செந்நெறியப்பர் கோவில், திருச்சேறை
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நாச்சியார் கோயிலுக்குத் தெற்கே 5 கி.மீ. தொலைவில் உள்ள இத்தலம் தற்போது உடையார் கோயில் என்று வழங்கப்படுகிறது. கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கே 15 கி.மீ தொலைவில் உள்ளது.
சுவாமி : செந்நெறியப்பர், சாரபரமேசுவரர்
அம்பிகை : ஞானவல்லி
தலமரம் : மாவிலங்கை
தீர்த்தம் : மார்க்கண்டேய தீர்த்தம்
பதிகம் : திருநாவுக்கரசர் - 2, திருஞானசம்பந்தர் - 1
திருத்தலச் சிறப்புகள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம்.இத்திருத்தலத்தில் மார்க்கண்டேயர் தௌமிய முனிவர் வழிபட்டுப் பேறு பெற்றனர் என்பது சிறப்பு. சுவாமி மற்றும் அம்பாள் கிழக்கு நோக்கிய சந்நிதி. இங்கு விநாயகர், முருகர், மார்க்கண்டேயலிங்கம், சப்தமாதர்கள், நால்வர், கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி, நடராஜர்சபை, தட்சிணாமூர்த்தி, பைரவர், துர்க்கை, சூரியன், சனி பகவான் முதலிய சந்நிதிகள் உள்ளன. இவ்வூரில் சாரநாதப் பெருமாள் கோயில் என்னும் மங்களாசாசனம் செய்யப்பட்ட வைணவத் தலம் உள்ளது.
கோவிலின் அமைப்பு: இவ்வாலயம் கிழக்கு நோக்கிய அமைப்புடையது. சிறிய ராஜகோபுரம் வழியாக உள்ளே முதல் பிரகாரத்தில் அலங்கார மண்டபம் உள்ளது. இந்த வெளிப் பிரகாரத்தில் இறைவன் செந்நெறியப்பர் எனும் சாரபரமேஸ்வரர் சந்நிதிக்கு இடப்புறம் இறைவி ஞானாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. வெளிப் பிரகாரத்திலிருந்து உட்பிகாரத்தில் கிழக்கு நோக்கிய மூலவர் சந்நிதி உள்ளது. சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறையைச் சுற்றி உள்ள பிரகாரத்தில் மேற்குப் பிரகாரத்தில் தல விநாயகரும் அவரையடுத்து மார்க்கண்டேயரும் அடுத்து அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தௌமிய முனிவரால் வழிபாடு செய்யப்பட்டதுமான ஸ்ரீ ரிண விமோசன லிங்கம் உள்ளது. இதையடுத்து ஸ்ரீ பாலசுப்பிரமணியர் சந்நிதியும் அமைந்துள்ளது. மற்ற எங்கும் இல்லாத சிறப்பு அம்சம் இத்தலத்தில் மூன்று துர்க்கைகள் அமைந்துள்ளன. சிவ துர்க்கை, விஷ்னு துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை என மூன்று வடிவங்களாக ஒரே சந்நிதியில் இத்தலத்தில் காட்சியளிப்பது சிறப்பாகும். வெள்ளிக்கிழமை தோறும் இராகு காலத்தில் துர்க்கைகளை வழிபாடு செய்வது மிகவும் சிறந்ததாகும். மேலும் நடராஜப் பெருமான் சந்நிதியும் அதன் அருகில் ஸ்ரீ பைரவர் சந்நிதியும் உள்ளது. எந்த ஒரு சிவாலயத்திலும் இல்லாத தனிச்சிறப்பு இங்குள்ள பைரவருக்கு உண்டு. திருநாவுக்கரசரால் தனி தேவாரப் பாடல் பெற்ற பைரவர் இவராவார்.
சூரியன் இறைவனை பூஜை செய்யும் தலங்களில் திருச்சேறை தலமும் ஒன்றாகும். ஆண்டுதோறும் மாசி மாதத்தில் 13, 14, 15 தேதிகளில் காலையில் சூரியனது ஒளி இத்தலத்து இறைவன் மீதும், அம்பிகை பாதங்களிலும் நேரடியாகப் படுகின்றன. அச்சமயங்களில் இவ்வாலயத்தில் சூரியபூஜை மிகச்சிறப்பாக நடைபெறும்.
மார்க்கண்டேயர் வழிபட்டு வரது பிறவிக்கடன் நீங்க அருள் புரிந்த ரிண விமோசன லிங்கேஸ்வரரை 11 திங்கட்கிழமை வழிபட்டு அபிஷேக ஆராதனை செய்தால் நம்முடைய அனைத்து கஷ்டங்களும் நீங்கி அருள் பெறலாம். நமது வாழ்க்கையில் படுகின்ற கடன்கள், நமது முன்னோர்களால் செய்ய முடியாமல் விடுபட்ட நிவர்த்திக் கடன்களில் இருந்தும் விடுதலை பெறலாம். இவ்வாலயத்தின் தல விருட்சம் மாவிலங்கை ஆகும். இந்த மரம் வருடத்தின் 4 மாதங்கள் வெறும் இலைகளாகவும், அடுத்த 4 மாதங்கள் வெள்ளை வெளேரென்று பூக்களாகவும், அதற்கடுத்த 4 மாதங்கள் பூ, இலை எதுவுமின்றி காணப்படும்.
தினந்தோறும் காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : கும்பகோணம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை