சூட்சுமபுரீஸ்வரர் கோவில், சிறுகுடி
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் பேரளத்தை அடுத்துள்ள பூந்தோட்டத்திற்கு வந்து, அரசலாற்றுப் பாலத்தை கடந்து வலப்புறமாக பிரியும் கும்பகோணம் நாச்சியார் கோயில் சாலையில் சென்று, கடகம்பாடி என்னும் ஊரை அடைந்து, அங்கிருந்து வலப்புறமாக பிரிந்து சிறுகுடிக்குச் செல்லும் சாலையில் சென்றால் ஊரை அடையலாம்.
சுவாமி : மங்களநாதர், சிறுகுடியீசர், சூட்சுமபுரீசுவரர்
அம்பிகை : மங்கள நாயகி
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : மங்கள தீர்த்தம்
பதிகம் : திருஞானசம்பந்தர் - 1
திருத்தலச் சிறப்புகள்: இத்திருத்தலம் சங்க இலக்கியத்தில் புகழப்படும் கொடைவள்ளல் பண்ணன் வாழ்ந்த ஊர். இதற்கு 'சூட்சுமபுரி' எனவும் பெயர் உண்டு. செவ்வாய் தோஷம் நீங்கப் பெறும் தலம். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம். கருடன், செவ்வாய், கந்தர்வர் ஆகியோர் வழிபட்ட தலம்.
செவ்வாய் கிழமை வழிபாடு இங்கு சிறப்புடையது. சுவாமிக்கு எப்போதும் குவளை சாத்தி இருக்கும். அபிஷேகம் கிடையாது. சாம்பிராணித் தைலம் சாத்தப்படுகிறது. அம்பாளுக்கு மட்டும் அபிஷேகம் உண்டு. இத்தலத்தின் சிறப்பு மூர்த்தி சந்தோஷ ஆலிங்கன மூர்த்தியாவார். அம்பிகை தம் கைப்பிடி கொண்டு சிறுபிடி மண்ணால் லிங்கம் தாபித்து வழிபட்ட பதி. இத்தலத்து விநாயகர் 'மங்கள விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார். முருகர், திருஞானசம்பந்தர், சனீசுவரர், பைரவர் முதலிய சந்நிதிகள் உள்ளன.
இத்தலத்தின் சிறப்பு மூர்த்தமாகிய சந்தோஷ ஆலிங்கன மூர்த்தி மிக சிறப்பானது. அம்பிகையின் பூஜைக்கு மகிழ்ந்து அம்பிகையை ஆலிங்கனம் செய்யும் அமைப்பில் அவள் தோள் மீது கை போட்டுக்கொண்டு காட்சி தருகிறார்.
கோவில் அமைப்பு: மூன்று நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கிழக்கு நோக்கியவாறு உள்ளது. வாயிலின் உள்ளே சென்றால் பலிபீடம் நந்தி ஆகியன உள்ளன. இவ்வாலயத்தில் கொடிமரம் இல்லை. வெளிப் பிரகாரத்தில் மங்களவிநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சந்நிதிகள் ஆகியவை உள்ளன. முன் மண்டபத்தில் நவக்கிரக சந்நிதி உள்ளது. நவக்கிரகங்களில் சனீஸ்வரனுக்கு கீழே சனைச்சரன் என்று பெயர் எழுதப்பட்டுள்ளது. இதுவே சரியான பெயர் என்று ஆலய குருக்கள் கூறினார். இதற்கு மெதுவாக ஊர்ந்து செல்பவன் என்று பொருள். இதுவே மருவி சனீச்வரன் என்றாயிற்று. நவக்கிரக சந்நிதிக்கு அருகில் ஞானசம்பந்தரின் பெரிய மூலத் திருமேனி, இடுப்பில் அரைஞாண் கயிறு, கழுத்து மாலை ஆகியவற்றுடன் அழகாக தோற்றமளிக்கிறார்.
முன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய அம்பாள் மங்களநாயகி சந்நிதி உள்ளது. அபயவரதத்துடன் நின்ற திருக்கோலத்தில் அம்பாள் காட்சி அளிக்கிறாள். மூலவர் சுயம்புத் திருமேனி. அம்பிகை கைப்பிடியளவு மணலால் பிடித்துவைத்து மங்கள தீர்த்தம் உண்டாக்கி வழிபட்ட தலம். சிறுகுடியீசர் என்ற பெயருக்கேற்றவாறு மிகச் சிறிய லிங்கம். ஒருபிடி அளவேயுள்ள மண் லிங்கம் ஆதலால் இதற்கு அபிஷேகம் கிடையாது. நெற்றியில் பள்ளமும் இருபுறமும் கைபிடித்த அடையாளமும் உள்ளது. அம்பிகை இறைவனை ஆலிங்கனம் செய்து கொண்டதால் இத்தழும்புகள் உண்டானது என்பர். லிங்கத் திருமேனி எப்போதும் கவசம் சாத்தியே வைக்கப்பட்டுள்ளது. கருவறை தெற்கு கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மேற்கு கோஷ்டத்தில் மகாவிஷ்ணு, வடக்கு கோஷ்டத்தில் பிரம்மாவையும், வழக்கமாக துர்க்கை இருக்குமிடத்தில் அர்த்தநாரீஸ்வரரையும் காணலாம். சண்டிகேஸ்வரர் சந்நிதியும் உள்ளது. கருவறைச் சுற்றில் மங்கள விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர் சந்நிதி ஆகியவையும் உள்ளன.
தல வரலாறு: ஒருமுறை கைலாயத்தில் பரமசிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடினார்கள். அதில பார்வதி வெற்றி பெற்றாள். அதனால் வெட்கமடைந்த சிவபெருமான் எங்கோ மறைந்து விட்டார். கலக்கமடைந்த பார்வதி சிறுகுடி தலத்திற்கு வந்து மங்கள தீர்த்தத்தை உண்டாக்கி, தன் கையால் பிடி மணலை எடுத்து அதைச் சிவலிங்கமாகப் பிடித்து வைத்து வழிபட்டாள். சுவாமி அம்பாளுக்கு காட்சி கொடுத்து அவளை மீண்டும் ஏற்றுக் கொண்டதாக தலபுராணம் கூறுகிறது. சிறுபிடி என்பது மருவி சிறுகுடி என்றாயிற்று. திருக்கயிலையில் இருக்கும் இறைவன் சூட்சுமமாய் மறைந்து இங்கு மீண்டும் தோன்றியதால் இத்த தலத்திற்கு சூட்சுமபுரி என்றும் இறைவனுக்கு சூட்சுமபுரீஸ்வரர் என்றும் பெயர்கள் உண்டாயின. இறைவன் சிறுகுடியீசர் என்றும அழைக்கப்படுகிறார்.
செவ்வாய் தோஷமுள்ளவர்கள் செவ்வாய்கிழமை காலை - மாலை வந்து நீராடிவிட்டு செல்கின்றனர். இஸ்லாமியர் மற்றும் வேற்று மதத்தவர்களும் வந்து நீராடி வழிபட்டு திருநீறு பெற்று செல்கின்றனர். திருமணமாகாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால் 'அங்காரதோஷம்' நிவர்த்தியாகிறது. நவக்கிரக சந்நிதியில் சனீஸ்வரர் சந்நிதிக்கு கீழே 'சனைச்சரன்' என்று பெயர் எழுதப்பட்டுள்ளது இதற்கு 'மெதுவாக ஊர்ந்து செல்பவர்' என்பது பொருள்.
தினந்தோறும் காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : பேரளம்
பஸ் வசதி : இல்லை
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை