திருமேனியழகர் கோவில், திருமயேந்திரப்பள்ளி
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிதம்பரத்தில் சீர்காழி சாலையில் கொள்ளிடம் ஆச்சாள்புரம் வழியாக சென்று நல்லூர் முதலைமேடு ஆகிய ஊர்களைக் கடந்து திருமயேந்திரப்பள்ளி அடையலாம். சிதம்பரம், சீர்காழியிலிருந்து மயேந்திரப்பள்ளிக்கு ஆச்சாள்புரம் வழியாக நகரப் பேருந்துகள் செல்கின்றன. மகேந்திரப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 1/2 கி.மீ. தொலைவில் ஆலயம் உள்ளது.
சுவாமி : சிவலோகத்தியாகர், சிவலோகத் தியாகேசர், பெருமணமுடைய மகாதேவர்.
மூலவர் : திருமேனியழகர்
அம்பிகை : வடிவாம்பிகை
தல விருட்சம் : கண்ட மரம், தாழை
தீர்த்தம் : மயேந்திர தீர்த்தம்
பதிகம் : திருஞானசம்பந்தர்
சிறப்புகள் : பங்குனி மாதத்தில் ஒரு வார காலம் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. ஆலயத்தில் நவக்கிரக சன்னதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. விநாயகருக்கு தனிசன்னதி இருக்கிறது. இவருக்கு இருபுறமும் ராகு, கேது இருவரும் உள்ளனர். இத்தல இறைவனை சூரியன், சந்திரன், இந்திரன், பிரம்மா ஆகியோர் வழிபட்டுள்ளனர்.
கோவில் அமைப்பு: கொள்ளிட நதியின் தென்கரையில் அமைந்துள்ளது. இந்திரன் வழிபட்டதால் இத்தலத்திற்கு மகேந்திரப்பள்ளி என்று பெயர். திருமேனியழகர் ஆலயம் கிழக்கு நோக்கி மூன்று நிலைகளை உடைய சிறிய இராஜ கோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. கோவில் எதிரே மயேந்திர தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்தில் ஒரு மண்டலம் நீராடி இறைவனை வழிபடுவேர் தீராத நோயும் நீங்கி நலம் பெறுவர் என்பது ஐதீகம். விநாயகர், காசிவிசுவநாதர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருமால், சிவலிங்கம், பைரவர், சூரியன், சந்திரன் சந்நிதிகள் ஆகியவற்றைக் காணலாம். பிரகார வலம் முடித்து வெளவால் நெத்தி மண்டபத்தை அடைந்தால் வலதுபுறம் நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கி காட்சி தரும் அம்பாள் சந்நிதி உள்ளது. மேலும் வலதுபுறம் நடராசசபையில் நடராஜருடன் சிவகாமியும் மாணிக்கவாசகரும் உடன் காட்சியளிக்கின்றனர். நேரே சிவலிங்கத் திருமேனியாக மூலவர் கிழக்கு நோக்கு எழுந்தருளியுள்ளார்.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஓரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் சிங்காரவேலனாக ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நீன்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.
தல வரலாறு : இந்திரன், கௌதம முனிவரின் மனைவியான அகலிகை மீது ஆசை கொண்டதால், அவரிடம் உடம்பெல்லாம் கண்ணாகும்படி முனிவரால் சபிக்கப்பட்டான். பாவ விமோசனத்திற்காக பூலோகம் வந்த அவன், பல தலங்களில் லிங்க பிரதிஷ்டை செய்து, சிவனை வழிபட்டான். அதில் ஒன்று தான் மகேந்திரப்பள்ளியாகும்.
திருஞானசம்பந்தர் இத்தலப் பதிகத்தில் மயேந்திரப்பள்ளியின் இயற்கை வளங்களை சிறப்பித்துக் குறிப்பிடுகிறார். ஆனால் இன்றைய மயேந்திரப்பள்ளி இவ்வாறு உள்ளதா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். கடலலைகள் அடித்துவரும் பவளங்களும், சிறப்புடைய வைரமும், கரையிலே ஒதுக்கப்பட்ட அகில் மரங்களும், கனமான சங்குகளும் நிறைந்த திருமயேந்திரப்பள்ளி என்றும். மேகத்தைத் தொடும்படி உயர்ந்த கோபுரங்களும், அழகிய மாளிகைகளும், நீர்முள்ளியும், தாழையும், தாமரைகள் மலர்ந்துள்ள குளங்களும், வண்டுகள் உலவுகின்ற சோலைகளுமுடைய திருமயேந்திரப் பள்ளி என்றும். கோங்கு, வேங்கை, செழுமையான மலர்களையுடைய புன்னை, தேன் துளிகளையுடைய கொன்றை, சிறந்த மலர்களை உடைய குரவம் முதலிய மரங்கள் நிறைந்த சோலைகளும், மாமரங்களும், கரும்புகள் நிறைந்த வயல்களும் உடைய திருமயேந்திரப்பள்ளி என்றும் வாணிகத்தின் பொருட்டு மிக்க நெடுந்தூரம் சென்ற கப்பல்கள் திரும்பிவரும் குறிப்பினை ஊரிலுள்ளவர்களுக்கு உணர்த்த ஊதப்படும் சங்குகளின் ஒலியும், அகிற்கட்டைகளால் தூபம் இடுகின்ற போது உண்டாகும் நறுமணம் கமழும் புகையுமுடைய திருமயேந்திரப்பள்ளி என்றும். இறைவனை வழிபட மலர்களைக் கையால் ஏந்தி வருவது போல, பல முத்துக்குவியல்களை அழகிய கடலானது அலைகளால் கரையினில் சேர்க்கும் திருமயேந்திரப்பள்ளி என்றும். இத்தலத்தை தனது பதிகப் பாடல்களில் சம்பந்தர் வர்ணிக்கிறார்.
தினந்தோறும் காலை 9.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் 7.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : சிதம்பரம், சீர்காழி
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை