பசுபதீஸ்வரர் கோவில், ஆவூர் பசுபதீச்சரம்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கே 13 கி.மீ தொலைவில் உள்ளது. கும்பகோணம்-மன்னார்குடிச்சாலையில் வலங்கைமான் வந்து அங்கிருந்து கோவந்தகுடி வழியாக இத்தலத்தை அடையலாம்.
சுவாமி : பசுபதீசுவரர், அஸ்வத்த நாதர், ஆவூடையார்
அம்பிகை : மங்களாம்பிகை, பங்கஜவல்லி
தலமரம் : அரசு
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், காமதேனு தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம்
பதிகம் : திருஞானசம்பந்தர் - 1
திருத்தலச் சிறப்புகள்: இத்தலத்து வில்லேந்திய வேலவர் தனிச் சிறப்புடையவர். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம். ஊர் பெயர் ஆவூர் பசுக்கள் வழிபட்ட திருவூர் எனவே பசுபதீச்சரம் எனப் பெயர் பெற்றது. கயிலையிலிருந்து பெயர்ந்து வந்த சிகரத்தின் மீது மாடக் கோயிலாக உள்ளது. மணிகூடகிரி, அசுவத்த வனம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள்.
தல வரலாறு: ஒருசமயம் ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் தமக்குள் யார் வலியவர் என்பதில் போட்டி எழுந்தது. ஆதிசேடன் கயிலையைத் தன் ஆயிரம் மகுடங்களாலும் இறுகப்பற்றிக் கொள்ள, வாயுதேவன் சண்டமாருதமாக மலையை அசைக்க முற்பட்டு பலத்த காற்றை வீசினார். இந்த இருவரின் போட்டியால் தேவர்கள் அஞ்சினர். தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி ஆதிசேடன் தன்பிடியைச் சிறிது தளர்த்தினார். இது தான் தக்க சமயமென்றெண்ணி வாயு இரு சிகரங்களைப் பெயர்த்துக் கொண்டு வந்து தென்னாட்டில் ஒன்றை ஆவூரிலும், மற்றொன்றை அருகிலுள்ள திருநல்லூரிலும் விடுவித்தான்.
வசிஷ்டரால் சாபம் பெற்ற காமதேனு, பிரம்மாவின் அறிவுரைப்படி உலகிற்கு வந்து இத்தலத்தில் இறைவனை வழிபட்டு தன் சாபம் நீங்கப் பெற்ற தலம். ஆ (பசு) வழிபட்டதால் இத்தலம் ஆவூர் என்று பெயர் பெற்றது. காமதேனு இவ்வுலகிற்கு முதலில் வந்தடைந்த கோவிந்தகுடி என்ற இடம் அருகிலுள்ளது. ஆலயத்தின் கொடிமரத்தில் பசு சிவலிங்கத்தின் மீது பால் சொரிந்து வழிபடும் சிற்பமுள்ளது.
கோவில் அமைப்பு: கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோவில்களில் ஆவூர் பசுபதீஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். 5 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன நம் கண்ணில் படுவது கிழக்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம். இறைவன் சந்நிதி ஒரு கட்டுமலை மீது அமைந்துள்ளது. தெற்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள படிகள் மூலம் ஏறி இறைவன் குடிகொண்டுள்ள கட்டுமலையை அடையலாம். கட்டுமலை ஏறி உள்ளே நுழைந்தால் மகாமண்டபம், அர்த்த மண்டபம், அதையடுத்து கருவறையில் மூலவர் பசுபதீஸ்வரர் சுயம்பு லிங்கத் திருமேனி உருவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். மகாமண்டபத்தில் வடபுறம் தெற்கு நோக்கி மங்களாம்பிகை, பங்கஜவல்லி என இரண்டு அம்பாள் சந்நிதிகள் அமைந்துள்ளன. இதில் மங்களாம்பிகை குளத்திலிருந்து எடுத்துப் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். பங்கஜவல்லி அம்மன் மிகவும் பழைமையானது. சம்பந்தர் தனது தேவாரப் பதிகத்தில் 3-வது பாடலில் பங்கய மங்கை விரும்பும் ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடுநாவே என்று குறிப்பிட்டிருந்தாலும், இத்தலத்தில் சிறப்பு வாய்ந்த சந்நிதி மங்களாம்பிகை அம்பாள் சந்நிதியே.
இத்தலம் ஒரு பஞ்ச பைரவத் தலம் என்ற சிறப்பைப் பெற்றது. மகாமண்டபத்தில் மேற்கு நோக்கு 4 பைரவ மூர்த்திகளும், வடக்கு நோக்கி ஒரு பைரவ மூர்த்தியும் சுயம்புவாக அமைந்த திருக்கோலத்தை நாம் தரிசிக்கலாம். பைரவ மூர்த்தி வழிபாடு இங்கு மிகவும் சிறப்புடையதாகும். அஷ்டமி திதியன்று கூட்டு எண்ணையால் விளக்கேற்றி வழிபாடு செய்து வந்தால் பில்லி, சூன்யம், ஏவல் மற்றும் செய்வனையால் ஏற்படும் சகலவித கோளாறுகளும் நீங்கும். மரண பயம், வாகன விபத்து அபாயம் நீங்கும், பெற்றோர் பிள்ளகளுக்கு இடையில் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை நிலவும. தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிணக்குகள் நீங்கி நல்ல முறையில் சேர்ந்து வாழ்வர். இந்த பைரவர்கள் அசிதாங்க பைரவர், குரு பைரவர், சண்ட பைரவர், கால பைரவர் மற்றும் உன்மத்த பைரவர் எனப்படுவர்.
இத்தலத்தில் தசரதர் சிவபெருமானை வழிபட்டுள்ளார். தசரதர் ஈசனை வழிபடும் சிற்பத்தை உட்பிரகாரத்தில் நாம் காணலாம். சப்த மாதர்களின் திருஉருவங்களும் உட்பிரகாரத்திலுள்ளன. நவக்கிரக சந்நிதியும் இங்குள்ளது. இத்தல முருகன் வில்லேந்திய வேலனாகக் காட்சியளிக்கிறார். வள்ளி தெய்வானையுடன் வில்லேந்தி காட்சி தரும் முருகனின் சந்நிதி மேற்கு வெளிப் பிரகாரத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. காமதேனு தீர்த்தம் வழக்கில் தேனுதீர்த்தம் என்று சொல்லப்படுகிறது.இத்தலத்தில் இரு அம்பிகைகளில் மங்களாம்பிகை குளத்திலிருந்து எடுத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. மற்றொன்று பங்கஜவல்லி இதுவே பழமையானது.
இத்திருத்தலம் சுங்கப் புலவர்கள் ஆவூர் கிழார். ஆவூர் மூலங்கிழார் முதலியோர் வாழ்ந்த பதி. மேலும் இத்திருத்தலத்தில் காமதேனு, பிரம்மன், சப்தரிஷிகள், கணங்கள், தேவர்கள், இயக்கர்கள், இந்திரன், சூரியன், திருமால், நவக்கிரகங்கள், தசரத சக்கரவர்த்தி முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்றனர்.
தினந்தோறும் காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : கும்பகோணம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை