எறும்பீஸ்வரர் கோவில், திருவெறும்பூர்
இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சி மாவட்டத்தின் தலைநகரான திருச்சியிலிருந்து தஞ்சை செல்லும் வழியில் 13 கி.மீ. தொலைவில் உள்ளது. எறும்பியூர் ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
சுவாமி : எறும்பீஸ்வரர், மதுவனவேசுவரர், மணிகூடாசலமதி, மாணிக்கநாதர்
அம்பிகை : நறுங்குழல் நாயகி, சவுந்தர நாயகி, மதுவனவிசுவதி, ரத்தினம்மாள்
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம் குமார தீர்த்தங்கள்
பதிகம் : திருநாவுக்கரசர் - 2
திருத்தலச் சிறப்புகள்: திருமால் நைமிச முனிவர், பிரம்மா, இந்திரன், முருகன், அகத்தியர், ஆகியோர் வழிபட்ட திருவூர் ஆகும். தேவாரப் பாடல் பெற்ற இத்திருத்தலம் தேவாரப் பதிகங்களில் எறும்பியூர் என அழைக்கப்படுகிறது. பாய்லர் ஆலை நிர்வாகத்தின் முயற்சியில் மலைக்கோவில் ஓர் அற்புதமான நந்தவனக் கோவிலாக விளங்குகிறது.
இத்தலம் மலைக்குன்றின் மீது கிழக்கு முகமாக அமைந்துள்ளது. 115 படிக்கட்டுகளைக் கொண்டது. மலைமேல் இரண்டு பிரகாரங்கள் உள்ளன. இங்கு எழுந்தருளியிருக்கும் விநாயகர், பாலசந்திர விநாயகர் என்னும் திருநாமம் பூண்டுள்ளார். தாருகாசுரனை வெல்லக் கருதி தேவர்கள் சிவபெருமானை வழிபடுவதற்காக இத்திருத்தலம் வந்தனர். தேவர்கள் எறும்பு வடிவம் கொண்டு ஈசனைப் பூசிக்க எண்ணி. சிவலிங்கத்தின் மேல் உள்ள என்னைப் பசையால் மேலேற முடியாது கஷ்டப்பட்டதைக் கண்ட இறைவன் திருவுள்ளம் கனிந்து தேவர்களுக்காக சொரசொரப்பான மண்புற்றாக மாறி தேவர்கள் மேலேறி பூசிக்கும்படி திருமுடி சாய்ந்து கொடுத்தார். இதனால் இத்தலத்தில் உள்ள சிவலிங்கம் ஒருபுறம் திருமுடி சாய்வாக காட்சி தருகிறது.
தல வரலாறு : தாரகாசுரன் என்ற கொடிய அரக்கன் தேவர்களை துன்புறுத்தினான். அவர்கள் நாரதரிடம் சென்று கொடுமைகளிலிருந்து விடுபட வழி சொல்லும்படி வேண்டினர். நாரதர் திருச்சிராபள்ளி அருகே உள்ள இத்தலத்திற்குச் சென்று சிவபெருமானை வழிபட்டு அவரிடம் முறையிடும்படி ஆலோசனை கூறினார். தேவர்களும் அதன்படி இங்கு வந்து அசுரன் கண்ணில் படாமல் இருக்க எறும்பு உருவில் இருந்த தேவர்கள் லிங்கத்தின் மீதேறி இறைவனை வழிபட மிகவும் சிரமப்பட்டனர். இறைவன் அவர்கள் சிரமத்தைப் பார்த்து தன் லிங்க உருவை ஒரு எறும்புப் புற்றாக மாற்றிக் கொண்டார். இதன் காரணமாக இத்தலம் 'எறும்பியூர்' என்றும் இறைவன் எறும்பீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.
கோயில் அமைப்பு : ஒரு சிறிய குன்றின் மீது இவ்வாலயம் எழில் மிகுந்து காணப்படுகிறது. கருவறை முற்றும் கற்களால் கட்டப்பட்டுளளது. நுழைவு வாயில் வடக்கு திசையில் உள்ளது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கருவறை நுழைவாயிலின் இருபுறமும் விநாயகர், முருகன் ஆகியோரின் உருவச்சிலைகள் உள்ளன. கருவறை உள்ளே மூலவர் எறும்பேஸ்வரர் கிழக்கு நோக்கி காணப்படுகிறார். இறைவி நறுங்குழல் நாயகியின் சந்நிதி வெளிப்பிரகாரத்தில் தெற்கு நோக்கி உள்ளது உட்பிரகாரத்தில் சோமசகந்தர், முருகன், கஜலெட்சுமி, காசி விஸ்வநாதர், லெட்சுமி, பைரவர் ஆகியோர் உருவச் சிலைகள் உள்ளன. நவக்கிரக சந்நிதியில் சூரியன் இரு மனைவியரோடு காட்சி தருகிறார்.
தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : எறும்பியூர்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை