அக்னீஸ்வரர் கோயில், திருக்கொள்ளிக்காடு
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டியில் இருந்து 15 கி.மி. தொலைவிலும், திருத்துறைப்பூண்டி - திருவாரூர் ரயில் மார்க்கத்தில் உள்ள ஆலட்டம்பாடி ரயில் நிலையத்தில் இருந்து 7 கி.மி. தொலைவிலும் இத்தலம் உள்ளது.
சுவாமி : அக்கினீசுவரர், தீவண்ணநாதர்
அம்பிகை : மிருதுபாதநாயகி, பஞ்சின் மெல்லடியம்மை
தல விருட்சம்: வன்னி, வில்வம்
தீர்த்தம்: அக்கினித் தீர்த்தம், தீர்த்தக் குளம்
பதிகம் : சம்பந்தர்
சிறப்புகள் : சனி தோஷம் போக்குவதில் திருநள்ளாறையும் விட இத்தலம் சிறப்பு பெற்றது. சோழ மன்னன் ஒருவனுக்கு சனி தோஷம் விலகிய தலமாகும். மூலவர் சிவலிங்கத் திருமேனி. சற்று சிவந்த நிறமாகவுள்ளது. அக்கினி வழிபட்டது.
திருநெல்லிக்காவல், திருத்தங்கூர், கோட்டூர், திருவண்டுதுறை ஆகிய தலங்களின் நடுவே அமைந்துள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று சிறப்பம்சங்களையும் கொண்ட இத்தலத்தின் இறைவன் அக்னீஸ்வரர். சனி தோஷம் போக்குவதில் திருநள்ளாறையும் விட இத்தலம் சிறப்பு பெற்றது. சனி பகவானால் உண்டாகும் அனைத்து தோஷங்களும் இத்தலத்திற்கு சென்று வந்தால் உடனடியாக நிவர்த்தியாகும்.
கோவில் அமைப்பு: இக்கோவிலுக்கு இராஜகோபுரம் இல்லை. மேற்கு நோக்கிய ஒரு நுழைவு வாயில் மட்டும் உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் மேற்கு வெளிப் பிரகாரத்தில் கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி. இறைவன் சந்நிதி மேற்கு நோக்கி உள்ளது. அக்னிதேவன் வழிபட்ட தலமாதலால் திருகொள்ளிக்காடு என்றும் அக்னிதேவன் வழிபட்ட இறைவன் அக்னீஸ்வரர் என்றும் வழங்கப்படுகிறார். இறைவனுக்கு உள்ள மற்றொரு பெயர் தீவண்ணநாதர். பெயருக்கு ஏற்றாற்போல் இங்குள்ள இறைவன் மேனி சற்று செவ்வொளி படர்ந்த நிலையில் காணப்படுகிறது. இறைவன் சந்நிதிக்கு முன்னால், இடப்பக்கத்தில் இறைவி பஞ்சினும் மெல்லடியம்மை சந்நிதி அமைந்துள்ளது. மூலவர் கருவறையின் கோஷ்டங்களில் பிரம்மா, லிங்கோத்பவர், தட்சினாமூர்த்தி, விநாயகர், துர்க்கை ஆகியோர் விளங்குகின்றனர். லிங்கோத்பவருக்கு இருபுறமும் பிரம்மாவும் விஷ்ணுவும் நின்ற கோலத்தில் உள்ளனர். இங்குள்ள முருகன் மற்ற கோயிலைப்போலல்லாமல் கையில் வில்லேந்திய தனுசு சுப்பிரமணியராக அருள்பாலிக்கிறார். இவ்வாலயத்தின் தல மரமாக கோவிலுக்கு எதிரில் உள்ள வன்னியும், தீர்த்தமாக கோயிலுக்கு எதிரில் உள்ள குளமும் உள்ளது.
மேற்கு வெளிப் பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் கிழக்கு நோக்கிய சனி பகவான் சந்நிதி தனி விமானம், தனி மண்டபத்துடன் உள்ளது. மகாலட்சுமியின் சன்னதிக்கு அருகில் சனிபகவானின் சன்னதி அமைந்திருப்பது தலத்தின் மிகச்சிறந்த அம்சமாகும். திருநள்ளாற்றைத் தவிர்த்துப் பார்த்தால் சனீஸ்வரனுக்கு இத்தலத்தில் தான் விசேஷம். நளன் இத்தலத்தில் சனீஸ்வரரை வழிபட்டுள்ளான். புரூரவஸ் என்ற சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட சனி தோஷத்தை நீக்கியருளிய மூர்த்தி இங்குள்ள சனி பகவான் என்பது பிரசித்தம்.
நவக்கிரகங்கள் பொதுவாக வக்கிரகதியில் ஒன்றை ஒன்று பாராமல் காட்சி தருவார்கள். ஆனால இவ்வாலயத்தில் "ப" வடிவில் ஒருவரையொருவர் நோக்கிய வண்ணம் காட்சி பருகின்றனர். நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் இத்தலத்து இறைவன் அழித்து விடுவதால் இத்தலத்தில் நவக்கிரகங்களுக்கு வேலையில்லை.
தினந்தோறும் காலை 7.00 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : ஆலட்டம்பாடி (திருத்துறைப்பூண்டி)
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை