யாழ்முறிநாதர் கோவில், திருதருமபுரம்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் பாண்டிச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் ரயில் நிலையத்திலிருந்து மேற்கே 2 கி.மீ தொலைவில் உள்ளது. இத்தலம் திருநள்ளாற்றிலிருந்து காரைக்கால் செல்லும் சாலையில் 2 கி.மீ. தொலைவில் சென்று வலப்புறம் பிரியும் சாலையில் உள்ளது.
சுவாமி : தருமபுரீசுவரர், யாழ்முறிநாதர்
அம்பிகை : மதுர மின்னம்மை, தேனமிர்தவல்லி
தலமரம் : வாழை
தீர்த்தம் : தரும தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்
பதிகம் : திருஞானசம்பந்தர் - 1
திருத்தலச் சிறப்புகள்: இத்தலம் நான்முகன், எமன் ஆகியோர் வழிபட்டுப் பேறு பெற்ற பதி. திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம். மார்கண்டேயரின் உயிரை பறித்த பிழை நீங்க எமன் (தருமன்) வழிபட்ட பதியாதலின் 'தருமபுரம்' எனப்பட்டது.இத்திருத்தலம் திருநீலகண்ட யாழ்ப்பாணரின் அவதாரப்பதி. திருஞானசம்பந்தர் பாடிய பதிகத்திற்கு நீலகண்டயாழ்பாணர் யாழ் அமைக்க, இதன் இசை அடங்காது யாழ் முறிந்த நிலையில் 'யாழ்முறி' என்னும் சிறப்பு பெற்ற பதி.
கோவில் அமைப்பு: கோபுரத்திற்கு முன் நந்தி மண்டபம் மற்றும் பலிபீடம் இருக்கின்றன. வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் அம்பாள் மதுர மின்னம்மை சந்நிதி உள்ளது. வெளிப் பிரகார மேற்குச் சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி சந்நிதிகள் உள்ளன. அம்பாள் சந்நிதி முன் மண்டபத் தூணில் துவார விநாயகரும் சுப்பிரமணியரும் காட்சி தருகின்றனர். வெளிப் பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் நவக்கிரக சந்நிதி அமைந்துள்ளது. கோபுர வாயிலுக்கு நேரே 16 கால் மண்டபத்தை அடுத்து கருவறையில் இறைவன் யாழ்முரிநாதர் சிறிய பாணத்துடன் நாகாபரணம் சார்த்தப்பட்டு கிழக்கு நோக்கி அழகாக தரிசனம் தருகிறார். கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தணகணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை சந்நிதிகள் உள்ளன. சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது. தட்சிணாமூர்த்தி இருபுறமும் சனகாதி முனிவர்கள் அமர்ந்திருக்க முயலகன் மீது காலை ஊன்றியபடி எழுந்தருளியுள்ளார். லிங்கோத்பவர் இருபுறமும் பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் இருக்க காட்சி தருகிறார்.தெற்குப் பிரகாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மேதாதெட்சிணாமூர்த்தி திருவுருவம் தரிசிக்க வேண்டிய ஒன்று. அதே போல உற்சவ மூர்த்திகளுள் ஸ்ரீயாழ்மூரிநாதரின் திருவுருவமும் பார்த்து மகிழ வேண்டிய ஒன்றாகும்.
இத்தலத்தின் தீர்த்தமாக விஷ்ணு தீர்த்தம், பிரமதீர்த்தம், தருமதீர்த்தம் ஆகியவை இக்கோவிலின் வடபுறமும் மற்றும் முன்புறம் அரைதுள்ளன. தலமரமாக வாழை உள்ளது. சுவாமி சந்நிதி முகப்பு வாயில் மேலே நடுவில் ரிஷபாரூடரும், ஒருபுறம் சம்பந்தர் பாட, யாழ்ப்பாணர் யாழ் வாசிக்க அவர் மனைவி பக்கத்தில் நிற்பது போலவும், மறுபுறம் சம்பந்தர், யாழுடன் பாணர், அவர் மனைவி ஆகியோருடன் நிற்பது போலவும் சுதை வேலைப்பாடுகள் உள்ளன.
தினந்தோறும் காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும் மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : காரைக்கால்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை