கரும்பேஸ்வரர் கோவில், திருவெண்ணியூர்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் சாலியமங்கலம் அம்மாபேட்டை வழியாக நீடாமங்கலம் செல்லும் சாலையில் சாலியமங்கலத்தை அடுத்து வரும் கோயில் வெண்ணி நிறுத்தத்தில் இறங்கி பிரதான சாலையில் இருந்து 1 கி மி. சென்று இத்தலத்தை அடையலாம். தஞ்சாவூரிலிருந்து சுமார் 26 கி.மி. தொலைவிலும், நீடாமங்கலத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவிலும் உள்ளது..
சுவாமி : வெண்ணிக்கரும்பர், வெண்ணி நாதர், கரும்பேஸ்வரர்
அம்பிகை : அழகிய நாயகி, செளந்தர நாயகி
தலமரம் : நந்தியாவட்டை
தீர்த்தம் : சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம்
பதிகம் : திருநாவுக்கரசர் - 2, திருஞானசம்பந்தர் - 1
திருத்தலச் சிறப்புகள்: மூலவர் விஷேச தலம், இறைவன் திருமேனி கரும்புக்கழிகளை ஒன்றுசேர்த்துக் கட்டி வைத்தாற்போல் உள்ளது. நீரிழிவு வியாதி நீக்க்கும் தலம். தீர்த்த விஷேச தலம், இங்குள்ள சூர்யதீர்த்தம் இளமையும் ஆரோக்கியமும் தரும் புனிதம் கொண்டது. பங்குனி 2-4 தேதிகளில் இறைவருக்கு சூர்யபூஜை நடக்கிறது. கரிகாற்சோழன் தன் 18வது வயதில் இங்குள்ள பிடாரி அம்மனை வழிபட்டு சேர, பாண்டிய மற்றும் குறுநில மன்னர்களை எதிர்த்து போர் செய்து வெற்றி பெற்றுள்ளான். கரிகாற்சோழன் பெற்ற இந்த வெற்றியே மாபெரும் வெற்றியாக கல்வெட்டு கூறுகிறது.
சங்க காலத்தில் இத்தலம் வெண்ணிப்பரந்தலை என்று அழைக்கப்பட்டது. இத்தலத்தில் சுயம்புவாக எழுந்தருளியிருந்த இறைவனுக்கு நன்றி செலுத்தும்விதமாக, கரும்பேஸ்வர் ஆலயத்துக்குக் கரிகால் சோழன் பல திருப்பணிகள் செய்தான்.
கோவில் அமைப்பு: கிழக்கு திசையில் 3 நிலைகளை உடைய கோபுரத்துடனும், ஒரு பிராகாரத்துடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கிழக்குப் பிரகாரத்தில் நந்தி மற்றும் பலிபீடம் ஆகியவற்றைக் காணலாம். வெளிப் பிரகாரத்தில் விநாயகர், முருகன், கஜலட்சுமி மற்றும் நவக்கிரக சந்நிதிகள் அமைந்துள்ளன. கருவறையில் கிழக்கு நோக்கி இறைவன் கரும்பேஸ்வரர் சுயம்புலிங்க உருவில் காட்சி தருகிறார். சிவலிங்கத் திருமேனியின் பாணப் பகுதி ஒரு கரும்புக்கழிகளை ஒன்றுசேர்த்து கட்டியது போல் காணப்படுகிறது. கருவறைச் சுற்றுச் சுவரில் கோஷ்ட தெய்வங்களாக நடன விநாயகர், தட்சினாமூர்த்தி, அண்ணாமலையார், துர்க்கை ஆகியோர் காணப்படுகின்றனர். அம்பாள் செளந்தர நாயகியின் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
கரும்புக் காடாக இருந்த இத்தலத்தில் சுயம்புவாகத் தோன்றிய இத்தலத்து இறைவனையும், அம்பாள் செளந்தர நாயகியையும் தொடர்ந்து வழிபட்டு வந்தால் விரைவில் சர்க்கரை நோயிலிருந்து குணம் பெறலாம் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை.
தினந்தோறும் காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : சாலியமங்கலம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை