அரசுரி அம்பேமா அம்மன் திருக்கோயில்
திருத்தல அமைவிடம் : இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் பானஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் அம்பாஜி ஆகும். இது பார்வதி தேவியின் பெயராகவும் விளங்குகிறது. இது புகழ் பெற்ற சக்திஸ்தலங்களுள் மிகவும் சிறப்பு வாய்ந்த இடமாகவும் உள்ளது.
மூலவர் : அம்பேமாதா (உருவமில்லை)
தல விருட்சம் : அரசமரம்
பீடம் : ஏகாவன் சக்தி
தல சிறப்பு: சக்தி பீடங்களிள் சக்தியின் வலதுகரம் வீழ்ந்த இடம். கோயில் கோபுரத்தின் உச்சியில் 103 அடி உயரத்தில் மார்பிளால் ஆன கலசம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. 3 டன் எடையில்செய்யப்பட்டு, தங்கக் கவசத்தால் மூடப்பட்டுள்ளது.
வரலாறு: மகிஷாசுரன் என்ற அரக்கன் தன் தவ வலிமையால், எந்த ஆயுதத்தாலும் தனக்கு அழிவு வரக்கூடாது தென அக்னிதேவனிடம் வரம் வாங்கினான். இந்த வரத்தின் வலிமையால் இந்திர லோகத்தை வளைத்தான். பின்னர் ஆசை மிகுதியால் வைகுண்டத்தையும், கைலாயத்தையும் பிடிக்க எண்ணினான். வரத்தின் பலத்தால் சிவ நாராயணர்களால் அவனை ஏதும் செய்ய முடியவில்லை. இந்த நேரத்தில், வரங்களை தவறாக பயன் படுத்துவோரையும் அழித்து ஒழிக்கும் தேவி பகவதியை அவர்கள் வேண்டினர். அவள் அந்த அசுரனைக் கொன்று இத் தலத்தில் தங்கி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.
யந்திர வழிபாடு என்பது மிகவும் பழமையானது. அம்பாஜி அம்பேமா கோயிலில் அம்பிகையை ஒரு சிங்க வாகனத்தின் மீது அமர்த்தியிருப்பது போன்ற தோற்றம் இருந்தாலும், உண்மையில் அம்மன் சிலை இங்கு இல்லை. "விஷயந்த் ரம்' என்ற யந்திரமே வழிபாட்டில் உள்ளது. இந்த யந்திரத்தை ஒரு மார்பிள் பிளேட்டில் பொருத்தி, நகைகளால் அலங்கரித்துள்ளனர். இந்த யந்திரமே அம்பிகை சிலை போன்ற தோற்றத்தில் உள்ளது. இதை ஸ்ரீயந்த்ரம் என்றும் சொல்கின்றனர். இது தங்கத்தில் செய்யப்பட்டது. ஆமை வாகனத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது.
அம்பாஜி அம்பேமா சன்னதி அளவில் சிறியதுதான். ஆனால், மண்டபம் மார்பிள் கற்களால் ஆனது. அம்பாஜி கோயில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. ஏனெனில், கிருஷ்ண பரமாத்மா கோகுலத்தில் கண்ணனாக விளையாடி மகிழ்ந்த போது, அவரது மூன்றாவது வயதில் அவருக்கு இங்கு தான் முடி காணிக்கை தரப்பட்டுள்ளது. நந்தகோபனும், யசோதை தாயும் அவரை இக்கோயிலுக்கு கூட்டி வந்து மொட்டை அடித்துள்ளனர். அன்று முதல் இன்று வரை இக்கோயிலில் ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே மொட்டையடிக்கிறார்கள். பெண் குழந்தைகளுக் கும், பெரியவர்களுக்கும் இங்கு மொட்டை போடப்படுவதில்லை.
கோயில் அமைப்பு : இங்கு விநாயகர், சித்தி, புத்தி என்ற மனைவியருடனும், சுப், லாப் (சுபம், லாபம்) என்ற மகன்களுடனும், இவர்களது மகன்களான குஷல் மற்றும் சாம் என்ற பேரன்களுடனும் காட்சி தருவது விசேஷ அம்சம். விநாயகருக்கு வடமாநில பாணியில் செந்தூரம் பூசப்பட்டுள்ளது. அம்மன் சன்னதியின் எதிரில் ஒரு பள்ளமான இடத்தில் நாகேஸ்வரர், அனுமான், நாகராஜர் சிலைகள் உள்ளன. இதற்கு நாமே தீர்த்தம் ஊற்றி, பூத்தூவி அர்ச்சனை செய்யலாம். செம்பால் செய்யப்பட்ட பத்தடி நீளமுள்ள வித்தியாசமான உண்டியலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துகின்றனர். இங்கு குங்குமம் மற்றும் லட்டு பிரசாதமாகத் தரப்படுகிறது.
நடை திறக்கும் நேரம் : இந்த திருக்கோவில் காலை 6.00 மணி முதல் மதியம் 11.00 வரையிலும் மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்து இருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : அஹமதாபாத் 146 கி.மீ
அருகிலுள்ள ரயில் நிலையம் : அபு ரோடு 18 கி.மீ
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு