மயூரநாதர் கோவில், மயிலாடுதுறை
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறையில் இத்திருத்தலம் உள்ளது. இது மாயவரம், மாயூரம் எனவும் அழைக்கப்படுகிறது. இது ஒரு பெரிய நகரம்.
சுவாமி : மயூரநாதர்
அம்பிகை : அபயாம்பிகை, அஞ்சல் நாயகி
தலமரம் : மா, வன்னி
தீர்த்தம் : இடப தீர்த்தம், காவிரி
பதிகம் : திருஞானசம்பந்தர் - 1, திருநாவுக்கரசர் - 2
திருத்தலச் சிறப்புகள்: காவிரிக்கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமமாக கருதப்படுகின்றன. அவற்றில் இத்தலமும் ஒன்று. மற்றவை 1. திருவையாறு 2. திருச்சாய்காடு (சாயாவனம்) 3. திருவெண்காடு 4. திருவாஞ்சியம் மற்றும் 5. திருவிடைமருதூர் ஆகியவை ஆகும். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் தல புராணம் பாடியுள்ளார். நுல்லத்துக்குடி கிருஷ்ணயர், அபயாம்பிகை பதிகம் பாடியுள்ளார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலம்.
இத்திருத்தலத்திற்கு சூதவனம், சிகண்டிபுரம், பிரமபுரம், தென்மயிலை எனவும் வேறு பெயர்கள் உண்டு. கெளரி மயில் வடிவத்தில் வழிபட்ட தலம். இங்கு திரு இந்தளூர் என்னும் பகுதியில் ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற பரிரங்கநாதப் பெருமாள் தலம் உள்ளது. தான் தோன்றி ஈசுவரன் திருக்கோயில் இங்குத் தனியாக உள்ளது. பிரகாரத்தில் விநாயகர், முருகர், சந்திரன், நால்வர், சப்தமாதர்கள், அறுபத்து மூவர், இந்திரன், எமன், வருணன், வாயு, நிருதி, அக்கினி ஆகியோர் வழிபட்ட சிவலிங்கங்கள், மகா விஷ்ணு, மகாலட்சுமி, அஷ்டலட்சுமி, நடராஜர்சபை, அருணாசலேசுவரர், நவக்கிரகம், சனிபகவான், சூரியன், ஜ்வரதேவர், சந்திரசேகரர், தட்சிணாமூர்த்தி, பிரம்மன், பிட்சாடனர் முதலிய சந்நிதிகள் உள்ளன. பிரம்ம தேவனால் உருவாக்கப்பட்ட இவ்வூரில் பிரம்மா இத்தலத்து மாயூரநாதரை பூஜித்தார் என்று புராண வரலாறு கூறுகிறது. அம்பாள் பார்வதி மயில் உருவில் சிவபெருமானை பூஜை செய்ததாக கருதப்படும் இரண்டு சிவஸ்தலங்களில் மயிலாடுதுறை ஒன்றாகும். மற்றொன்று தொண்டை நாட்டு சிவாலயமான திருமயிலை ஆகும். சிவபெருமானை மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தில் இறைவன் கட்டளையும் மீறி அழையாத விருந்தாளியாக கலந்து கொண்டு அவமானப்பட்ட பார்வதியை சிவன் சபித்துவிடுகிறார். காவிரிக்கரையில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் தவம் செய்து தன்னை மீண்டும் அடையுமாறு சிவன் பார்வதியை சபித்து விடுகிறார். மயில் ரூபம் பெற்று சிவபெருமானை வெகு காலம் பூஜை செய்து அம்பிகை சுயரூபம் பெற்று, பாவங்கள் நீங்கப்பட்டு சிவனை அடைந்தாள். மயில் ரூபத்தில் அம்பிகை சிவனை வழிபட்டதால் இத்தலம் மயிலாடுதுறை எனப்பட்டது. சிவநிந்தனையுடன் செய்யப்பட்ட தட்சன் யாகத்தில் கலந்து கொண்ட தேவர்கள் யாவரும் தண்டிக்கப்பட்டனர். அவர்கள் தாம் செய்த பாவம் நீங்க மயிலாடுதுறை வந்து மாயூரநாதரை வழிபட்டு நலன் பெற்றனர்.
ஒருசமயம் கண்ணுவ முனிவர் கங்கையில் நீராடச் செல்லும் போது எதிரில் சண்டாளக் கன்னிகள் மூவர் வந்தனர். அவர்கள் கண்ணுவ முனிவரை வணங்கி, தாங்கள் மூவரும் கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற நதிகள் என்றும் தங்களிடம் நீராடிய மக்களின் பாவக்கறை படிந்து தங்கள் உருவம் இவ்வாறு ஆகிவிட்டதென்றும் கூற அவர்களுடைய பாவம் நீங்கி சுயரூபம் பெற காவிரியில் மூழ்கி நீராட முனிவர் ஆலோசனை கூற அவ்வாறே செய்து பாவங்கள் நீங்கி அவர்கள் சுயரூபம் பெற்றனர். தேவர்கள், முனிவர்கள், சரஸ்வதி, லக்ஷ்மி, கெளரி, சப்தமாதர்கள் ஆகியோர் மாயூரத்தில் உள்ள காவிரிக்கரையில் நீராட வருகின்றனர். ஆகையால் துலா மாதத்தில் கடைசி நாளான கடைமுகம் அன்று நீராடுவது மிகமிக சிறப்பு. இம்மாதத்தில் முதல் 29 நாட்களில் நீராட முடியாவிட்டாலும் கடைசி நாளான 30ம் நாள் காவிரியில் நீராடி, மாயூரநாதரையும், அன்னை அபயாம்பிகையும் அன்று வழிபட்டால் மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம். மறுநாள் கார்த்திகை மாதத்தின் முதல் நாள் 'முடவன் முழுக்கு' என்று கொண்டாடப்படுகிறது. துலா மாதத்தின் கடைமுக நாளான கடைசி நாளில் காவிரியில் நீராட உறுதியுடன் முடவன் ஒருவன் மாயூரம் நோக்கி வருகிறான். ஆனால் அவனால் கடைமுகத்திற்கு மறுநாள் தான் மாயூரம் வரமுடிகிறது. அந்த முடவன் மனம்வருந்தி உள்ளம் உருக சிவபெருமானை வேண்ட சிவனும் அவனுக்கு கடைமுகத்தன்று நீராடினால் கிடைக்க கூடிய மோட்சம் அளந்ததாக புராண வரலாறு கூறுகிறது.
கோயில் அமைப்பு : நான்குபக்க சுற்று மதில்களும், கிழக்கே பெரிய கோபுரமும் மற்ற மூன்று பக்கமும் மொட்டை கோபுரங்களுடனும் இவ்வாலயம் உள்ளது. வீதி உட்பட ஐந்து பிரகாரங்கள் உள்ளன. கிழக்கு வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கொடிமரத்திற்குத் தென்புறம் பெரியவிநாயகரும், வடபுறத்தில் ஆறுமுகனும் எழுந்தருளியுள்ளனர். வெளிப்பிரகாரத்தில் வடக்கு சுவற்றின் அருகே கிழக்கு முகமாக உள்ள கோவிலில் ஆதிமாயூரநாதர் எழுந்தருளியுள்ளார். வடபுறம் உள்ள அம்மன் சந்நிதியில் அன்னை அபயாம்பிகை நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள்.
நந்திதேவர் ஒருசமயம் தாம் சிவபெருமானை தாங்கும் வலிமை பெற்றவன் என்று செருக்கு உற்றார். சிவபெருமான் நந்தியின் மேல் தன் சடையினுள் ஒன்றின் நுனியை வைத்தார். நந்தி தேவர் அதனை தாங்க முடியாது வருந்தி, வணங்கி பிழையை மன்னிக்க வேண்டினார். சிவனும் பிழை பொறுத்து உபதேசம் அருளினார். சிவபெருமான் நந்திதேவர் மேல் யோக நித்திரையில் அமர்ந்துள்ளார். அத்தகைய சிலை இங்கு உள்ளது
இடப தீர்த்தத்துறையில் காசி விசுவநாதர் கோயில் உள்ளது. இது இந்நாளில் வடபால் திகழும் திருக்காசி தலத்தைப் போன்று அழகுறக் கட்டப்பட்டிருக்கிறது. 'முக்குறுணிப் பிள்ளையார்' வடக்குச் சுற்றில் பழைய கோயில் உள்ளது. இத்தலத்திற்கு மேற்கே 5 கி.மீ தொலைவில் 'மூவலூர்' என்னும் வைப்புத்திருவூர் உள்ளது.
தினந்தோறும் காலை 6.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : மயிலாடுதுறை
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு