சொர்ணபுரீசுவரர் கோவில், திருக்கடுவாய்க்கரைப்புத்தூர்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ள இத்தலம் தற்போது ஆண்டார் கோயில் என்று வழங்கப்படுகிறது. குடவாசல் - வலங்கைமான் பேருந்து சாலையில் செல்லலாம். குடமுருட்டியாற்றின் தென்கரையில் உள்ள தலம். கோயில் ஊரின் நடுவே உள்ளது.
சுவாமி : சொர்ணபுரீசுவரர்
அம்பிகை : சொர்ணாம்பிகை, சிவாம்பிகை
தலமரம் : வன்னி
தீர்த்தம் : திரிசூலகங்கை
பதிகம் : திருநாவுக்கரசர் - 1
திருத்தலச் சிறப்புகள்: இத்திருத்தலத்தில் காசிப முனிவர், முசுகுந்த சக்கரவர்த்தி, கண்ட தேவர் ஆகியோர் வழிபட்டுப் பேறு பெற்றனர். குடமுருட்டியாற்றின் பழைய பெயர் கடுவாய் என்பதாகும். இதன் கரையில் அமைந்திருப்பதால் இத்தலம் கடுவாய்கரைபுத்தூர் என்று வழங்கப்படுகிறது.
இத்திருக்கோயிலில் சுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர். அம்பாள் ஒரு வரப்பிரஸாதி. பருவமடையாத பெண்கள் இத்திருக்கோவிலுக்கு வந்து சோம வாரத்தில் புஷ்கரணியில் நீராடி தொடர்ந்து ஏழு சோமவாரம் அம்பிகையை வழிபட்டு ஆராதித்து விரதமிருந்தால் ருதுவாகாத பெண்கள் ருது ஆவார்கள் என்பது ஐதீகம். காளையார் கோவிலை ஆண்ட மன்னன் மகள் ருதுவாகாததால் இக்கோவிலுக்கு வந்து இறைவியை வணங்கி அம்மன் அருளால் ருதுவானாள் என்பது வரலாறு. இத்திருத்தலம் ஓர் ஒப்பற்ற பரிகாரத்தலமாக விளங்குகிறது.
ஆலயத்தின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சியளிக்கிறது. இக்கோயிலின் முன்மண்டபம் கருங்கல்லினால் ஆனது. ஆலயத்திற்கு வெளியே கோவிலின் தீர்த்தம் திரிசூல கங்கை கோயிலின் வலப்புறம் உள்ளது. கோபுர வாயிலில் இடதுபுறம் சித்தி விநாயகர் உள்ளார். கோபுர வாயில் வழியே நேரே கோடிமரத்து விநாயகர், கொடிமரம், பலிபீடம் மற்றும நந்தி மண்டபம் உள்ளன. நந்தி மண்டப தூண்களில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளைக் காணலாம். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். ஆண்டு தோறும் சித்திரை 11,12,23 தேதிகளில் சூரிய ஒளி மூலஸ்தானத்தில் விழுந்து சூரிய பூஜை நடக்கிறது. கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி ஆலால மரத்தின் கீழ் சனகாதி முனிவர்கள் இருபுறமும் இருக்க, முயலகனை காலின் கீழ் மிதித்தவாறு காணப்படுகிறார். கருவறை சுற்றுப் பிரகாரத்தில் நால்வர் சந்நிதி, பைரவர், சூரியன், நவக்கிரகங்கள் ஆகியவற்றைக் காணலாம். காக வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் சனி பகவானின் திருஉருவச்சிலை அழகாக உள்ளது. அம்பாள் சொர்ணாம்பிகை தெற்கு நோக்கி தரிசனம் தருகிறாள்.அம்பாள் சந்நிதி முன் மண்டபத்தின் மேல் விதானத்தில் 12 ராசிகளும் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளன.
இத்தல விநாயகர் கும்பகர்ண விநாயகர் என்ற திருநாமத்தில் அருள்பாலிக்கிறார். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தல இறைவனை வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும் எனபது ஐதீகம். சரியான வயதில் வயதுக்கு வராத பெண் குழந்தைகள் திங்கள் கிழமையில் இத்தலத்தில் நீராடி, இறைவனுக்கு விளக்கேற்றி அர்ச்சித்து, இறைவி சொர்ணாம்பிகையையும் வழிபட்டு வந்தால் விரைவில் ருது ஆகிவிடுவார்கள்.
தினந்தோறும் காலை 8.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : கும்பகோணம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை