சுடர்கொழுந்தீசர் கோவில், தூங்கானை மாடம் (பெண்ணாகடம்)
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் கடலூர் மாவட்டத்தில் விருதாச்சலம் அருகில் இத்திருத்தலம் உள்ளது. இத்தலம் பெண்ணாகடம் கடந்தை நகர் என வழங்கப்படுகிறது. விருத்தாச்சலத்திலிருந்து திட்டக்குடி செல்லும் பாதையில் 17 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னையிலிருந்து சுமார் 235 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
சுவாமி : சுடர்க்கொழுந்தீசர், பிரளயகாலேசுவரர்
அம்பிகை : ஆமோதனம்பாள் , கடந்தை நாயகி, அழகிய காதலி
தலமரம் : செண்பகம்
தீர்த்தம் : கபிலை தீர்த்தம், பார்வதி தீர்த்தம், இந்திர தீர்த்தம்
பதிகம் :
திருஞானசம்பந்தர் - 1
திருநாவுக்கரசர் - 1
திருத்தலச் சிறப்புகள் : கலிக்கம்ப நாயனார் அவதரித்த பதி. திருநாவுக்கரசு நாயனார் தம் திருமேனியில் திரிசூலக் குறியும் இடப முத்திரையும் பெற்ற தலம். திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் பாடல் பெற்ற நடு நாட்டுத் தலம்.
தேவகன்னியர் (பெண்), தேவலோக பசுவான காமதேனு (ஆ), வெள்ளை யானை (கடம்) இத்தலத்தில் வழிபட்டதால் இத்தலம் பெண்ணாகடம் என ஆயிற்று. ஆலயத்திற்கு தூங்காணை மாடம் என்று பெயர். மூல லிங்கத்தை முன்வாயில் தவிர ஏனைய மூன்று புறங்களிலும் வணங்கும் வகையில் பல கணிகள் உள்ளன. இங்கு கட்டு மலையின் மீது சௌந்தரேசுவரர் சந்நிதி உள்ளது. இத்தலத்தில் நால்வர் சந்நிதிகள் சேக்கிழார் தண்டபாணி, விநாயகர், விசுவேசுவரர், முருகர், மகாலட்சுமி, பிரளய, காளேஸ்வரி, சோமாஸ்கந்தர் முதலிய சந்நிதிகள் உள்ளன.
திருநாவுக்கரசர் இத்தலத்திற்கு வந்தபோது தான் சமணநெறியில் ஈடுபட்டு சிலகாலம் இருந்ததை நினைத்து வருந்தினார். சமணர் குழுவிலே சமண நெறியிலே வாழ்ந்து வந்த இந்த மெய்யுடம்புடன் வாழ விரும்பவில்லை என்றும் சிவபெருமானுடைய அடையாளங்களை என் உடம்பிலே இட்டால் நான் வாழ்வேன் என்றும் வேண்டிக்கொண்டு திருப்பதிகம் பாடி முடித்தவுடன் ஒருவரும் அறியாமல் ஒரு பூதம் வந்து திருநாவுக்கரசர் திருத்தோளிலே பூவிலைச்சூலப் பொறியும் இடப்பொறியும் ஆகிய சிவச் சின்னங்களை இட்டது. அவற்றைக் கண்டு அப்பர் பெருமகிழ்வுடன் இறைவனை விழுந்து பணிந்தார். திருநாவுக்கரசர் வாழ்க்கையில் இத்தகைய அற்புதம் நிகழ்ந்த இடம் இத்தலம் ஆகும். மெய்கண்ட தேவரின் தந்தையார் அச்சுதகளப்பாளர் வாழ்ந்த திருவூர்.
ஒருசமயம் கலிக்கம்ப நாயனார் தம் வீட்டு பணியாளர் சிவனடியாராக வந்து தாகத்திற்கு தண்ணீர் கேட்க நாயனாரின் மனைவி நீர் கொடுக்க தாழ்த்தமையால் நாயனார் அவர் மனைவியின் கரத்தை வாள் கொண்டு வெட்டி வீடு பெற்றார்.
தலப் பெருமை: ஒருமுறை உலகம் சிவபெருமானால் அழிக்கப்பட்டது. அப்போது இத்தலம் தவிர அனைத்து இடங்களும் வெள்ளத்தால் மூழ்கின. இதையறிந்த தேவர்கள் இங்கு வந்து, உயிர்களை இத்தலத்தில் வைத்து காக்கும்படி வேண்டினர். சிவனும் நந்தியிடம் வெள்ளத்தை தடுக்க ஆணையிட்டார். சிவனைப் பார்த்திருந்த நந்தி, ஊரை நோக்கி திரும்ப வெள்ளத்தை திசை மாற்றி பூமியை காத்தது. எனவே இங்குள்ள இறைவனுக்கு பிரளயகாலேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. வெள்ளத்திலிருந்து பூமியை காப்பதற்காக அன்று திசை திரும்பிய நந்தி இன்றும் வாசலை நோக்கி திரும்பியே இருக்கிறது.
வெள்ளாற்றின் கரையில் உள்ள இத்தலத்திலுள்ள இறைவனை தரிசிக்க சோழமன்னன் ஒருவன் இத்தலம் வரும் போது வெள்ளாற்றில் வெள்ளம் வந்தது. ஆற்றின் கரையில் இருந்தபடி மன்னன் சிவனை வேண்டிய போது, அவனுக்காக தன் இருப்பிடத்தை உயர்த்தி கரையில் இருந்தபடியே தரிசனம் கிடைக்க செய்தார். இப்போதும், 30 மீட்டர் உயரத்தில் உள்ள கட்டு மலைக்கோயில் என்ற மேட்டுப்பகுதியில் சௌந்தரேஸ்வரர் (சிவலிங்கம்) சந்நிதி கோயிலுக்குள் உள்ளது. இது தனிக்கோபுரத்துடன் கூடிய கோயில். ஏறுதற்குப் படிகள் உள்ளன. கட்டுமலைக் கோயிலின் கீழ்ப்பகுதியில் பிரளயகாலேஸ்வரி அம்மனுக்கு சிலையுள்ளது.
தினந்தோறும் காலை 6 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : பெண்ணாகடம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை