பஞ்சவர்ணேஸ்வரர் கோவில், திருமூக்கிச்சரம்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சி மாவட்டத்தின் தலைநகரான திருச்சியிலிருந்து மேற்கே 2 கி.மீ தொலைவில் உள்ள இத்திருவூர் உறையூர் கோழியூர் என்று வழங்கப்படுகிறது.
சுவாமி : பஞ்சவர்ணேஸ்வர்
அம்பிகை : காந்திமதியன்னை
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : சிவதீர்த்தம்
பதிகம் : திருஞானசம்பந்தர் - 1
திருத்தலச் சிறப்புகள்: இத்தலம் உதங்க முனிவருக்கு இறைவன் ஐந்து காலங்களில் ஐந்து வண்ணங்களுடன் காட்சி தந்த தலம். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம். இத்தலம் சோழ மன்னர்களின் தலைநகராக விளங்கிய பகுதி. புகழ்ச் சோழ மன்னர் ஆட்சி புரிந்த பதி. சோழ வேந்தன் சூர ஆதித்தன் கோயிலை சீர்திருத்தி திருக்கோயில் திருப்பணி புரிந்தார். மூவேந்தருஞ் சேர்ந்து வழிபட்ட திருவூர். கருடன் காசிபர் மனைவி கத்ரு இவள் மகன் கார்க்கோடன் முதலியோர் வழிபட்ட திருவூர்.
இத்திருத்தலம் கலைச் சிற்பங்கள் நிறைந்த கோயில். இவ்வூரில் அழகிய மணவாளப் பெருமாள் கோயில் தனியே உள்ளது. இங்கிருந்து கிழக்கே 1 கி.மீ. தொலைவில் வெஃகாளி அம்மன் கோயில் சிறப்புடன் விளங்குகின்றது. சுவாமி கிழக்கு நோக்கியும் அம்பாள் தெற்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர். இங்கு விநாயகர், முருகர், நடராஜர் சபை, தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், திருமால், பிரம்மன், துர்க்கை, பிட்சாடணர் முதலிய சந்நிதிகள் உள்ளன.
தலவரலாறு : உறையூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த சோழ மன்னனின் மனைவி காந்திமதி ஒரு சிறந்த சிவபக்தை. தினந்தோறும் திருச்சிராப்பள்ளி மலைக்குச் சென்று தாயுமானவரை வழிபட்டு வந்தாள். அவள் பிள்ளைப் பேறு அடைந்த போதும் தவறாமல் வழிபாடு செய்து வந்தாள். ஒரு நாள் உறையூரிலிருந்து திருச்சிராப்பள்ளி சென்று கொண்டிருந்தபோது வெய்யில் கொடுமை தாளாமல் வழியில் மயங்கி விழுந்தாள். தனது இறைவழிபாடு தடைபட்டு விட்டதே என்று மிகவும் மனம் வருந்தினாள். காந்திமதியின் மனவருத்தத்தைப் போக்க விரும்பிய இறைவன் அந்த இடத்திலேயே காந்திமதிக்கு காட்சி தந்தார். இறைவன் சுயம்புவாகத் தோன்றியதால் 'தான்தோன்றீஸ்வரர்' என்ற பெயர் பெற்றார். மற்றொரு தலவரலாறும் இத்தலத்திற்கு உண்டு.
சோழ மன்னன் ஒருவன் தன் பட்டத்து யானை மேல் ஏறி உறையூரை வலம் வந்து கொண்டிருந்த போது யானைக்கு மதம் பிடித்து எல்லோரையும் துன்புறுத்த ஆரம்பித்தது. யானையை அடக்க முடியாமல் மன்னனின் படை வீரர்கள் கலங்கினர். சிவபெருமான் மீது தீராத பக்தியுள்ள மன்னன் இறைவனை நினைத்து பிரார்த்தனை செய்தான். சிவபெருமானும் கருனை கூர்ந்து உறையூர் தெருவிலுள்ள ஒரு கோழியை தன் கடைக்கண்ணால் நோக்க அக்கோழியும் அசுர பலம் பெற்று பறந்து சென்று யானையின் மத்தகத்தின் மீதமர்ந்து அதை குத்தித் தாக்கியது. கோழியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் யானை மிரண்டு ஓடி ஒரு வில்வ மரததடியின் கீழ்நின்றது. கோழியும் அங்கே வந்தமர்ந்தது. கோழியின் வீரச் செயலைக் கண்ட மன்னன் உறையூர் தலத்தின் மகிமையை உணர்ந்து தான் வணங்கும் சிவபெருமானுக்கு இத்தலத்தில் ஆலயம் ஒன்று எழுப்பினான். இத்தலமும் கோழியூர் என்ற பெயரில் சிறப்புடன் விளங்கியது. இத்தல வரலாற்றை நினைவுபடுத்தும் விதமாக கோயில் மூலவர் கருவறை வெளிச்சுற்றில் வலதுபுறம் யானையின் மதத்தை கோழி அடக்கும் படைப்புச் சிற்பம் ஒன்றை காணலாம்.
கோயில் அமைப்பு : ஆலயத்தில் நுழைந்தவுடன் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் மூடிய நந்தியைக் காணலாம். கோவிலில் மகாமண்டபம், அர்த்த மண்டபம் கடந்து சென்றால் மூலவர் கருவறை இருக்கிறது. இங்கு சிவபெருமான் உதங்க முனிவருக்கு ஐந்து வர்ணமுடைய திருக்கோலத்தை ஐந்து சாமங்களில் காட்டியருளினார். ஆகையால் இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். கருவறையில் மூலவர் லிங்க உருவில் அகன்ற ஆவுடையார் மீது தான்தோன்றீஸ்வரர் என்ற பெயருடன் அருள்பாலிக்கிறார். இறைவி காந்திமதி அம்மை வடக்கு நோக்கி தனி சந்நிதியில் கையில் அங்குசமும், தாமரை மலரும் வைத்துக் கொண்டு அருள் புரிகிறாள். இச்சந்நிதிக்கு அருகில் மஹாவிஷ்ணு, சூரியன், காலபைரவர் மற்றும் சனீஸ்வரன் ஆகியோரின் உருவச் சிலைகள் உள்ளன.
தினந்தோறும் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : திருச்சி
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு