கற்பகநாதர் கோவில், திருவலஞ்சுழி
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து மேற்கே 4 கி.மீ தொலைவில் இத்தலம் உள்ளது. சுவாமி மலை ரயில் நிலையத்திற்கு வடக்கே 1 கி.மீ தொலைவில் உள்ளது இத்தலம்.
சுவாமி : வலஞ்சுழிநாதர், செஞ்சடை நாதர், கற்பநாதேசுவரர், கபர்த்தீசுவரர்
அம்பிகை : பிருகந்நாயகி, பெரிய நாயகி
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : காவிரி, அரசலாறு, ஜடாயு தீர்த்தம்
பதிகம் : திருநாவுக்கரசர் - 1, திருஞானசம்பந்தர் - 3
திருத்தலச் சிறப்புகள்: இத்திருத்தலத்தில் ஏராண்ட முனிவர், ஆதிசேஷன், உமா தேவியார், இந்திரன், திருமால், பிரம்மன் முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்ற தலமாகும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம்.
இத்தலம் கடல் நுரைகொண்டு இந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஹரித்துவஜன் காவிரியை அழைத்து வந்தான். காவிரி ஒரு பாதாளத்தினுள் (பிலத்தினுள்) ஒளிந்து கொண்டாள். ஏராண்ட முனிவர் அக்குகைக்குள் புகுந்து காவிரியை வெளிக் கொண்டு வந்தார். அப்போது காவிரி, நீரைச் சுழித்துக் கொண்டு வலமாகச் சென்றாள். இதனால் இத்திருத்தலம் வலஞ்சுழி எனப் பெயர் பெற்றது. இங்குள்ள அஷ்டபுஜகாளி, பைரவர், சனீசுவரர், வாணி முதலிய சந்நிதிகள் தனிச் சிறப்புடையன.
இத்தலத்திலுள்ள விநாயகர் 'ஸ்வேத விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார். தேவர்கள் திருப்பாற்கடலை கடையத் தொடங்கும் முன் விநாயக பூஜை செய்ய மறந்தார்கள். ஆகையால்தான் ஆலகால விஷம் பாற்கடலில் வெளிவந்தது. அதனால் அவதிகளுக்கு உட்பட்ட தேவர்கள் தங்கள் தவறை உணர்ந்து பொங்கி வந்த கடல் நுரையை பிடித்து பிள்ளையாரை உருவாக்கி இத்தலத்தில் வைத்து பூஜை செய்தனர். அதன் பின் அமுதம் பெற்றார்கள். தேவர்களால் உருவாக்கப்பட்ட இவருக்கு அபிஷேகம் கிடையாது. சுமார் 10 அங்குல உயரமே உள்ள இந்த வெள்ளைப் பிள்ளையாருக்கு புனுகு மட்டும் சாத்துவார்கள்.
தல வரலாறு: காவிரி நதி வலமாக சுழித்துச் செல்லும் இடத்தில் அமைந்துள்ளதால் இத்தலம் திருவலஞ்சுழி என்று பெயர் பெற்றது. அவ்வாறு வலம் சுழித்துச் சென்ற காவிரியில் இருந்து வெளிப்பட்ட ஆதிசேஷனால் ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டது. பாய்ந்து வந்த காவிரியாறு ஆதிசேஷன் வெளிப்பட்ட பள்ளத்தில் பாய்ந்து பாதாளத்தில் இறங்கிவிட்டது. அதுகண்ட சோழமன்னன் கவலையுற்றுத் திகைத்தபோது, அசரீரியாக இறைவன், "மன்னனோ மகரிஷியோ இறங்கி அப்பாதாளத்தில் பலியிட்டுக் கொண்டால் அப்பிலத்துவாரம் மூடிக்கொள்ளும். அப்போது காவிரி வெளிப்படும்" என்றருளினார். அதுகேட்ட மன்னன் கொட்டையூர் என்ற ஊரில் ஏரண்டம் என்னும் கொட்டைச் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ள இடத்தில் தவம் செய்த ஏரண்ட முனிவரையடைந்து அசரீரி செய்தியைச் சென்னான். இதைக் கேட்ட ஏரண்ட முனிவர் நாட்டுக்காகத் தியாகம் செய்ய முன்வந்தார். அவர் அந்த பிலத்துவாரத்தில் இறங்கி தன்னைப் பலி கொடுக்கவும் பள்ளம் மூடிக்கொள்ள காவிரி வெளிப்பட்டாள. ஹேரண்ட முனிவருக்கு இக்கோவிலில் சிலை இருக்கிறது. இன்றும் மஹாசிவராத்திரி நாளில் இரவில் நான்கு ஜாமங்களிலும் ஆதிசேஷன் வெளிப்பட்டு திருவலஞ்சுழி, திருநாகேச்சுரம், திருப்பாம்புரம், நாகைக்காரோணம் என்னும் தலங்களில் வந்து வழிபடுவதாக சொல்லப்படுகிறது.
கோவில் அமைப்பு: திருவிடைமருதூருக்குரிய பரிவாரத் தலங்களுள் திருவலஞ்சுழி விநாயகருக்கு உரிய தலமாகும். இத்தலத்திலுள்ள கற்பகநாதேஸ்வரர் கோவில் ஒரு பெரிய கோவில். கிழக்கு நோக்கி உள்ள ஒரு இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது. அம்பாள் பெரியநாயகியின் சந்நிதி இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் அமைந்துள்ளது. இத்தகைய அமைப்புள்ள தலங்கள் திருமணத் தலங்கள் என அழைக்கப்படுகின்றன.இறைவனுக்கும், இறைவிக்கும் உள்ள தனித்தனி சன்னதிகள் போக அஷ்டபுஜ மஹாகாளிக்கும், வெளிப் பிரகாரத்தில் பைரவருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. இங்குள்ள அஷ்டபுஜகாளி சிறப்பு வாய்ந்த மூர்த்தம். இங்குள்ள பைரவமூர்த்தி மிகவும் உக்கிரமம் வாய்ந்தவராக விளங்கியமையால் அதைத் தணிப்பதற்காகச் சிறிது பின்னப்படுத்தப் பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. சனீஸ்வரலுக்கும் இவ்வாலயத்தில் தனி சந்நிதி உள்ளது.
கடல் நுரையால் செய்யப்பட்டு இந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்தியே ஸ்வேத விநாயகர் என்ற வெள்ளைப் பிள்ளையார் ஆவார். இவரே இத்தலத்தின் சிறப்பு மூர்த்தியாவார். இப்பிள்ளையார் உள்ள மண்டபம் இந்திரனால் அமைக்கப்பட்டது என்று புராணங்கள் கூறுகின்றன. சித்திரத் தூண்களும், கல்குத்துவிளக்கும் கொண்ட அழகான மண்டபமாக இது விளங்குகிறது. இச்சந்நிதியிலுள்ள கருங்கல் பலகணி நுணக்கமான சிற்ப வேலைப்பாடுடன் திகழ்கிறது. இத்தலம் திருமுறைத் தலம் என்பதைவிட வெள்ளை விநாயகர் தலம் என்ற பெயரிலேயே மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது.
இத்லத்தின் தீர்த்தங்களாக காவிரி, அரசலாறு, ஜடாதீர்த்தம் ஆகியவையும், தலமரமாக வில்வமரமும் உள்ளது. ஹேரண்ட முனிவர், ஆதிசேஷன், உமையம்மை, இந்திரன், திருமால், பிரமன் ஆகியோர் வழிபட்ட தலம் என்ற பெருமையும் திருவலஞ்சுழிக்கு உண்டு. இத்தலம் ஒரு திருப்புகழ் தலம். இங்கு உள்பிராகாரத்திலுள்ள முருகப்பெருமான் ஆறு திருமுகங்களும், பன்னிரு கரங்களும் கொண்டு மயில் மீதமர்ந்து கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
தினந்தோறும் காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : சுவாமிமலை
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை