அம்பகரத்தூர் பத்திரகாளியம்மன்
திருத்தலஅமைவிடம் : இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தின் அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவில் காரைக்காலில் இருந்து 14 கிலோமீட்டர் புகழ் பெற்ற சக்தி தலம் அம்பகரத்தூர். காரைக்கால் மாவட்டத்தில் சனிக்கோர் தனிக்கோவில் கொண்ட திருநள்ளாறு திருத்தலத்திற்கு மேற்கே 8 கிலோமீட்டர் தூரத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.
மூலவர் : அஷ்ட பூஜை பத்ரகாளி
தல விருட்சம் : வேம்பு
சிறப்புகள்:அன்னை அஷ்ட பூஜை பத்ரகாளி அமர்ந்த கோலத்தில் மூலவராகவும் உத்ஸ்வராகவும் காட்சி தருகிறாள். இந்த காளியம்மன் வடதிசை நோக்கிக் காட்சி தருகிறாள். நீண்ட பற்கள், கோபமுகம். வலக்கரங்கள் நான்கில் சூலம், கத்தி, உடுக்கை, கிளி, இடக்கரங்கள் நான்கில் பாசம், கேடயம், மணி, கபாலம் ஏந்தியுள்ளாள். வலப்பாதத்தை மடித்து இடப்பாதத்தை அம்பரன்மீது ஊன்றி, திரிசூலம் கொண்டு அவனது மார்பைப் பிளப்பது போன்ற கோலத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறாள். இந்த பத்ரகாளியம்மனுக்கு 18 மீட்டர் அளவில் எப்பொழுதும் வெள்ளைத் துணி அணிவிப்பது இத்தலத்தில் குறிப்பிடத்தக்க செய்தியாகும். இந்தத் துணியை பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்துகின்றனர். நெடிய தோற்றம் கொண்ட இந்த அன்னையின் உருவத்தை அருகில் சென்று காணும்போது மிகவும் அற்புதமாக இருக்கிறது. எட்டுக்கரங்களுடன் வீரத்துடன் கருணைக்கடலாக காட்சியளிக்கும் அன்னை அஷ்டபுஜ பத்ரகாளியம்மன் என்ற நாமத்துடன் பக்தர்கள் வேண்டும் வரம் வழங்கி அருளாசி புரிந்து வருகிறாள்.
ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருந்சோதியான சிவனின் சக்தியான அன்னை, கோபசக்தியுடன் பத்ரகாளியாய் அஷ்டபுஜ பத்ரகாளியம்மனாக அம்பகரத்தூரில் அமர்ந்த வரலாறு தெய்வாம்சம் நிறைந்தது.
புராண வரலாறு: தவத்தில் சிறந்த துருவாச முனிவர், அம்பல் நகரில் உள்ள பிரம்மபுரீசுவரரைத் தரிசிக்கும் ஆவலோடு வான்வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அரக்கர் இனத்தைச் சேர்ந்த மதலோலை என்ற அரக்கி, தேவகுலப் பெண்ணைப் போலப் பேரழகு வடிவம் கொண்டு முனிவர் முன்னே தோன்றினாள். அவள் முனிவரிடம் 'பிள்ளைவரம் வேண்டி உங்களை வந்தடைந்தேன். அருள் கூர்ந்து என்னோடு கலந்து, எனக்குக் குழந்தை செல்வத்தை தர வேண்டும்' என்று வேண்டினாள். இதைக்கேட்ட மாமுனிவர் கடும்கோபம் கொண்டு, 'பெண்ணே சிவபெருமானை வழிபட நினைத்தேன். நீயோ நான் செல்லும் வழியில் என் முன்னே வந்து தகாத சொற்களை சொல்லிவிட்டாய். அதனால் தீமையே செய்யும் இரண்டு பிள்ளைகளை இப்போதே பெறுவாய்' என்று சபித்துவிட்டுச் சென்றார். முனிவரின் சாபத்தால் அவளுக்கு இரு அசுரக் குழந்தைகள் பிறந்தன. அம்பரன், அம்பன் என்ற பெயருடைய இருவரும் அசுர குருவான சுக்கராச்சாரியாரிடம் கல்வி பயின்றனர். மேலும் சிவபெருமானை நோக்கி தவமிருந்து எல்லையற்ற ஆற்றலைப் பெற்றனர். அந்த தவமிகு ஆற்றலை அவர்கள் தவறான வழியில் பயன்படுத்தத் தொடங்கினர். தேவர்களுக்கும், அவர்களைச் சார்ந்த பெண்களுக்கும் எல்லையில்லா துன்பத்தை கொடுத்தனர். அசுரர்களின் அட்டகாசத்தைத் தாங்க முடியாத தேவர்கள், சிவபெருமானிடம் சென்று அவரை வணங்கி அரக்கர்களின் அராஜக செயல்களை கூறி முறையிட்டனர்.
அதைக்கேட்ட பரமசிவன் தன் இடப்பாகத்தில் இருக்கும் தேவியை நோக்கி புன்னகை புரிந்தார். அதன் பொருளை உணர்ந்த அன்னை தனது அம்சமாய் விளங்கும் மாகாளியை நினைத்தாள். அடுத்த கணத்தில் அங்கே மாகாளி தோன்றினாள். அவளை பார்த்து உமையவள், 'நீ திருமாலோடு சென்று கொடுமையே வடிவான அம்பரன், அம்பன் இருவரையும், அவர்கள் குலத்தோடு அழித்து வருக' என்று உத்தரவிட்டார். திருமால், வயதான அந்தணர் வடிவம் கொண்டார். காளி, அழகிய பெண்ணாக திருக்கோலம் எடுத்தாள். இருவரும் அந்த அரக்கர்கள் வசிக்கும் இடத்திற்குச் சென்றனர்.
அழகிய பெண்ணைக் கண்ட அரக்கர் களுக்கு, அவளின் மீது மையல் ஏற்பட்டது. இரு அரக்கர்களும், வயோதிக அந்தணரை அணுகி தங்களுக்கு அந்தப் பெண்ணைத் திருமணம செய்து கொடுக்கும்படி கேட்டனர். உடனே திருமால் 'நான் எப்படி ஒரு பெண்ணை இருவருக்கும் திருமணம் செய்து கொடுக்க முடியும். யாராவது ஒருவருக்கு தான் கொடுக்க முடியும். ஆகவே உங்களில் யார் பலசாலி என்று கூறுங்கள். அவர்களுக்கு கொடுத்துவிடுகிறேன் என்று கூறினார். அரக்கனான அம்பரன், எருமைக்கடா உருவம் எடுத்தான். தன்னுடைய கூரியபலம் பொருந்திய கொம்புகளால் அம்பிகையை குத்திக்கிழிக்க நெருங்கினான். காளி அந்த எருமையை சிறிதும் தயக்கமின்றி தனது கூரிய வாளால் வெட்டி சாய்த்தாள். இதையடுத்து அம்பரன் 'மகிஷாசூரன்' உருக்கொண்டு தேவியை எதிர்த்தான். பல வெட்டுகள் வாங்கியும் அம்பரன் மீண்டும் உயிர்பெற்று எழுந்தான். கடைசியாக காளி, அசுரனின் உயிர் இருப்பிடம், அவனது மார்பு பகுதியில் இருப்பதை அறிந்தாள். சூலாயுதத்தால் அம்பரனின் மார்பை ஓங்கிப்பிளந்தாள். வயிற்றை கிழித்துக் குடலை எடுத்து மாலையாய் அணிந்தாள். அக்கணமே அம்பரனும் மாண்டான். தேவர்கள் மகிழ்ந்தனர். பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க காளி அம்பகரத்தூரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரியலானாள். ஈசனும் அன்னையை நாடிவந்து தாமும் குடிக்கொண்டார். தேவியின் சன்னிதிக்கு எதிரில் கிழக்கு நோக்கி, காளீஸ்வரர் என்னும் நாமத்தோடு அடியார்களுக்கு அருள்புரிகிறார்.
திருவிழா: ஆண்டுதோறும் தை, ஆடி மாத இறுதி செவ்வாய்க்கிழமைகளில், ஏகதின லட்சார்ச்சனை நடத்தப்படும். ஆடி மற்றும் தை மாத இறுதி வெள்ளிக்கிழமைகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுமங்கலி பெண்கள் கலந்துகொள்ளும் திருவிளக்கு வழிபாடு நடைபெறும்.
வெள்ளிக்கிழமை தோறும் காலை 10.30 மணி முதல் 12 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலும் ராகுகால வழிபாடு நடைபெறும். பவுர்ணமி தோறும் அம்மனுக்கு சிறப்பு வேள்வி நடத்தப்பெறுகிறது.
கோவில் அமைப்பு : இங்குள்ள ராஜகோபுரம் மூன்று நிலைகளையுடையது. அதில் அழகிய சுதை வடிவங்கள் உள்ளன. முன்பாக உள்ள மண்டபத்தில் பலிபீடம், மகிஷபீடம் ஆகியவை உள்ளன. எருமை வடிவெடுத்த அம்பரனை தேவி அந்த இடத்தில்தான் சம்ஹரித்தபடியால் அந்த இடம் மகிஷபீடம் எனப்படுகிறது. காளியம்மனுக்கு இடப்புறம், வலக்கரத்தில் அரிவாளும் இடக்கரத்தில் பெரிய தடியும் ஏந்தி கிழக்கு முகமாகப் பெத்தார்ணர் கோவில் கொண்டுள்ளார். அவருக்கு அருகில் பெரியாச்சியம்மன் உள்ளாள். முன்னாளில் இந்த ஆலயத்தில் எருமைக்கடா பலி நடந்து வந்தது.
முற்காலத்தில் வைகாசி மாதம் இரண்டாவது செவ்வாய்க் கிழமையன்று நடைபெறும் எருமைக்கடா பலி கொடுக்கும் நாளில் தானாக கட்டவிழ்த்து பகல் 12.00 மணிக்கு அன்னையின் சந்நிதி முன்பு வந்து நின்று, வெட்டு ஏற்று வீடு பேறு பெற்றதாகச் செவிவழிச் செய்தியொன்று உள்ளது.
தரிசன நேரம்: காலை 7.00 முதல் பகல் 1.00 வரை, மாலை 4.00 முதல் இரவு 9.00 வரையிலும் கோவில் திறந்திருக்கும்
அருகிலுள்ள விமான நிலையம் : பேரளம் பூன்தோட்டம்
அருகிலுள்ள ரயில் நிலையம் : காரைக்கால்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு