தடுத்து ஆட்கொண்ட நாதர் கோவில், திருவெண்ணைநல்லூர்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூரிலிருந்து தென் கிழக்கே 19 கி.மீ. தொலைவில் உள்ளது. இடையாற்றிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவெண்ணெய் நல்லூர் ரயில் நிலையத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
சுவாமி : கிருபாபுரீசுவரர், வேணுபுரீசுவரர், அருட்டுறைநாதர், தடுத்தாட் கொண்ட நாதர்
அம்பிகை : மங்களாம்பிகை, வேற்கண்ணியம்மை
தலமரம் : மூங்கில்
தீர்த்தம் : தண்டதீர்த்தம்
பதிகம் : சுந்தரர் - 1
திருத்தலச் சிறப்புகள்: சடையப்ப வள்ளல் கம்பரை ஆதரித்த தலம் இது. சிவபெருமான் ஓலைக் கட்டி வழக்கிட்டு வெற்றி கொண்டு சுந்தரரை ஆட்கொண்ட தலம். மேலும் இத்தலத்தில்தான் சந்தான ஆச்சாரியரான மெய்கண்டார் சிவஞான போதம் அருளினார். சுந்தரர் பாடல் பெற்ற நடு நாட்டுத் தலம். இதற்குக் கிழக்கே 2 கி.மீ தொலைவில் தடுத்தாட்கொண்ட திருவூர் என்ற சிற்றூர் உள்ளது. சுந்தர மூர்த்திநாயணார் சடங்கவியாருடைய மகளாரைத் திருமணஞ் செய்தருளும் போது இறைவன் முன் கைலாயத்தில் அருளியபடி வயது முதிர்ந்த அந்தணராக வேடங் கொண்டு தடுத்தாட்கொண்டருளிய இடம். அப்புத்தூர் இப்பொழுது 'மனம் தவிர்ந்த புதூர்' எனவும் வழங்கப்படுகிறது.
கோயில் பெயர் அருட்டுறை. அம்பிகை வெண்ணெயில் கோட்டை கட்டி அதில் தீ வளர்த்து தவம் செய்ததால் வெண்ணெய் நல்லூர் எனப் பெயர் பெற்றது. இத்தலத்தில் விநாயகர், முருகர், கஜலட்சுமி, நவக்கிரகம், 63 நாயன்மார்கள், தட்சிணாமூர்த்தி, சப்தமாதர்கள், திருமால், திருஞானசம்பந்தர், சுந்தரர், மெய்கண்ட தேவர், அருள் நந்தி, சிவாச்சாரியார் முதலிய சந்நிதிகள் உள்ளன.
இவ்வாலயம் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு இராஜகோபுரத்துடனும் இரண்டு பிராகாரங்களுடனும் அமைந்துள்ளது. கோபுரம் கடந்து உள்ளே நுழைந்தால் சுந்தரர் வழக்கு நடந்த "வழக்கு தீர்த்த மண்டபம்" உள்ளது. அடுத்து செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமர விநாயகர், பலிபீடம் ஆகியவை உள்ளன. நேரே உயரத்தில், மேலே, சுந்தரருக்கு இறைவன் ரிஷபாரூடராகக் காட்சி தந்த விமானக் கோயில் உள்ளது. அதற்கு எதிரில் கீழே சுந்தரர் சந்நிதி உள்ளதையும் காணலாம். இவ்வுருவத்தில் சுந்தரர் கையில் ஓலையுடன் காட்சியளிக்கிறார். இத்தல மூலவர் சுயம்பு லிங்கமாக கிருபாபுரீஸ்வரர் என்ற பெயருடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். அம்மன் மங்களாம்பிகை சந்நிதியும் கிழக்கு நோக்கியே உள்ளது. கோவிலின் தென்புறம் தண்டதீர்த்தம் உள்ளது. உட்பிராபாரத்தில் பொள்ளாப் பிள்ளையார், முருகன், சுந்தரர் சந்நிதிகள் உள்ளன.
கோஷ்ட மூர்த்தங்களாகப் பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், மகாவிஷ்ணு, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. வெளிச்சுற்றில் அறுபத்துமூவர் திருமேனிகளையடுத்து வரிசையாக சப்தமாதர்களும், சம்பந்தர், மகாவிஷ்ணு, அருணந்திசிவம், மெய்கண்டதேவர் திருமேனிகளும் உள்ளன. உட்புறத் தூண்களில் பைரவர், தட்சிணாமூர்த்தி சிற்பங்கள் உள்ளன.
இளைவன் நஞ்சுண்ட காலத்தில் அந்நஞ்சு அவரை துன்புறுத்தாமலிருக்க உமையம்மை இத்தலத்தில் பசு வெண்ணெயால் கோட்டை கட்டி அதில் பஞ்சாக்கினி வளர்த்து அதன் நடுவிலிருந்து தவம் செய்த காரணத்தால் இத்தலம் வெண்ணெய்நல்லூர் எனப் பெயர் பெற்றதெனத் தலபுராணம் கூறுகிறது.
இறைவன் சிவபெருமான் சுந்தரரை தடுத்தாட்கொண்ட சிறப்புடையது இத்தலம். இறைவன் முதிய வேதியராய் வந்து வழக்குரைத்து சுந்தரர் தனக்கு அடிமை என்று நிரூபித்து தன்னுடன் அழைத்துச் சென்று அவரை ஆட்கொண்டார். இறைவன் அடியெடுத்துத் தர சுந்தரர் "பித்தா பிறைசூடி" என்ற திருப்பதிகத்தை அருளிய தலம். தலத்தின் பெயர் திருவெண்ணெய்நல்லூர் என்றும் கோவிலின் பெயர் அருட்டுறை என்றும் பதிகத்தில் குறிப்பிடப் பெறுகிறது. அருணகிரிநாதர் இத்தலத்தில் முருகப் பெருமான் மயில்மீது நடனம் புரிதலைக் கண் குளிரக் கண்டு திருப்புகழ் ஒன்றும் பாடியுள்ளார்.
திருக்கோவிலூரில் இருந்து அரசூர் செல்லும் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். விழுப்புரம், உளுந்தூர்பேட்டை மற்றும் திருக்கோவிலூரில் இருந்து இங்கு வர நேரடிப் பேருந்துகள் உள்ளன.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
ரயில் நிலையம் : திருவெண்ணெய் நல்லூர்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை