திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் மதுரை மாவட்டத்தில் இத்திருத்தலம் உள்ளது. மதுரை தமிழ்நாட்டில் உள்ள ஒரு முக்கிய நகரமாகும். மதுரை ரயில் நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் வைகையாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது, தமிழ்நாட்டின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் மதுரைக்கு ரயில் மற்றும் சாலை போக்குவரத்து வசதிகள் உண்டு.
சுவாமி : சோமசுந்தரக் கடவுள், சொக்கலிங்க நாதர்; சொக்க நாதர்; ஆலவாய் அண்ணல்
அம்பிகை : மீனாட்சியம்மை;, அங்கயற்கண்ணி
தலமரம் : கடம்பு
தீர்த்தம் : பொற்றாமரைக் குளம், வைகையாறு
பதிகம் : திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர்
சிறப்புகள்: பாண்டிய நாட்டு தேவாரத்தலங்கள் 14-ல் முதன்மை பெற்றது. வம்மிச சேகர பாண்டியன் ஆட்சி செய்து வந்த காலத்தில் ஆதிகாலத்தில் மக்களுக்கு இடம் போதாமையால் ஆதியில் இந்நகரத்திற்கு ஏற்பட்ட எல்லையைக் காட்டியருளுமாறு அவன் சிவபெருமானை வேண்டினான். பெருமானும் தனது திருக்கையில் கங்கணமாயுள்ள பாம்பை அளந்து காட்டுமாறு பணிக்க, அது வாலும், வாயும் ஒன்றுபடும்படி வட்டமாக வளைத்துக் காட்டியமையால் இப்பெயர்பெற்றது. இத்திருத்தலத்தில் உமாதேவியார் தடாதகைப் பிராட்டியாகத் தோன்றி அட்சி புரிய இறைவன் சோம சுந்தரராக வந்து பிராட்டியை மணந்து மதுரையை அரசாட்சி புரிந்தார். சங்கம் அமைத்துத் தமிழ் வளத்தைப் பெருக்கிய பதி. சிவபெருமான் 64 திருவிளையாடல்களை புரிந்த தலம் இது. மேலும் இத்தலத்தில் நீர் நெடுமாற நாயனார் மங்கையர்க்கரசியார் குலச்சிறை நாயனார் வாழ்ந்த பதி. திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலம். முக்தி தரும் தலங்களுள் ஏழனுள் ஒன்றாக உள்ள பதி. ஐந்து சபைகளுள் வெள்ளியம்பலத்தை கொண்டது. மாணிக்கவாசகரது பெருமையை அரிமர்த்தன பாண்டியனுக்கு அறிவுறுத்தி அவனை உய்விக்க செய்வதற்காக நரி பரியாக்கியது. பரி நரியாக்கியது ஆகிய திருவிளையாடல்கள் செய்த பதி.
இத்திருத்தலத்தின் ஆயிரக்கால் மண்டபம் தனிச் சிறப்புப் பெற்றது. இத்தலத்திற்கு சிவராச தானி, பூலோகக் கயிலாயம், கடம்பவனம், கூடல், நான்மாடக்கூடல் என்பன வேறு பெயர்கள். இத்தலத்தில் இறைவன் ராஜசேகரப்பாண்டியனுக்காகக் கால் மாறி ஆடிய தலம். இக்கோயிலுக்கு வடக்கே வடதிரு ஆலவாய்க் கோயில் - சொக்கநாதர் மீனாட்சியம்மை சந்நிதி உள்ளது. ஆதி சொக்கநாதர் கோயில் எனப்படும். குமரகுருபரர் மீனாட்சியம்மன் பிள்ளைத் தமிழ், கலம்பகம் முதலியன பாடியருளினார். இங்கு முறுக்குணி விநாயகர், சங்கர நாராயணர், சோமாஸ்கந்தர், அர்த்த நாரீசுவரர், காளி, அறுபத்து மூவர், கலைமகள், பிட்சாடணர், சித்தர், முருகர், காசி விசுவநாதர், நடராஜர், கால பைரவர், நவக்கிரகம் முதலிய சந்நிதிகள் உள்ளன.
தமிழ் சங்கங்களின் இருப்பிடமான மதுரை ஐந்து நிருத்த சபைகளில் ஒன்றான வெள்ளியம்பலம். சக்தியே பாண்டியன் மகளாய் பிறந்து, அரியணை ஏறி ஆட்சி புரிந்து, இறைவனை மணந்த இடம் இது. இறைவன் இங்கு தன் அன்பர்க்காக அறுபத்து நான்கு திருவிளையாடல்களை நிகழ்த்தியிருக்கிறார். சிவ தலங்கள் 16 தலங்கள் மிகவும் சிறப்புப் பெற்றவை. அதில் சிதம்பரம், காசி, திருக்காளத்தி, திருவாலவாய் (மதுரை) என்னும் நான்கு சிறப்பு வாய்ந்தவை. இத்தலங்களுள் தலைசிறந்தது திருவாலவாய் (மதுரை). இருப்பினும் இங்குள்ள சக்தியே இறைவனை விட முக்கியதுவம் பெறுகிறாள். இக்கோயில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்றே அழைக்கப்படுகிறது. கயிலைவாழ் சிவபெருமான் அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் புரிந்தருளிய பெருநகர். இங்குதான் முத்தமிழ்ச் சங்கங்கள் பொலிவுற்று விளங்கின.
சக்தி தல பீடங்களில் இது மந்திரிணி பீடம் என்றும் மனோன்மணி பீடம் என்றும் அழைக்கப்படுகிறது. சக்தி இங்குப் பாண்டியனின் மகளாக இருந்தாள். இவளுக்கு மந்திரிணிஇ இராஜாமாதங்கி என்ற திருப்பெயர்களும் உண்டு. இக்கோவில் கட்டப்பட்ட காலங்களில் எங்கும் சக்தி வழிபாடு நிரம்பி இருந்தது. எனவே இக்கோவிலிலும் கடவுளின் சக்தி ரூபமான அவதாரமே மேலாகப் பாராட்டப்பட்டு வருகின்றது. இந்த அஷ்ட சக்தி மகேஸ்வரி, பிராம்மி, நாராயணி, ஐந்திரி, கௌமாரி, வாராகி, நாரசிம்மி, அபராஜிதா என்று பெயர் பெற்;றவர்கள். இவர்களில் ஒவ்வொரு தேவதையும் அத்தேவதைக்கேற்பட்ட யந்திரத்தால் வணங்கப்பட வேண்டியவர்கள். யந்திரம் என்பது தங்கம், வெள்ளி முதலிய உலோகத்தகடுகளில் அல்லது காகிதத்தில் வைக்கப்படும். இந்த யந்திரங்கள் அதை அணிவோர்களுக்குச் சகலவித பாக்கிய சம்பத்துகளும் முக்தியும் அளிக்கக்கூடியது. இந்த யந்திரங்களில் முக்கியமானது ஸ்ரீ சக்கரம். இத்திருத்தலத்தில் மீனாட்சி அவதரித்ததிலிருந்து சுந்தரேஸ்வரை மணந்து கொண்டது வரையிலான விளக்கும் சித்திரங்களும் வரையப்பட்டுள்ளன. மேலும் அங்குள்ள சலவைக்கல்லில் 1330 குறட்பாக்களும் பொறித்து வைக்கப்பட்டுள்ளன. அஷ்ட லஷ்மிகளின் உருவங்களால் ஒரு மண்டபம் உள்ளது. ஒவ்வொரு கடவுளுக்கும் பக்கத்தில் அந்த கடவுளின் சக்தி ரூபமான அன்னைகளும் சேர்ந்து உள்ளனர். விஷ்ணு லஷ்மி, பிரம்மா, சரஸ்வதி போல சேர்த்தே வழிப்படப்பட்டு வருகிறார்கள்.
இம்மதுரைக்கு ஆலவாய், கடம்பவனம், கூடல், நான் மாடக் கூடல், கன்னிபுரீசம், சிவராஜதானி, சிவநகரம், சமஷ்டி விச்சாபுரம், சீவன் முத்திபுரம், சிவலோகம், துவாத சாந்தபுரம் என்னும் திருப்பெயர்களும் உண்டு. இங்குள்ள பொற்தாமரைத் தீர்த்தத்திறகு சிவகங்கை, ஆதி தீர்த்தம், அருட்சிவ தீர்த்தம், முக்தி தீர்த்தம், தரும தீர்த்தம், அருத்த தீர்த்தம், காம தீர்த்தம், மோட்ச தீர்த்தம் என்று பல பெயர்களும் உண்டு. பொற்தாமரை தீர்த்தம் என்பது இந்திரன் இறைவனை வழிப்படுவதற்கு இங்கு தான் பொன் தாமரை மலரைப் பெற்றான் என்று கூறப்படுகிறது. கடல்கள், மேகங்கள், கங்கை, காவிரி முதலியவை தோன்றுவதற்கு முன்னே இறைவனால் இத்தீர்த்தம் உண்டாக்கப்பட்டது என்பர். இதனால் இது ஆதித் தீர்த்தம் என்றும், பரம தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.
அம்மன் ஆலயத்தில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடைப்பெற்றாலும், சித்திரை திருவிழாவும், தை மாதத்தில் நடைபெறும் தெப்பத் திருவிழாவும், ஆவணி மாத ஆவணி மூல விழாவும் சிறப்புடையது ஆகும். சிற்ப வேலைப்பாடுகள் அதிகம் உள்ள இத்தலத்தில் ஆயிரம் கால் மண்டபம் உள்ளது. இது ஸ்ரீரங்கத்தின் ஆயிரம் கால் மண்டபத்தை விட சிறப்பானது. ஏனேனில், இங்குள்ள கல்தூணில் ஏழு ஸ்வரங்கள் ஒலி எழுப்புவதாகக் கூறப்படுகிறது.
கோயில் அமைப்பு : இயற்கையின் அழகிய பின்னனியில் விண்ணளாவி நிற்கும் பெருங்கோபுரங்கள் 3 கி.மீ தொலைவினின்றே நம்மை வரவேற்கின்றன. கோயில் நகரின் நடுநாயகமாக அமைந்துள்ளது. மதுரைக் கோயிலில் அன்னை மீனாட்சிக்கே முதலில் வழிபாடு நடைபெறுகிறது. எனவே கோயிலுக்குச் செல்பவர்கள் கிழக்கு வீதியிலமைந்த அம்மன் சந்நிதி வாயில் வழியாக உள்ளே செல்வது வழக்கம்.
அஷ்டசக்தி மண்டபம் : அம்மன் கோவிலின் முன்பகுதி அஷ்டசக்தி மண்டபம். வாயிலில் விநாயகர், முருகன் உருவங்களிடையே மீனாட்சி கல்யானம் சுதை வடிவில் காட்சியளிக்கிறது. உள்ளே அமைந்துள்ள எட்டு பெருந்தூண்களையும் அஷ்டசக்திகளின் சிலைகள் அழகு செய்கின்றன. திருவிளையாடற் புராணக் காட்சிகள் நிறைந்த இம்மண்டபத்தில் மீனாட்சி, சமயக்குரவர், துவாரபாலகர், விநாயகர், சுப்பிரமணியர் சிலைகளும் உள்ளன.
மீனாட்சி நாயக்கன் மண்டபம் : அஷ்டசக்தி மண்டபத்திலிருந்து மீனாட்சி நாயக்கன் மண்டபத்தை அடையலாம். மேலே யாளியும் கீழே சிறு சிற்பங்களும் நிறைந்த ஆறு வரிசைத் தூண்கள் இம்மண்டபத்தை அலங்கரிக்கின்றன. இம்மண்டபத்தையும் அஷ்டசக்தி மண்டபத்தையும் இணைக்கும் ஒரு சிறுமண்டபத்தில் வேடன், வேட்டுவச்சி சிலைகள் காணப்படுகின்றன. மீனாட்சி நாயக்கன் மண்டபத்தின் மேற்குக் கோடியில் ஆயிரத்தெட்டு சிறு விளக்குகளைக் கொண்ட பித்தளையாலான திருவாட்சி கண்களைக் கவரும் அமைப்புடையது.
முதலிப்பிள்ளை மண்டபம் : மீனாட்சி நாயக்கன் மண்டபத்தை அடுத்துள்ளது இருட்டு மண்டபம் என்று அழைக்கப்படும் முதலிப்பிள்ளைமண்டபம். இங்குள்ள பிட்சாடனர், அவர் அழகில் மயங்கி நிற்கும் தாருகாவனமுனி பத்தினியர், மோகினி, விநாயகர், முருகன் மற்றும் இம்மண்டபத்தைக் காட்டிய கடந்தை முதலியார் ஆகியோர் சிற்பங்கள் கலையழகு மிக்கவை.
பொற்றாமரக்குளம் : முதலிப்பிள்ளை மண்டபத்தைக் கடந்து இந்திரன் பூஜைக்கு பொன்மலர் பறித்ததாகக் கூறப்படும் பொற்றாமரைக் குளத்திற்கு சென்றால் திருக்குறள் இங்க வைத்துத்தான் சங்கத்தாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பர். பொற்றாமரைக் குளம் நீண்ட சதுர வடிவில், அழகிய படிகட்டுகளுடன் அமைந்துள்ளது. வடக்குக் கரையிலுள்ள தூண்களில் சகப்புலவர்கள் 24 பேர்களின் சிலைகளைக் காணலாம். இரு தூண்களில், இக்கோயிலை முதன் முதலில் கண்ட தனஞ்சயன் எனும் வணிகனும், கோயிலையும் நகரையும் அமைத்த குலசேகர பாண்டியனும் காட்சியளிக்கின்றனர். சுவர்களில் திருவிளையாடற் புராணகாட்சிகள் வர்ணப்படங்களாக தீட்டப்பட்டுள்ளன. கிழக்கு கரையில் நின்று பார்த்தால் சுவாமி, அம்மன் கோயில்களின் தங்க விமானங்களைத் தரிசிக்கலாம். தெற்குக்கரை மண்டபத்தில் திருக்குறள் முழுவதும் வெண்சலவைக் கற்களில் செதுக்கி சுவரில் பதிக்கப்பெற்றது.
ஊஞ்சல் மண்டபம் : பொற்றாமரைக்குளத்தின் மேற்குப் பக்கம் ஊஞ்சல் மண்டபம் இருக்கிறது. இங்கு சலவைக் கல் தூண்கள் கொண்ட ஊஞ்சல் மேடையும், உயரே விட்டங்களில் முருகனின் அறுபடைவீடு சித்திரங்களும் உள்ளன. குளக்கரையை அடுத்துள்ள நிலைமாடத்தில் இராணி மங்கம்மா, அமைச்சர் இராமப்பய்யன் ஆகியோர் உருவங்களைக் காணலாம்.
கிளிக்கூட்டு மண்டபம் : ஊஞ்சல் மண்டபத்தை அடுத்துள்ள கிளிக்கூட்டு மண்டபத்தில் பஞ்சபாண்டவர், வாலி, சுக்ரீவன், புருஷா மிருகம், திரௌபதி முதலிய அழகிய சிற்பங்களைப் பார்க்கலாம். மண்டபத்தின் மேல்விதானத்தில் விநாயகர், முருகன், சிவபெருமான் முதலியோரின் பல்வேறு தோற்றங்கள் வர்ணச் சித்திரங்களாக மிளிர்கின்றன. அம்மன் சந்நிதிக்கு நேராக மீனாட்சியின் திருக்கல்யாணம், முடிசூட்டும் கோலம் ஆகிய இருபெரும் ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன.
அம்மன்கோவில் : கிளிக்கூட்டு மண்டபத்திலிருந்து வேம்பத்தூரர் கோபுர வாயில் வழி அம்மன் சந்நிதிக்குச் செல்லலாம். அம்மன் கோயிலுக்கு இரு பிரகாரங்கள் உள்ளன. இரண்டாம் பிரகாரத்தில் தங்கக் கொடிமரம், திருமலை நாயக்கர் மண்டபம், விநாயகர், கூடற்குமாரர் சந்நிதிகள், செம்பாலான இருபெரும் துவாரபாலகர்கள் ஆகியவை இருக்கின்றன. கடற்குமரர் சந்நிதியில் அருணகிரிநாதரின் பாடல்கள் செதுக்கப்பட்டு;ள்ளன. இப்பிரகாரத்திலுள்ள ஆறுகால் பீடத்தில்தான் குமரகுருபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் அரங்கேற்றப்பட்டது. இதன் வாயில் வழி உள்ளே அம்மன் கோயில் மகா மண்டபத்தை அடையலாம். இதுவே முதல் பிரகாரம். இங்கு ஐராவத விநாயகர், முத்துக்குமாரர் சந்நிதிகளும், பள்ளியறையும், கருவறையையும் காணலாம். கருவறையில் கையில் கிளியுடன் செண்டேந்தி நிற்கும் மீனாட்சியைத் தரிசிக்கின்றோம். கருணை பொழியும் கண்களுடன் அகிலமெல்லாம் அருள் பாலிக்கும் அன்னை அங்கயற்கண்ணியின் கருவறை அமைந்துள்ளது.
முக்குறுணி விநாயகர் : அன்னையை வணங்கியபின் சுவாமி கோயிலுக்குச் சென்றால் கிளிக்கூட்டு மண்டபம் வழியாக நடுக்காட்டுக் கோபுர வாயிலைக் கடந்து செல்லும் போது நம்மை எதிர் நோக்கியிருப்பவர் முக்குறுணி விநாயகர். எட்டு அடி உயரமுள்ள இவ்விநாயகர், திருமலை நாயக்கர் வண்டியூர் தெப்பக்குளம் வெட்டுகையில் அங்கே கண்டெடுக்கப் பட்டவர் என்பர்.
சுவாமி கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் சங்கப்புலவர், ஞானசம்பந்தர் கோயில்கள் இருக்கின்றன. மண்டப நாயக மண்டபத்தில் நடராஜர் சிலையைக் காணலாம். இப்பிரகாரத்திலேயே சுவாமி சந்நிதிக்கெதிரே கம்பத்தடி மண்டபம் இருக்கிறது.
கம்பத்தடி மண்டபம் : அற்புதமான சிற்பங்கள் பலவற்றை தாங்கி, சிற்பக் கலைக்கே ஒரு அரிய எடுத்துக்காட்டாக விளங்கி, காண்போர் மனதைக் கொள்ளை கொள்ளும் விதத்தில் அமைந்துள்ளது. மண்டபத்தின் நடுவே சந்நிதியும், பலிபீடமும் தங்கக் கொடிமரமும் உள்ளன. சுற்றியுள்ள எட்டுத்தூண்களும் ஈடு இணையற்ற அழகிய சிலைகளைத் தாங்கி நிற்கின்றன. முப்புரம் எரித்த சிவன், சோமஸ் சுந்தர், அர்த்தநாரீஸ்வரர் போன்ற சிவபெருமானின் பல்வேறு தோற்றங்கள். திருமாலின் தசாவதாரக் காட்சிகள் முதலிய சிற்பங்களைக் கண்டு மகிழலாம். இவையாயினும் சிறந்த சிற்பம் மீனாட்சி சுந்தரேசர் திருமணத்தைச் சித்தரிப்பதாகும். அழகிலும் அமைப்பிலும் முகபாவத்திலும் இதற்கு இணையான ஒரு சிற்பத்தைக் காண்பது அரிதான ஒன்றாகும். மீனாட்சியின் வதனத்தில் காணும் மகிழ்ச்சி, நாணம், மலர்ச்சி, சுந்தரர் முகத்தில் தோன்றும் மிடுக்கு, ஆண்மை, கம்பீரம் இவற்றையெல்லாம் கல்லில் எவ்வாறு சமைக்க முடிந்தது என நினைத்து வியந்து பாராட்ட தோன்றும். கம்பத்தடி மண்டபத்தை அடுத்து இரு தூண்களில் அக்கினி வீரபத்திரர், அகோர வீரபத்திரர் சிலைகளும், மற்றிரு தூண்களில் ஊர்த்துவ தாண்டவர், காளி இவர்களின் உருவங்களும் காட்சியளிக்கின்றன.
சுவாமி சந்நதி : சுவாமி சந்நிதிக்கு செல்லும் வாயிலில் இருபுறமும் 12 அடி உயரமுள்ள துவாரபாலகர்கள் நிற்கின்றனர். அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோரின் சிறு உருவங்களையும் காணலாம். உள்ளே முதல் பிரகாரத்தில் திருவிளையாடல் புராணம் அரங்கேற்றப்பட்ட ஆறுகால் பீடம் உள்ளது. அதில் செப்பாலான துவாரபாலகர் சிலைகள் உள்ளன. சுற்று மண்டபத்தில் 63 நாயன்மார்களையும், கலைமகள் கோயிலையும் காணலாம். உற்சவ மூர்த்தி, காசிவிசுவநாதர், பிட்சாடனர், சித்தர், துர்க்கை ஆகியோர் கோயில்களும் இருக்கின்றன. ஸ்தல விருட்சமான கடம்ப மரத்தையும், கனகசபை, யாகசாலை, இரத்தினசபை, சாட்சி கூறிய வன்னி கிணறு ஆகியவற்றையும் இந்த பிரகாரத்தில் காணலாம். ஆறுகால் பீடத்தை கடந்து வெள்ளியம்பலத்தை அடையலாம். இங்கே கால்மாறியாடிய நடராஜனின் அழகிய வடிவை வணங்கியபின் கருவறைக்குச் செல்லலாம். கருவறை இந்திரவிமானம் என்று அழைக்கப்படுகிறது. இவ்விமானத்தை எட்டு யானைகளும், 32 சிங்கங்களும், 64 பூத கணங்களும் தாங்கி நிற்பதாக அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் உள்ளே லிங்க வடிவில் சுந்தரேஸ்வரர் என்றெல்லாம் அழைக்கப்படும் சொக்கநாதரை வணங்கி அருள் பெறலாம்.
ஆயிரங்கால் மண்டபம் : இந்த மண்டபம் கோயிலின் மற்ற மண்டபங்களைவிட பெரியது. வாயிலின் மேற்கு விதானத்தில் தமிழ் வருடம் அறுபதையும் காட்டும் சக்கரம் ஒன்று செதுக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் முன் பகுதியிலுள்ள கண்ணப்பர், பிட்சாடனர், சந்திரமதி, குறவன், குறத்தி முதலிய சிலைகளின் அழகுகளை கண்டு மகிழலாம். உள்ளே கணக்கற்ற சிற்பங்கள் நிறைந்த 985 தூண்கள் உள்ளன. இத்தூண்களை எந்த கோணத்தில் நின்று பார்த்தாலும் அவை நேரான வரிசையில் அமைந்திருப்பது மிக வியப்பளிக்கும். நிருத்த கணபதி, சரஸ்வதி, அர்ஜுனன், ரதி, மோகினி, மன்மதன், கலி போன்ற இருபது அற்புத சிற்பங்களை இங்கு காணலாம். மண்டபத்தின் மறுகோடியின் நடுவே நடராஜரின் அழகிய சிலை உள்ளது. இம்மண்டபத்தில் கலைப்பொருட்காட்சி ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. கலையழகும் தெய்வீக ஒளியும் வீசும் தெய்வங்களின் விக்ரகங்களையும் மற்றும் பல தொல்பொருட்களையும் இங்கு கண்டு மகிழலாம்.
மங்கையர்கரசி மண்டபம் : ஆயிரங்கால் மண்டபத்திற்கு தெற்கே புதிதாக அமைக்கப்பட்டுள்ளது மங்கையர்கரசி மண்டபம். இங்கு கூன் பாண்டியன், மங்கையர்க்கரசி, ஞானசம்பந்தர், குலச்சிறையார் ஆகியோர் சிலைகள் இருக்கின்றன. நடுவே லிங்கம் ஒன்றும் உள்ளது.
கோபுரங்கள் : சுவாமி அம்மன் கோயில்களை வலம் வரும்படி அமைந்த முற்றம், ஆடி வீதி என அழைக்கப்படுகிறது. ஆடிவீதியில் கோயிலின் நான்கு பெரிய 9 நிலைக் கோபுரங்கள் உள்ளன. தெற்குக் கோபுரம் மற்றக் கோபுரங்களை விட உயர்ந்தது. இதன் உயரம் 160 அடி. இதன் பக்கங்கள் சற்று வளைவாக இருப்பது தனி அழகாயிருக்கிறது. வடக்கு கோபுரத்தில் சுதைகள் குறைவாதலால் இது மொட்டைக் கோபுரம் என அழைக்கப்படுகிறது. கிழக்கு கோபுரம் மிக பழமையானது. மேலும் சித்திரக்கோபுரம், வேம்பத்தூரர் கோபுரம், நடுக்கட்டுக் கோபுரம், இடபக்குறியிட்ட கோபுரம் முதலிய பல சிறிய கோபுரங்கள் கோயிலுக்கு அழகையும் சிறப்பையும் அளிக்கின்றன. வடக்கு ஆடிவீதியில் பெரிய கோபுரத்தை அடுத்து, ஐந்து இசைத்தூண்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் 22 சிறு தூண்களைக் கொண்டது. தட்டினால் விதவிதமான இன்னிசை எழுப்புகின்றன இந்த அதிசயத்துதூண்கள். கோயிலுக்கு வெளியே, கிழக்குக் கோபுரத்திற்கு எதிரே வசந்த மண்டபம் எனப்படும் புது மண்டபம் இருக்கிறது. தடாதகை, மீனாட்சி கல்யாணம் போன்ற அழகிய சிற்பங்களுடன் திருவிளையாடற்புராணக்கதைகளும் பல சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. கல்யாணை கரும்பு தின்பதும், இராவணன் கைலையைத் தூக்குவதும் மிக அழகிய சிற்பங்கள். இம்மண்டபத்தை கட்டிய திருமலை நாயக்கர் மற்றும் சில மன்னர்களின் சிலைகளையும் இங்கே காணலாம். இம்மண்டபத்தின் நடுவே அழகிய கருங்கல் மேடையொன்றும் உள்ளது.
இராயகோபுரம் : புதுமண்டபத்திற்கு எதிரே ஒரு பெரிய கோபுரத்திற்கான அடித்தளம் காணப்படுகிறது. அதன் அளவைப் பார்க்கும்போது, இராய கோபுரம் என்ற இக்கோபுரம் இந்தியாவிலேயே மிகப்பெரிய கோபுரமாக அமைந்திருக்கும் என்று தெரிகிறது.
புராணக் கதைகள்
தடாதகை : மதுரையை ஆண்ட மலயத்துவஜ பாண்டியனும் அவன் மனைவி காஞ்சனமாலையும் மகப்பேறு வேண்டி யாகம் செய்தனர். வேள்வியினின்று உமாதேவி மூன்று தனங்களுடைய பெண் குழந்தையாகத் தோன்றினாள். குழந்தையின் உருவம் கண்டு கலங்கிய மன்னன், அவள் தனக்கேற்ற கணவனைக் காணும் போது ஒரு தனம் மறையும் என்ற அசரீரி வாக்கு கேட்டு மனம் அமைதியுற்றாள். குழந்தைக்கு தடாதகை எனப் பெயரிட்டு, அருங்கலைகள் யாவும் கற்பித்து வளர்த்து வந்தான். தடாதகை மலயத்துவஜனுக்குப் பின் அரியணை ஏறினாள். போர்க்கலையில் தேர்ச்சி பெற்ற தடாதகை நாற்றிசையும் வென்று சிவபெருமானுடன் போரிட கைலையை அடைந்தாள். அங்கு இறைவனைக் கண்டதும் அவள் மூன்றாம் தனம் மறைய அவரே தன் கணவன் என உணர்ந்து மகிழ்ந்தாள். இறைவனும் மதுரை வந்து தடாதகையை மணம் புரிந்து சௌந்தரிய பாண்டியன் என்னும் பெயருடன் அரியணை அமர்ந்து ஆட்சி புரிந்தான். பின்னர் முருகன் அவதாரமான உக்கிர பாண்டியனுக்கு முடிசூட்டிவிட்டு, கோயில் சென்று மீனாட்சி சுந்தரேசராக இறைவடிவாயினர்.
இந்திர தீவினை தீர்த்தல் : ஒரு சமயம் இந்திரன் தன்னைப் பிடித்த பிரம்ம ஹத்தி தோஷம் நீங்குவதற்காக தல யாத்திரை சென்து கொண்டிருந்தான். பாண்டிநாட்டுக் கடம்பவனத்திலிருந்த ஒரு லிங்கத்தை வழிபட்டதும் அவன் தீவினை நீங்கியது. மகிழ்ச்சியுற்ற இந்திரன் அந்த லிங்கத்தின் உயரே ஒரு விமானத்தை அமைத்துச் சென்றான். அன்று முதல் அங்கு தேவ பூஜை நடைபெற்று வந்தது. பல ஆண்டுகளுக்குப் பின் தனஞ்சயன் எனும் வணிகன் இரவில் அந்த கோயிலில் தங்கினான். அப்போது அங்கு தேவ பூஜை நடந்துவருவது கண்டு வியப்புற்று மணவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்த குலசேகரப்பாண்டியனிடம் கூற, அரசன் கடம்பவனம் சென்று இறைவனை வழிபட்டான். பின்னர் இறைவன் கட்டளைப்படியே கோயிலையும் மதுரை நகரையும் அமைத்தான்.
விமானதளம் : மதுரை
ரயில் நிலையம் : மதுரை
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு