அக்னீசுவரர் கோவில், திருஅன்னியூர்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவீழிமிழலையை அடுத்து வடக்கே 4 கி.மீ. தொலைவில் அரிசிலாற்றங்கரையில் உள்ள இத்தலம் தற்போது 'அன்னியூர்' என்று வழங்கப்படுகிறது. கும்பகோணத்தலிருந்து அன்னியூருக்கு நகரப்பேருந்து செல்கிறது. சாலையோரத்திலேயே கோயில் உள்ளது.
சுவாமி : அக்கினிபுரீசுவரர், அக்கினீசுவரர்
அம்பிகை : கெளரியம்மை, பார்வதி
தலமரம் : வன்னி
தீர்த்தம் : அக்னி தீர்த்தம்
பதிகம் : திருநாவுக்கரசர் - 1
திருத்தலச் சிறப்புகள்: தக்கன் வேள்வியில் பங்கு கொண்ட அக்கினி சாபம் தீர வழிபட்ட தலம். பார்வதி தேவி காத்தியாயன முனிவரின் மகளாகப்பிறந்து இறைவனை அடைய இத்தலத்தில் தவமிருந்தாள். இறைவன் இவளுக்கு காட்சி தந்து இத்தலத்தின் அருகிலுள்ள திருவீழிமிழலையில் திருமணம் செய்து கொண்டார். எனவே இது திருமணத்தடை நீக்கும் தலமாகும். திருமணமாகாதவர்கள் இங்கு வந்து வழிபடின் திருமணம் கூடும்.
கோவில் அமைப்பு: சிறிய இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் அரிசிலாற்றின் வடகரையில் அமைந்துள்ளது. உள்ளே நுழைந்து வலமாக வரும்போது கருவறைச் சுவரில் அப்பர், அக்கினி, கௌரி, சிவலிங்கம், காமதேனு பால்சொரிவது, ரிஷபாரூடர் சிற்பங்கள் வரிசையாகவுள்ளன. பக்கத்தில் தட்சிணாமூர்த்தி உள்ளார். விநாயகர், பாலசுப்பிரமணியர், கஜலட்சுமி சந்நிதிகளும் தலமரம் வன்னியும் உள்ளன. கோபுர வாயில்க் கடந்தவுடன் நேரே பலிபீடம், நந்தி மண்டபம் உள்ளன. அதையடுத்துள்ள முன்மண்டபத்தில் நால்வர் சந்நிதியும், வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதியும் அமைந்துள்ளன. நேரே இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக லிங்க உருவில் அருள்பாலிக்கிறார். கருவறை வாயில் இருபுறமும் துவார பாலகர்கள் கல்சிற்பங்களாகவே வடிக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள சோமாஸ்கந்தர், நடராசர் திருமேனிகள் மிக்க அழகுடையவை.
தல வரலாறு: சிவபெருமானை புறக்கணித்துவிட்டு மற்ற அனைவரையும் அழைத்து தட்சன் யாகம் நடத்தினான். யாகத்தில் கலந்து கொண்டவர்களில் அக்னி தேவனும் ஒருவன். சிவனை அவமதித்து நடத்தப்பட்ட யாகத்தில் கலந்து கொண்டதற்காக இவன் பத்ரகாளியாலும், வீரபத்திரராலும் தண்டிக்கப்பட்டு சாபம் பெற்றான். அக்னிக்கு சாபம் ஏற்பட்டதால் எந்த யாகத்திலும் கலந்து கொள்ள முடியவில்லை. யாகம் நடத்தப்படாததால், மழைவளம் குன்றியது. உயிர்கள் வாட தொடங்கின. இதனால் வருந்திய அக்னி தேவன், பல தலங்களில் ஈசனை வழிபட்டு தனக்கு ஏற்பட்ட சாபத்திலிருந்து மீள வேண்டினான். அச்சமயம் இத்தலத்திற்கும் வந்து லிங்கம் அமைத்து, தீர்த்தம் உண்டாக்கி, வன்னி இலைகளால் இறைவனை அர்ச்சித்து சாபம் நீங்கப் பெற்றான். அக்னி தேவன் வழிபட்ட தலமாதலால் இறைவன் அக்னிபுரீஸ்வரர் ஆனார். அக்னி உண்டாக்கிய தீர்த்தம் அக்னி தீர்த்தம் என்று பெயர் பெற்றது. அக்னிதேவன் தனக்கு அருள் புரிந்த அக்னீ ஸ்வரரை வணங்கி, இத்தலத்திற்கு வந்து அக்னி தீர்த்தத்தில் நீராடி வழிபடுவோருக்கு தன் தொடர்புடைய உஷ்ண ரோகங்கள் நீங்கவும், நற்கதி பெறவும் அருள்புரியுமாறு இறைவனை வேண்டினான். எனவே உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய், ரத்த கொதிப்பு உள்ளவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சிவனுக்கு கோதுமையால் செய்த பொருளை நிவேதனம் செய்து வழிபட்டால் விரைவில் குணமாகும்.
காத்யாயனி மகளாக அம்பாள் தோன்றி, இறைவனை மணக்க இத்தலத்தில் தவமிருந்ததகாக புராணங்கள் கூறுகின்றன. கோயிலுக்கு எதிரில் உள்ள அக்கினி தீர்த்தத்தில் நிராடினால் இரத்தக்கொதிப்பு, உஷணரோகம் முதலிய பிணிகள் நீங்கும்.
தினந்தோறும் காலை 7.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : பூந்தோட்டம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை