ஜகதீசுவரர் கோவில், திருப்பேரெயில்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருவாரூர் மாவட்டம், திருவாரூரில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் கமலாபுரத்திற்கு அடுத்துள்ள மூலங்குடி சென்று இத்தலத்தை அடையலாம். திருவாரூரில் இருந்து மாவூர் கூட்டுரோடு வடபாதி மங்கலம் சாலை வழியாகவும் இத்தலத்தை அடையலாம்.
சுவாமி : ஜகதீஸ்வரர்,
அம்பிகை : ஜகந்நாயகி, பெண்ணமிர்த நாயகி,
தல மரம் : நாரத்தை
தீர்த்தம் : அக்கினி தீர்த்தம்,
பதிகம் : திருநாவுக்கரசர்.
சிறப்புக்கள்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். வெண்குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.
தல வரலாறு: சோழ நாட்டின் தலைநகராகத் திருவாரூர் விளங்கியபோது அதைச்சார்ந்த கோட்டை இருந்தது என்றும், அக்கோட்டையின் அருகே எழுந்த ஊர் பேரெயிலூர், என்று பெயர் பெற்றதென்றும் அப்பெயரே மருவி பேரையூர் என்றாயிற்று. இவ்வூரில் தோன்றிய முறுவலார் என்னும் பெண்மணி பாடிய பாடல்கள் குறுந்தொகையிலும், புறநானுற்றிலும் இடம் பெற்றுள்ளன. இத்தல முருகப்பெருமானுக்கு சித்திரை சஷ்டியில் திருவிழா நடக்கிறது.இத்தலத்தினை சுற்றிலும் தென்கிழக்கே தலையாலங்காடு, வடமேற்கே திருநாட்டியத்தான்குடி, தென்மேற்கே திருவாரூர், வடகிழக்கே திருவெண்டுதுறை ஆகிய பாடல் பெற்ற தலங்கள் உள்ளன. இவ்வூரில் தோன்றிய பெண் புலவர் ஒருவர். பேரெயில் முறுவலார். பாடிய பாடல்கள் குறுந்தொகையிலும், புறநானூற்றிலும் உள்ளன.
கோவில் அமைப்பு: இக்கோவில் கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடனும், ஒரு பிரகாரத்துடனும் அமைந்துள்ளது.மூலவர் ஜகதீஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. மூலவர் கருவறை கோஷ்டத்தில் எல்லா சிவாலயங்களிலும் இருப்பது போல தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். உள்பிரகாரத்தில் கற்பக விநாயகர், முருகன், மகாலட்சுமி, பைரவர், அய்யனார், சூரியன், சந்திரன் ஆகியோரின் சந்நிதிகளும் உள்ளன. இத்தலத்திலுள்ள நடராஜர் மிகவும் அழகானதோர் உருவத்துடன் காட்சி தருகிறார்.
தினந்தோறும் காலை 9.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : மன்னார்குடி
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை