மந்திர புரீசுவரர் கோவில், திருவுசத்தானம்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி வட்டத்தில் கோவிலூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. முத்துபேட்டையிலிருந்து சுமார் 3 கி.மி. தொலைவில் உள்ளது தஞ்சை, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை முதலிய பல ஊர்களிலிருந்து முத்துப்பேட்டை செல்ல பேருந்து வசதிகள் உண்டு.
சுவாமி : மந்திர புரீசுவரர்
அம்பிகை : பெரியநாயகி, பிருகந்நாயகி
தல மரம் : மாமரம்
தீர்த்தம் : அனுமன் தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், கௌதம தீர்த்தம்
பதிகம் : திருஞானசம்பந்தர்
இந்திரன், விசுவாமித்திரர், ஸ்ரீராமர், இலக்குவன், ஜாம்பவான், சுக்கிரீவன், அனுமன் முதலானோர் வழிபட்ட திருத்தலம்.விசுவாமித்திரருக்கு நடனக் காட்சி காட்டியருளிய தலம். கருவறைச் சுவரில் ஜ்வரஹரேஸ்வரர் மூன்று முகங்களுடனும் மூன்று திருவடிகளுடனும் காட்சித் தருகிறார். மூலவர் சுயம்பு மூர்த்தி. வெண்ணிறமாக காட்சித் தருகிறார்.
ஸ்ரீராமர் இலங்கை செல்ல இராமேஸ்வரம் அருகில் கடலில் அணை கட்டுவதற்கு முன்பு இத்தலத்தை தரிசித்து சிவபெருமானிடம் மந்திர உபதேசம் பெற்ற தலம் இது. இராமருக்கு மந்திர உபதேசம் செய்யும் நிலையில் சிவபெருமான் சற்று வடபுறமாக சாய்ந்து காணப்படுகிறார். மார்க்கண்டேயன் மீது எமன் வீசிய பாசக்கயிற்றினால் உண்டான வடுக்கள் நீங்க இத்தலத்தில் தன் பெயரால் தீர்த்தம் உண்டாக்கி அதில் நீராடி, இத்தலத்து இறைவனை வழிபட்டு வடுக்கள் நீங்கப் பெற்றார். இத்தலத்தில் நடராஜப் பெருமான் விஸ்வாமித்திரருக்கு நடனக் காட்சி தந்துள்ளார்.
கோவில் அமைப்பு: கிழக்கு நோக்கிய இவ்வாலயம் ஐந்து நிலைகளையுடைய இராஜகோபுரத்துடனும், இரண்டு பிராகாரங்களுடனும் அமைந்துள்ளது. இராஜகோபுரத்திற்கு எதிரே ஆலயத்தின் திருக்குளம் உள்ளது. குளக்கரையில் விநாயகர் சந்நிதி உள்ளது. இராஜகோபுரம் வழியாக உள்ளே சென்றால் உட்புறத்தில் இடதுபுறம் சிறிய தீர்த்தமும், வலதுபுறத்தில் அம்பாள் கோயிலும் அமைந்துள்ளது. கவசமிட்ட கொடிமரம், பலிபீடம் நந்தி ஆகியவற்றையும் இந்த வெளிப் பிரகாரத்தில் காணலாம். இரண்டாவது கோபுரம் மூன்று நிலைகளையுடையது. துவார கணபதி, சுப்பிரமணியர் வாயிலில் இடதுபுறம் அதிகார நந்தி காட்சி தருகிறார். கருவறை சுற்றுப் பிராகாரத்தில் 63 மூவர், ராகு - கேது, சப்த மாதர்கள், வீரபத்திரர், காளி, காசிவிசுவநாதர், சூதவன விநாயகர், சோமாஸ்கந்தர், வருணன் அவர் வழிபட்ட லிங்கம், இராமர் அவர் வழிபட்ட லிங்கம், மார்க்கண்டேயர் அவர் வழிபட்ட லிங்கம், அன்னபூரணி, சுப்பிரமணியர், வள்ளி தெய்வயானையுடன் காட்சி தரும் சுப்பிரமணியர், கஜலட்சுமி, சரஸ்வதி நவகன்னியர், சனிபகவான், நடராஜ சபை, பைரவர், சூரியன், சந்திரன் முதலிய சந்நிதிகள் உள்ளன. கருட பகவான் வானவெளியில் அமுத கலசத்தை ஏந்திச் செல்லும்போது சிந்திய அமுதம் இறைவன் மீது பட்டதால் இறைவன் வெண்மை நிறமாக காட்சி அளிக்கிறார். மூலவர் சுயம்பு மூர்த்தி.
தல வரலாறு: இராமர் சேது அணை கட்டுவதற்கு இத்தலத்து இறைவனிடம் மந்திர உபதேசம் பெற்றதாக வரலாறு. எனவே இறைவன் திருப்பெயர் மந்திரிபுரீஸ்வரர் என்று வழங்குகிறது. மற்றும் கடலில் அணை கட்டுவதற்குரிய வழிமுறைகளை இராமபிரான் இப்பெருமானிடம் கேட்டறிந்த காரணத்தால் இத்தலம் உசாத்தானம் என்று பெயர் பெற்றது. இவ்வரலாற்றுக்கு ஆதரவாக இவ்வூருக்கு அருகில் இராமன் கோயில், ஜாம்பவான் ஒடை, அநுமான் காடு, சுக்ரீவன்பேட்டை, தம்பிக்கு நல்லான் பட்டினம் முதலிய ஊர்கள் உள்ளன. இறைவன் மாமரத்தினடியில் திகழ்வதால் இத்தலம் சூதவனம் என்றும் சொல்லப்படுகிறது. சூதவனம் என்றால் மாங்காடு. இதற்கேற்ப தலவிநாயகர் சூதவன விநாயகர் என்ற பெயருடன் மாவிலையைக் கரத்தில் ஏந்தியபடி காட்சி தருகிறார்.
தினந்தோறும் காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருத்துறைப்பூண்டி
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை