முக்கோண நாதேசுவரர் கோவில், திரு பள்ளியின்முக்கூடல்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தின் தலைநகரான திருவாரூரிற்கு வடக்கிலுள்ள விற்குடி ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ சென்றால் இத்தலத்தை அடையலாம்.
சுவாமி : முக்கோணநாதர், திரிநேத்திரசுவாமி, முக்கண்நாதர், முக்கூடல் நாதர்
அம்பிகை : அஞ்சனாட்சியம்மை, மைம்மேவுகண்ணி
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : முக்கூடல் தீர்த்தம் - கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் கூடுவதாக ஐதீகம்.
பதிகம் : திருநாவுக்கரசர் - 1
திருத்தலச் சிறப்புகள்: இத்திருத்தலம் தபோவதனி என்னும் அரசிக்கு அம்பிகை குழந்தையாகத் தோன்றி வளர்ந்து வர, சுவாமி வேதியராக வந்து திருமணம் செய்து கொண்ட பெருமை வாய்ந்தது. சுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர். இத்தலம் இராம பிரான் பூசித்த தலம். மூர்க்க மகரிஷி வழிபட்டது. ஜடாயு பேறு பெற்ற பதியாதலால் இதனைக் 'குருவி ராமேசுவரம்' என்பர்.
தல வரலாறு: இத்தல வரலாறு இராமாயண இதிகாசத்தில் வரும் ஜடாயுவுடன் தொடர்புடையதாதலால் இத்தலத்தை இங்குள்ள மக்கள் "குருவிராமேஸ்வரம்" என்றும் கூறுகின்றனர். ஒரு முறை காசி மற்றும் ராமேஸ்வரம் தீர்த்தத்தில் ஒரே சமயத்தில் நீராடி, இரண்டு தலங்களையும் ஒன்றாக தரிசித்து முக்தி அடைவதற்காக ஜடாயு இத்தலத்தில் தவம் செய்தது. இதன் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் ஜடாயுவுக்கு தரிசனம் தந்து, "இராவணன் சீதையை எடுத்து வரும் நேரத்தில் நீ தடுப்பாய். அப்போது அவன் உன் சிறகுகளை வெட்ட நீ வீழ்ந்து இறப்பாய்” என்றாராம். அது கேட்ட ஜடாயு "பெருமானே, அப்படியானால் நான் காசி, கங்கை, இராமேஸ்வரம், சேது முதலிய தீர்த்தங்களில் மூழ்கித் தீர்த்தப் பலனை அடைய முடியாமற்போகுமே, அதற்கு என்ன செய்வது" என்று வேண்ட, இறைவன் மூக்கூடல் தீர்த்தத்தை உண்டாக்கி அதில் மூழ்குமாறு பணிக்க ஜடாயுவும் அவ்வாறே மூழ்கிப் பலனைப் பெற்றது. இவ்வரலாற்றை யொட்டித்தான் மக்கள் பேச்சு வழக்கில் இப்பகுதியை "குருவிராமேஸ்வரம்" என்று கூறுகின்றனர். இதனால் கோவில் எதிரிலுள்ள இத்தீர்த்தமும் கங்கை, யமுனை, சரசுவதி ஆகிய நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்திற்கு நிகராக கருதப்படுகிறது. இதில் மூழ்குவோர்க்குப் பதினாறு மடங்கு கங்கை, சேது தீர்த்த விசேஷப் பலனைத் தருவதால் இத்தீர்த்தம் "ஷோடசசேது" என்றும் சொல்லப்படுகிறது.
கோவில் அமைப்பு: இத்தலத்திற்கு இராஜகோபுரமில்லை. கிழக்கு நோக்கிய ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயில் மதிற்சுவர் மாடங்களில் இருபுறமும் விநாயகரும், முருகரும் உள்ளனர். முகப்பு வாயில் மேற்புறத்தில் இறைவன், இராமர், ஜடாயு, விநாயகர், சுப்பிரமணியர் ஆகியோரின் சுதை உருவங்கள் உள்ளன. உள்ளே வலதுபுறம் சூரியன் சந்திரன் ஆகியோரின் திருமேனிகள் காணப்படுகின்றன. உள் மண்டபத்தில் நேரே மூலவர் அழகாக சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மாசி மாதத்தில் சிவராத்திரி நாளில் சூரியக்கதிர்கள் சிவனின் திருமேனியில் விழுவது இத்தலத்தின் சிறப்பம்சம். சுற்றுப் பிராகாரத்தில் நாகர், பைரவர், சனீஸ்வரர், வள்ளி, சூரியன், சந்திரன் ஆகியோரின் திருமேனிகள் உள்ளன. வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகர் சந்நிதியும், தனியே சுப்பிரமணியர் சந்நிதியும், கஜலட்சுமி சந்நிதியும் சுற்றுப் பிராகாரத்தில் உள்ளன.
தினந்தோறும் காலை 11.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : திருவிற்குடி
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை