மஹாலிங்கேஸ்வரர் கோவில், திருவிடைமருதூர்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் கும்பகோணத்திற்கு வடகிழக்கே 8 கி.மீ தொலைவில் திருஇடைமருதூர் இரயில் நிலையம் உள்ளது. தஞ்சையிலிருந்து 51 கி.மீ. தூரத்தில் உள்ளது.
சுவாமி : மகாலிங்கேசுவரர், மருதவனேசுவரர், மருதவாணர்
அம்பிகை : பிருகத் சுந்தரகுஜாம்பிகை, பெருநலமாமுலையம்மை
தலமரம் : மருத மரம்
தீர்த்தம் : காருண்ய, அமிர்த, தீர்த்தம், காவிரி
பதிகம் : திருநாவுக்கரசர் - 5, திருஞானசம்பந்தர் - 5, சுந்தரர் - 1
திருத்தலச் சிறப்புகள்: காவிரிக்கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமமாக கருதப்படுகின்றன. அவற்றில் திருவிடைமருதூர் தலமும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருச்சாய்காடு (சாயாவனம்), 3.திருவெண்காடு, 4. திருவாஞ்சியம் மற்றும் 5. மயிலாடுதுறை ஆகியவை ஆகும். இத்திருத்தலம் வரகுண பாண்டியனுக்கு பிரமகத்தி தோஷம் நீக்கிய தலம். இக்கோயிலை வலம் வந்தால் பேய், பைத்தியம் விலகும். பாடல் பெற்ற பத்து தலங்கள் சுற்றியிருக்க நடுநாயகமாக விளங்கும் தனிச்சிறப்பு இத்தலத்திற்கு உண்டு. இதனாலேயே இது திரு இடை மருதூர் எனப் பெயர் பெற்றது. இத்தலம் அம்பிகை, அகத்தியர், மகரிஷிகள், முனிவர்கள் என பலரும் வழிபட்ட பழமையான தலம் ஆகும். இங்கு கோயில் முன்பு ஒரு பெரிய தேவநந்தி உள்ளது. தைப்பூச விழாவின் போது அறுபத்து மூன்று நாயன்மார் உலா நடக்கிறது.
இத்திருத்தலத்தில் ஈசனே எழுந்தருளியிருந்து பூஜை செய்ய வேண்டிய பூஜாவிதிகளை ஏற்படுத்தியதாகத் தல புராணம் கூறுகிறது. பொதுவாக ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள் இந்த லிங்க மண்டபத்திற்குச் சென்று பரிகாரம் தேடிக் கொள்வது நல்லதாகும். 27 நட்சத்திரங்களையும் வலம் வருவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. இக்கோவில் பிரகாரத்தில் நமசிவாய என்று சொல்லும் போது அத்திருநாமம் எதிரொலிப்பதனைக் கேட்கலாம். தென்னாட்டில் மூன்று மருத வனங்கள் அமைந்துள்ளன. அவற்றுள் மத்திய பாகத்தில் அமைந்துள்ள 'மத்யார்சனம்' திருவிடை மருதூர் எனும் சிறப்பு பெயர் பெற்று விளங்குகிறது. வடக்கிலுள்ள ஸ்ரீசைலம் தலம் 'மல்லிகார்ஜுனபுரம்' என்றும், தெற்கில் உள்ள திருநெல்வேலி அருகிலுள்ள திருப்புடைமருதூர் தலம் 'ஜுடார்ஜுனம்' என்றும் அழைக்கப்படுகின்றன.
சந்திரன் தனது குருவான பிரகஸ்பதியின் மனைவி மீது ஆசை கொண்டான். எனவே அவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டது. தோஷம் நீங்க மகரிஷியின் ஆலோசனைப்படி இத்தலம் வந்து இறைவனை வணங்கி சாபம் நீங்கப்பெற்றான். சந்திரன் இங்கு வந்தபோது அவனது மனைவியர்களான 27 நட்சத்திரங்களும் இங்கு வந்தன. சந்திரனுக்கு அருளிய சிவன் நட்சத்திரங்களை இங்கேயே தங்கும்படி செய்தார். இவை இங்கு தோன்றிய 27 லிங்கங்களில் ஐக்கியமாயின. இவை ஒரே சந்நிதியில் உள்ளன. பிறந்தநாளில் பக்தர்கள் தங்களுக்குரிய நட்த்திரங்களின் முன் நெய்விளக்கேற்றுகின்றனர்.
கோயில் அமைப்பு : இவ்வாலயம் மிகவும் பழமை வாய்ந்தாகும். இவ்வாலயம் மூன்று பிரகாரங்களை கொண்டதாகும். இம்மூன்று பிரகாரங்களிலும் வலம் வருவது மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. வெளிப்பிரகாரத்தில் கோவிலை வலம் வந்தால் அஸ்வமேத யாகம் செய்த பலனைக் கொடுக்கும் என்று புராண வரலாறுகள் கூறுகின்றன. இரண்டாவதும் மத்தியில் உள்ள பிரகாரம் கொமுடிப் பிரகாரம். இப்பிரகாரத்தை வலம் வந்தால் சிவபெருமான் குடியிருக்கும் கைலாச பர்வதத்தை வலம் வருவதற்குச் சமம் என்று புராண வரலாறு கூறுகிறது. மூன்றாவதாகவும், உள்பிரகாரமாகவும் இருக்கும் இப்பிரகாரம் ப்ரணவப் பிரகாரம் ஆகும். இப்பிரகாரத்தை வலம் வந்தால் மோட்சம் கிடைக்கும் என்று புராணம் கூறுகிறது.
இத்தலத்தை சுற்றியுள்ள சில ஆலயங்கள் திருவிடைமருதூரின் பரிவார தேவதைத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை:
1. திருவலஞ்சுழி - விநாயகர்
2. சுவாமிமலை - முருகர்
3. திருவாரூர் - சோமஸ்கந்தர்
4. சிதம்பரம் - நடராஜர்
5. ஆலங்குடி - தட்சிணாமூர்த்தி
6. திருவாவடுதுறை - நந்திகேஸ்வரர்
7. திருசேய்னலூர் - சண்டிகேஸ்வரர்
8. சீர்காழி - பைரவர்
9. சூரியனார் கோவில் - நவக்கிரகம்
திருத்தல வரலாறு : ஒருசமயம் வரகுணபாண்டியன் அருகிலுள்ள காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். மாலை நேரம் முடிந்து இரவு தொடங்கிவிட்ட நேரத்தில் அரசன் குதிரை மீதேறி திரும்பி வந்து கொண்டிருக்கும் போது வழியில் உறங்கிக் கொண்டிருந்த அந்தணன் குதிரையின் காலில் மிதிபட்டு இறந்துவிட்டான். இச்சம்பவம் அவனறியாமல் நடந்திருந்தாலும் ஒரு அந்தணனைக் கொன்றதால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டது. அந்தணின் ஆவியும் அரசனைப் பற்றிக்கொண்டது. சிறந்த சிவபக்தரான வரகுணபாண்டியன் மதுரை சோமசுந்தரரை வணங்கி இதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். சோமசுந்தரக் கடவுளும் அரசனுடைய கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும்படி கூறினார். எதிரி நாடான சோழநாட்டிலுள்ள திருவிடைமருதூருக்கு எப்படிச் செல்வது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த அரசனுக்கு சோழ மன்னன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்து வந்திருக்கும் செய்தி கிடைத்தது. சோழ மன்னனுடன் போருக்குச் சென்ற வரகுண பாண்டியன் சோழ மன்னனை போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச் சென்றான். அப்போது திருவிடைமருதூர் சென்று இங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்தினுள் பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான். வரகுண பாண்டியனைப் பற்றியிருந்த பிரம்மஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனைப் பின்பற்றி கோவிலினுள் செல்ல தைரியமின்றி வெளியிலேயே தங்கிவிட்டன. அரசன் திரும்பி வரும்போது மறுபடியும் அவனை பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தன. ஆனால் திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை மேற்கு வாயில் வழியாக வெளியேறிச் செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டு அவனுக்கு அருள் புரிந்தார். அரசனும் பிரம்மஹத்தி நீங்கியவனாக பாண்டியநாடு திரும்பினான். இறை நினைவுகூறும் வகையில் இன்றளவும் இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் பிரதான கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்று மேற்கிலுள்ள அம்மன் சந்நிதி கோபுரவாயில் வழியாக வெளியே செல்லும் முறையைக் கடைபிடித்து வருகிறார்கள். இங்கு பக்தர்கள் தாங்கள் அறியாமல் செய்த பாவம் நீங்க உப்பு மற்றும் மிளகிட்டு வேண்டிக்கொள்கிறார்கள்.
இத்தலத்து இறைவன் ஒரு சுயம்புலிங்க மூர்த்தியாகும். இறைவன் மகாலிங்கேஸ்வரர் தன்னைத்தானே அர்ச்சித்து கொண்டு பூஜாவிதிகளை சப்தரிஷிகள் மற்றுமுள்ள முனிவர்களுக்க போதித்து அருளிய தலம் திருவிடைமருதூர். மார்க்கண்டேய முனிவருக்கு அவரின் விருப்பப்படி அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் இத்தலத்து இறைவன் காட்சி கொடுத்துள்ளார். இவ்வாலயத்தில் உள்ள மூகாம்பிகை சந்நிதி மிகவும் புகழ் வாய்ந்தது. அம்பாள் சந்நிதிக்கு தெற்குப் பக்கம் இந்த மூகாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி அம்பாளுடன் காட்சிதருகிறார். இவரை சாம்ப தட்சிணாமூர்த்தி என்பர். ஞானசம்பந்தர் இத்தலம் வந்தபோது வழியெல்லாம் சிவலிங்கமாக தோன்றியது. எனவே தரையில் கால் வைக்க அவர் அஞ்சினார். அப்போது சிவன் அம்பிகையை அனுப்பினார். அம்பிகை சம்பந்தரை இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்தாள். இந்த அம்பிகை பிரகாரத்தில் மாகலிங்கேசுவரருடன் கைலாயத்தின் மீது காட்சி தருகிறாள். மேலும் அம்பாளுக்கு பிரகாரத்திலும் தனி சந்நிதி உள்ளது. அம்பிகை இங்கு அன்பிற்பிரியாள் என்று அழைக்கப்படுகிறாள். மகப்பேறு இல்லாதவர்கள் இந்த அம்பிகையை வணங்கினால் மகப்பேறு அடைவர். மூகாம்பிகைக்கு இந்தியாவில் திருவிடைமருதூரிலும் கர்நாடக மாநிலத்திலுள்ள கொல்லூரிலும் மட்டும் சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது. முருகன் கோயில்களில் சுவாமி வேலுடன் காட்சி தருவார். சில கோயில்களில் சுவாமிக்கு எதிரே வேல் பிரதிஷ்டை செய்திருப்பர். இங்கு வேலுக்கென தனி சந்நிதியே இருக்கிறது.
மகாலிங்க சுவாமிக்கு சேவை செய்த வரகுண பாண்டியன் காந்திமதி என்ற பெண்ணை மணந்து கொண்டான். மன்னன் அவளது கையைப் பிடித்த போது உலகில் உள்ள அனைத்தும் சிவனுக்கே சொந்தம் என்ற என்னும் போது எனக்கு சொந்தம் என நினைத்து இவளை மணந்து விட்டோமே! இவள் உண்மையில் இறைவனுக்கல்லவா சொந்தம் என்ற எண்ணம் தோன்றியது. உடன் சுவாமியிடம் அவளை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். அவனது பக்திக்கு மதிப்பளித்த சுவாமியும் அவளை ஏற்றுக்கொண்டார். அவள் லிங்கத்திற்குள் ஐக்கியமானாள். பிரகாரத்தில் ராணி அம்பிகைக்கு சிலை உள்ளது.
தினந்தோறும் காலை 5.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : திருஇடைமருதூர்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை