துறைகாட்டும் வள்ளலார் கோவில், திருவிளநகர்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறைக்குக் கிழக்கே 8 கி.மீ. தொலைவில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து செம்பொனார் கோயில் செல்லும் பேருந்துகளில் செல்லலாம். மன்னம்பந்தல் ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. மயிலாடுதுறைக்கு பக்கத்தில் பொறையாறு சாலையில் 6 கி.மீ தொலைவில் உள்ளது
சுவாமி : துறைகாட்டும் வள்ளல், உசிரவனேசுவரர்
அம்பிகை : வேயுறு தோளியம்மை
தலமரம் : விளாமரம்
தீர்த்தம் : காவிரி, மெய்ஞான தீர்த்தம்
பதிகம் : திருஞானசம்பந்தர் - 1
திருத்தலச் சிறப்புகள்: திருஞானசம்பந்தருக்கு இறைவன் வேடன் உருவில் தோன்றி வழிகாட்டினார். கபித்தன் என்னும் அரசன் பூசித்துப் பேறு பெற்ற தலம். இத்திருத்தலத்தை ஞாழற்கோயில் என்பர். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம். இத்திருவூரின் பெயர் விழல்நகர் என்பது 'விளநகர்' ஆயிற்று. விளாமரங்கள் இருந்தமையால் இப்பெயர் பெற்றது.
அருள்வித்தகன் என்பவன் பரமசிவனின் பரம பக்தன். வழக்கம் போல் அருள்வித்தகன் குவளையில் பூப்பறித்துக் கொண்டு பயபக்தியோடு பரமன் நாமத்தை துதி செய்தவாறு கோவிலுக்குப் புறப்பட்டார். அன்று எதிர்பாராமல் காவிரியில் வெள்ளம் பெருகியதால் அருள்வித்தகன் கதிகலங்கினார். மலர்க் கூடையைப் பத்திரமாக பாதுகாத்தார். நீர் மட்டம் ஏறிக் கொண்டே வந்தது. கழுத்து வரைக்கும் தண்ணீர் வந்தது. பக்தன் கூடையை தலை மீது சுமந்தபடி நீரில் எம்பி எம்பி துள்ளிக் குதித்த வண்ணம் ஆற்றைக் கடந்து கொண்டிருந்தார். ஊர்மக்கள் நதிக்கரையில் திரண்டனர். அருள் வித்தகன் பக்தி கண்டு சிவநாமத்தை கோஷித்தனர். இதற்கு மேல் பரமன் பக்தனைச் சோதிக்க விரும்பவில்லை. காவிரிக்கு இறைவனின் ஆணை பிறந்தது. நீர் வடிந்தது. அருள்வித்தகன் அகம் குளிர்ந்தார்.
சம்பந்தர் ஒருமுறை இத்தலத்திற்கு விஜயம் செய்ய வந்தபோது காவேரி ஆறு கரைபுரண்டு ஓடுவதைப் பார்த்து கரையிலேயே நின்று பரிதவித்தார். துறை காட்டுபவர் யாரேனும் உள்ளார்களா? என்று சுற்றும்முற்றும் பார்த்த இவரை வேடன் ஒருவன் தன்னை பின்தொடர்ந்து வரும்படி சொல்லி ஆற்றில் இறங்கினான். சம்பந்தரும் அவனைப் பின்தொடர்ந்து இறங்க, வெள்ளம் பிரிந்து அவர்களுக்கு வழிவிட்டது. மறுகரை சேர்ந்த சம்பந்தர் நன்றி சொல்ல வேடனைத் தேட, அவன் மாயமாய் மறைந்துவிடக் கண்டார். இறைவனே வேடனாக வந்து துறைகாட்டியதால் அவர் 'துறைகாட்டும் வள்ளலார்' என்று அழைக்கப்படுகிறார்.
கோயில் அமைப்பு : இத்தலம் அழகிய சிற்ப வேலைபாடுகளைக் கொண்ட 5 நிலை ராஜகோபுரங்களை கொண்டது. இரண்டு பிரகாரங்களைக் கொண்டு இரண்டாம் பிரகாரத்தில் சிறிய நந்தி மண்டபமும் ஆஸ்தான மண்டபமும் இருக்கின்றன. 2 வது கோபுர வாசலின் இருபுறமும் விநாயகர் காணப்படுகிறார். மூலவர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இறைவி வேயுறுதோளியம்மை தனது திருக்கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி காட்சி தருகிறாள். மேற்குப் பகுதியில் சோமஸ்கந்தர், ஆறுமுகன், அருணாசலேஸ்வரர் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. வடக்கு பிரகாரத்தில் நடராஜர், கிழக்கில் நவக்கிரக சந்நிதி, சூரியன், பைரவர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.
தல வரலாறு: முன்னொரு காலத்தில் அருள்வித்தன் என்னும் அந்தணன் இத்தல இறைவன் மீது அளவில்லாத பக்தி கொண்டிருந்தான். நாள் தோறும் இறைவனுக்கு மாலை கட்டிக் கொடுக்கும் தொண்டினைச் செய்து வந்தான். இவனது பக்தியை சோதிக்க விரும்பினார் இறைவன். ஒருநாள் இவன் பூக்கூடையுடன் ஆற்றைக்கடந்து வரும்போது ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்படி செய்தார். இதனால் கலங்கிய இவன் தன்னைப்பற்றி கவலைப்படாமல் இறைவனுக்குரிய பூக்கூடையை காப்பாற்றுவதில் மிகவும் கவனமாக இருந்தான். தலையளவு வெள்ளம் வந்துவிட்ட போதிலும் தன் கைகளால் பூக்கூடையை தலைக்கு மேல் தூக்கிப் பிடித்துக் கொண்டு தன் உயிரைப் பற்றி கவலைப் படாமல் இறைவனுக்கு செய்யும் கொண்டில் பங்கம் வந்துவிடக் கூடாதே என்ற் கவலைப்பட்டான். அவனுடைய உறுதியையும், அன்பையும் கண்ட இறைவன் அவனுக்கு அருள் சொரிந்து ஆற்றின் துறையைக் காட்டி அவனைக் கரையேறச் செய்தார். இதனால் இறைவன் "துறை காட்டும் வள்ளல்" ஆனார்.
தினந்தோறும் காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : மன்னம்பந்தல்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை