதல் நண்பகல் 11.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : சிங்கபெருமாள் கோயில்
பஸ் வசதி : இல்லை
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை