நித்யசுந்தரர் கோவில், திருநெடுங்களம்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சி மாவட்டத்தின் தலைநகரான திருச்சியிலிருந்து கிழக்கே 21 கி.மீ. தொலைவில் உள்ளது. திருச்சி - தஞ்சாவூர் ரயில் மார்க்கத்தில் உள்ள சோலகம்பட்டி ரயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. திருச்சி - தஞ்சாவூர் சாலையில் துவாக்குடி வரை சென்று அங்கிருந்து பிரியும் சாலையில் 5 கி.மீ சென்றால் இத்தலத்தை அடையலாம். தற்போது 'திருநட்டாங்குளம்' என்றும் வழங்கப்படுகிறது.
சுவாமி : நெடுங்கள நாதர், நித்திய சுந்தரேசுவரர்
அம்பிகை : மங்கள நாயகி, ஒப்பிலா நாயகி
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : அகத்திய தீர்த்தம், சுந்தர தீர்த்தம்
பதிகம் : திருஞானசம்பந்தர் - 1
திருத்தலச் சிறப்புகள்: அகத்தியர் வழிபட்ட தலம். வங்கிய சோழவேந்தனுக்கு சிவபெருமான் திருவருள் புரிந்த தலம். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம். தவம் செய்த அம்பிகையை இறைவன் கள்ள உருவில் தோன்றி கைத்தலம் பற்ற இறைவி அச்சம் கொண்டு ஓடி ஒளிந்த தலமாதலால் 'ஒளிமதிச்சோலை' என்று வழங்குகிறது. இத்தலத்திலுள்ள வெண்கலக்குதிரை விந்தையான அமைப்புடையது. மகாமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள சோழர்கால கல்உரல் சிறந்த வேலைப்பாடமைந்தது. ராஜகோபுரத்தில் சுதை சிற்பங்கள் அழகாக வடிக்கப்பட்டுள்ளன. இத்தலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சித்தாசனத்தில் அமர்ந்து மேற்கரங்களில் மான் மழுவும் கீழ்கரங்களில் சின் முத்திரையும், திருநீற்றுப் பெட்டகமும் ஏந்தி இடக்காலைச் சுற்றியவாறு யோக நிலையில் காட்சி தருகிறார். மூலஸ்தானத்தில் இரு விமானங்கள் காட்சியளிக்கின்றன.
இத்திருத்தலத்தில் சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கியது. அம்பாள் சந்நிதி வெளியே தனிக் கோயிலாகத் தெற்கு நோக்கியது. ஆடி மாதத்தில் சுவாமி மீது நாள்தோறும் காலை நேரங்களில் சூரியனின் கதிர்கள் பதியும் சிறப்பினைக் காணலாம். பிரகாரத்தில் விநாயகர், முருகர், சோமாஸ்கந்தர், சப்தகன்னியர், ஐயனார், அகத்தீசுவரர், நடராஜர், துர்க்கை, நால்வர், சூரியன், பைரவர், வரதராசப்பெருமாள், யோக தட்சிணாமூர்த்தி முதலிய சந்நிதிகள் உள்ளன.
கோவில் அமைப்பு: கோயில் இரண்டு கோபுரங்களுடனும்,இரண்டு பிரகாரங்களுடனும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் முன்னால் திருக்குளம் உள்ளது. 5 நிலை கோபுரத்தில் அழகிய சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் கொடிமரமும், பலிபீடமும் உள்ளன. வெளி பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் திருக்கல்யாண மண்டபமும், அம்பாள் சன்னதியும் உள்ளது. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. நின்ற திருக்கோலத்தில் நானகு கரங்களுடன்அம்பாள் காட்சி தருகிறாள். வடக்கு வெளிப் பிரகாரத்தில் அகஸ்தியர் சன்னதியும், இதன் எதிரே அகஸ்தியர் தீர்த்தமும் உள்ளது. இதில் எக்காலத்திலும் தீர்த்தம் வற்றவே வற்றாது. இரண்டாம் கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் உள்பிரகாரத்தில் தென்கிழக்கில் சோமாஸ்கந்தர், சந்திரசேகர் சன்னதிகள் உள்ளது. தென்பிரகாரத்தில் சப்தகன்னியர்களும், தட்சிணாமூர்த்தியும், ஐயனாரும் அருள்பாலிக்கிறார்கள். கன்னி மூலையில் வலம்புரி விநாயகருக்கு தனி சன்னதி உள்ளது. மேற்கு பிரகாரத்தில் தெய்வானையுடன் முருகன் தனி சன்னதி உள்ளது. தெற்கு பக்கத்தில் உபய நாச்சியார்களுடன் வரதராஜப்பெருமாள் சன்னதியும் உள்ளது.
தினந்தோறும் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : சோலகம்பட்டி
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை