அயவந்தீஸ்வரர் கோவில், திருச்சாத்தமங்கை
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் திருமருகலிலிருந்து நாகூர் செல்லும் சாலையில் 1கி.மீ சென்று கோயில் சீயாத்தமங்கை என்னும் கைகாட்டி சொல்லும் திசையில் எதிர்புறமாக நன்னிலத்திற்கும், நாகப்பட்டினத்திற்கும் இடையே இத்தலம் உள்ளது. இவ்வூரைச் சுற்றி சிவக்ஷேத்திரங்கள் நிறைந்துள்ளன. திருநள்ளாறு ரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கே 8 கி.மீ தொலைவில் உள்ளது
சுவாமி : அயவந்தீசுவரர், பிரம்மபுரீசுவரர்
அம்பிகை : மலர்க்கண்ணம்மை
தீர்த்தம் : சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம்
பதிகம் : திருஞானசம்பந்தர் - 1
திருத்தலச் சிறப்புகள்: இத்திருத்தலம் பிரம்மதேவரால் பூஜிக்கப்பட்ட இடம். நாயன்மார்களால் கொண்டாடப்பட்ட இடம். மேலும் திருஞானசம்பந்தர், நீலகண்ட யாழ்ப்பாணருடன் பதிகம் பாடி பெருமை சேர்த்த தலம். சாத்தமங்கை ஊரின் பெயராகவும், அயவந்தீசுவரர் என்பது இறைவன் பெயராகவும் அமைந்துள்ளது. இதனால் கோவில் சியாத்தமங்கை என்று பிரசித்தமாக உள்ளது. இத்தலம் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருநீலக்கர் வாழ்ந்த திருத்தலம்.
உயர்ந்த சுற்றுமதிலையுடைய பெரிய இவ்வாலயம் சுவாமி அம்பாள் சந்நிதிகள் இரண்டிற்கும் தனித்தனி வாயில்களுடனும், கோபுரங்களுடனும் மேற்கு நோக்கி அமைந்துள்ளன. கோவிலுக்கு வெளியே கோபுர வாயில் எதிரே ஆலயத்தின் திர்த்தக்குளம் உள்ளது. இக்குளத்தில் ஒரு பகுதி சந்திர தீர்த்தம் என்றும், மற்றொரு பகுதி சூரிய தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. தீர்த்தக் குளத்தின் கரையில் சித்திவிநாயகர் சந்நிதியைக் காணலாம். சுவாமி ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் விசாலமான மூற்றவெளி உள்ளது. வெளிச்சுற்றில் வலம் வரும்போது சந்திரன், காகத்தின் மீது ஒரு காலூன்றிய அமைப்பில் உள்ள சனிபகவான், சப்தமாதர்கள், பைரவர், நவக்கிரகங்கள், மகாலிங்கம், விசுவநாதர், விசாலாட்சி, விநாயகர் முதலிய சந்நிதிகள் உள்ளன. பிராகாரத்திலுள்ள தலவிருட்சம் கொன்றை மரத்தின் அடியே விநாயகர், லிங்கத் திருமேனிகள் உள்ளன.
உள்வாயிலைக் கடந்து முன்மண்டபம் அடைந்து வலம் வரும்போது, வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணியர், மகாலட்சுமி, நால்வர் சந்நிதிகள் உள்ளன. அடுத்து 63 நாயன்மார்களில் ஒருவரான திரு நீலநக்க நாயனார், அவருடைய மனைவி ஆகியோரின் உருவங்கள் உள்ளன. சோமாஸ்கந்தர், மகாகணபதி சந்நிதிகளைத் தரிசித்துப் படிகளேறி உள்சுற்றில் நீலநக்கர், அவருடைய மனைவி, நடன சுந்தரர் முதலிய உற்சவத் திருமேனிகளைத் தரிசிக்கலாம். நடராச சபையில் அம்பலக்கூத்தர் அம்மை சிவகாமி மணிவாசகருடன் காட்சி தருகின்றார். சனீசுவரன், காகத்தின் மேல் ஒரு காலை ஊன்றியவாறு நின்ற கோலத்தில் உள்ளார்.
மூலவர் கருவறையில் மேற்கு நோக்கி தரிசனம் தருகிறார். சுயம்பு மூர்த்தியான இந்த அயவந்தீசுவரர் பாணம் முழுவதும் கொப்புளம் போல காட்சி தருவது, நீலநக்க நாயனார் வரலாற்றை நினைவுபடுத்துவாக அமைந்துள்ளது. கோஷ்ட மூர்த்தங்களில் தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் சிற்பக் கலைத்திறனுடன் அமைந்துள்ளது. கருவறை சுற்றுச் சுவர் வெளிப்புறத்தில் நர்த்தனகணபதி, அகத்தியர் ஆகிய இருவருக்கும் இடையே உள்ள கெளரி லீலை உருவத் திருமேனி உள்ளன. வெளி மண்டபத் தூண் ஒன்றிலுள்ள ஆஞ்சனேயர் வாலில் மணியுடன் காணப்படுகிறார். அருகிலுள்ள மற்றொரு தூண் அருகே உள்ள தவழும் கிருஷ்ணனின் திருமேனியும் உள்ளன.
அம்பாள் சந்நிதி பக்கத்தில் தனிக்கோயிலாகவுள்ளது. சூரியன் விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. நந்தி சற்று உயரத்தில் உள்ளது. படிகளேறிச் சென்றால் கருவறை முன் மூஞ்சூறு வாகனத்தின் மீது அமர்ந்துள்ள விநாயகரையும், தண்டபாணியையும் துவாரமூர்த்திகளாகத் தரிசிக்கலாம். நேரே அம்பாள் நான்கு திருக்கரங்களுடன் கூடிய நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறாள்.
இவ்வூரில் 'ஐந்தெழுத்தோதும் மறையவர்' திருநீலக்க நாயனார் வாழ்ந்து வந்தார். இவர் நாள்தோறும் தனது மனைவியாருடன் தவறாது இறைவழிபாடு செய்து வந்தார். வழிபாட்டு முடிவில் ஐந்தெழுத்தினை அகமுற ஓதுவார். அப்பொழுது ஐந்தெழுத்தினை கணிக்கும் போது சிவபெருமான் திருமேனியில் சிலந்தி ஒன்று விழுந்தது. புண் உண்டாகாதபடி அம்மையார் அதனை ஊதித்துமிந்தனர். நாயனார் அதனை திருவடிபிழையென கொண்டார். அம்மையாரை நீக்கிவிட்டு இல்லம் சென்றார். திருவடி நினைப்புடன் அம்மையார் திருக்கோவிலிலேயே தங்கிவிட்டார். இறைவன் நாயனாரின் திருக்கனவில் தோன்றி அம்மையார் துமியாத பக்கம் கொப்பளமாகிவிட்டது என காட்டியருளினார். நாயனார் அஞ்சி எழுந்து விடிந்ததும் அம்மையாரை உடனழைத்து வந்தார். வழக்கம்போல் இருவருங் கலந்து சிவபெருமானை வழிபட்டனர். இத்தலத்தில் நீலக்கநாயனார் அவர்தம் மனைவி ஆகியோரின் சிலைகளும் இறைவியார் சந்நிதியில் இருக்கின்றன.
தினந்தோறும் காலை 8.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : திருநள்ளாறு
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை