ராமநாதசுவாமி கோவில், ராமனதீச்சுரம்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் ரயில்நிலையத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள இத்திருவூர் தற்போது 'கண்ணபுரம்' என்று வழங்கப்படுகிறது. திருச்செங்காட்டங் குடியிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.
சுவாமி : இராமநாதர்
அம்பிகை : சரிவார்குழலி
தலமரம் : சண்பகம், மகிழமரம்.
தீர்த்தம் : இராமதீர்த்தம்
பதிகம் : திருஞானசம்பந்தர் - 1
திருத்தலச் சிறப்புகள்: திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற காவிரி தென்கரை தலம். இராமன் இராவணனை கொன்ற கொலை பாவம் நீங்க இறைவனை வழிபட்ட தலம். இராமனது ஈச்சரம்.
இராமர் இத்தலத்திற்கு வந்தபோது நந்தி தடுத்ததாகவும், பின் அம்பிகை கருணை கொண்டு நந்தியை தடுத்து காட்சி தந்ததாகவும், பின் இராமர் இத்தல தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் இராமநந்தீச்சரம் என்பது மருவி இராமனதீச்சரம் என ஆயிற்று. இதன்காரணமாக இத்தலத்திற்குரிய சோமஸ்கந்த மூர்த்தத்தில் அம்பாள் கரத்தில் நந்தி தேவர் உள்ளார். இம்மூர்த்தம் தற்போது திருப்புகழூரில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. மூலவர் திருமேனி உயரமான பெரிய சுற்றுடைய ஆவுடையாருடன் பெரிய திருவுருவம் கொண்டு உயர்ந்த பாணத்துடன் காட்சி தருகிறார். சுவாமியின் விமானம் 'வேசர' அமைப்புடையது
தல வரலாறு: ராமர், சீதையை மீட்க இலங்கை சென்ற போது, போரில் ராவணன் உட்பட பல வீரர்களை வீழ்த்தினார். இதனால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்த அவர், அயோத்தி திரும்பும் வழியில் பல தலங்களில் சிவ வழிபாடு செய்தார். அவர் செண்பக வனமான இவ்வழியே வரும்போது, ஒரு மரத்தின் அடியில் சிவன் சுயம்புலிங்கமாக எழுந்தருளியிருந்ததைக் கண்டார். சிவனுக்கு பூஜை செய்ய ஆயத்தமானார். நந்தி தேவர், ராமரை மானிடர் என நினைத்து சிவனை நெருங்கவிடாமல் தடுத்தார். அம்பாள் கருணை கொண்டு நந்தியைத் தடுத்து காட்சி தந்ததாகவும், பின்பு இராமர் தீர்த்தத்தில் நீராடி வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது. ராமர் சிவ வழிபாடு செய்து பின்பு அயோத்தி திரும்பினார். பிற்காலத்தில் இங்கு கோயில் எழுப்பப்பட்டது. இராமரால் வழிபடப்பட்டவர் என்பதால் சுவாமி "ராமநாதசுவாமி" என்று பெயர் பெற்றார்.
கோவில் அமைப்பு: கிழக்கு நோக்கிய இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை.ஒரு முகப்பு வாயில் மட்டும் உள்ளது. ஆலயத்திற்கு எதிரில் இராமதீர்த்தம் உள்ளது. முகப்பு வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே பலீபீடத்தையும், நந்தி மண்டபத்தையும் காணலாம். இங்கு கொடிமரமில்லை. அதன்பின் விசாலமான முற்றவெளி உள்ளது. வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சரிவார்குழலி சந்நிதி அமைந்திருக்கிறது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளாள். வெளிச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், கஜலட்சுமி, காலபைரவர், சூரியன் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. மூலவர் கருவறை உள்ள மண்டபத்தின் நுழைவாயில் மேல் ரிஷபத்தின் மீதமர்ந்த சிவன், பார்வதி சுதைச் சிற்பத்தைக் காணலாம். உள்ளே கருவறையிலுள்ள் மூலவர் சிவலிங்கத் திருமேனி பெரியது. உயரமான பெரிய சுற்றுடைய ஆவுடையாருடன் கூடிய உயர்ந்த பாணத்துடன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். தீபாராதனையின்போது மூலவர் லிங்கத் திருமேனியில் ஜோதி வடிவம் தெரிவது விசேஷம். கோஷ்டமூர்த்தங்களாக, தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதியும் அதற்குரிய இடத்தில் அமைந்துள்ளது.
தினந்தோறும் காலை 8.30 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : நன்னிலம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை