திரகசராமர் மாணிக்காம்பாள்- கோடிலிங்கம்
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் கிழக்கு கோதாவரி ஆற்றின் கரையில் இராசமுந்திரி மாவட்டத்தின் பாலக்கொல்லு எனும் ஊரில் கோடிலிங்கலு என்கிற கோவில் அமைந்துள்ளது.
மூலவர் : திராக்ஷாராம
அம்மன்/தாயார் : மாணிக்காம்பாள்
பீடம் : மாணிக்க பீடம்
தல சிறப்பு: தேவியின் இடது ஸ்தனம் விழுந்த இடம். பீட சக்தியின் நாமம் த்ரிபுரமாலினி. அக்ஷர சக்தியின் நாமம். அக்ஷர தேவியின் நாமம் அருந்ததி சக்தி எனும் டார்ணா தேவி. ஆறுமுகங்கள் கொண்டவள். திருக்கரங்களில் அம்பு, வில், கேடயம், கத்தி, அபய-வரத முத்திரைகளுடன் மயில் வாகனத்தில் எழுந்தருளி வருபவள். இப்பீடத்தை பீஷணர் எனும் பைரவர் காக்கிறார். இத்தேவி ஸ்ரீசக்ரத்தின்மீதே நின்றருள்வது சிறப்பான அமைப்பாகக் கருதப்படுகிறது. இங்குள்ள லிங்கம் பளிங்கு கல்லால் ஆனது. லிங்கத்தின் பின்புறம் மூன்று கோடுகள் உள்ளதாகவும் இதற்கு ஜடா மகுடம் தரித்து அலங்கரிப்பர்.
தல புராணம் : ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீசைலம், காளஹஸ்தி, திராக்ஷாராமம் மூன்றையும் த்ரிலிங்கதேசம் என அழைப்பர். காசியைப் போலவே இங்கும் சாட்சி கணபதி அருள்கிறார். நர்த்தன கணபதியும் இத்தலத்தில் திருவருட்பாலிக்கிறார். இத்தல க்ஷேத்ர மூர்த்தியாக லக்ஷ்மி நரசிம்மர் திருவருள்பாலிப்பதால் இங்கு தினமும் திருமணங்கள் நடைபெற்றுகொண்டிருப்பது விசேஷமாகக் கருதப்படுகிறது. பிராகாரம் திரும்பும் இடத்தில் உள்ள சிறிய கோயில் செங்குஸ்தானம் என வழங்கப்படுகிறது. இது தேவர்களால் கட்டப்பட்டது. கலியுகத்தின் முடிவிலே மனிதன் கட்டை விரல் உயரம் தான் இருப்பான் என்கிறது புராணம்.
அப்போது அவர்களும் தரிசிக்கும் வண்ணம் இந்த செங்குஸ்தானம் ஆலயங்களுக்குரிய அத்தனை அம்சங்களோடும் கட்டப்பட்டுள்ளது. மேலும் இத்தலத்தில் சனிபகவானின் தந்தையாரான சூரியபகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் உள்ளது. அவரை வணங்க சகலவித சனி தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம். வியாஸ முனிவரால் உருவான ஆலயம் எனும் பெருமை உடையது இத்தலம். பல அற்புதமான சந்நதிகள் உள்ளன. அஷ்டதிக்பாலகர்கள் எட்டுத்திக்குகளிலும் அருள நடுவில் நான்முகன் எழுந்தருளியுள்ள அற்புத சந்நதியும் உண்டு. இத்தல நாயகனான ஈசன் மிக உயர்ந்த லிங்கமூர்த்தமாக, லைம் ஸ்டோன் எனப்படும் கல்லால் உருவானவர். மஞ்சளும், வெள்ளையுமாக ஜொலிக்கிறார். 15 அடி உயர மூர்த்தி இவர். அவரின் வலப்புறம் பத்ரகாளியும், இடப்புறம் அனுமனும் சந்நதி கொண்டுள்ளனர். அசோக வனத்தில் சீதாபிராட்டியை அனுமன் சந்தித்தது செவ்வாய்க்கிழமையன்று என்கிறது ராமாயணம். அதனால் இந்த அனுமனுக்கு செவ்வாய்க்கிழமைகளில் வெற்றிலைமாலை சாத்தி வடைமாலைபோட்டு பக்தர்கள் கொண்டாடுகின்றனர்.
தல பெருமை : கர்ப்பகிரகத்தில் 27 கருப்பு தூண்கள் உள்ளன. கோபுரம் 120 அடி உயரம் ஆனது. 9 ம் நூற்டாண்டில் கட்டப்பட்ட கோபுரம். இங்குள்ள பழமையான லிங்கம் திரேக யுகத்தில் ராமபிரானால் வழிபடப்பட்டது. இக்கோவிலில் ஒரு நாள் முழுவதும் தங்கி ராமலிங்கேஸ்வரை வழிபட்டால், காசில் ஒரு வருடம் தங்குவதற்கு சமம். கோவில் பிரகாரம் ஸ்ரீ வேலுபதி என்பவரால் 10 நூற்டாண்டில் கட்டப்பட்டது.
கோயில் அமைப்பு : ஒரு பிராகாரத்தில் இருட்டு மூலை எனும் இருட்டுக் கோயிலும் இத்தலத்தில் உண்டு. அடுத்து நாம் தரிசிப்பது சக்திபீட நாயகியான மாணிக்காம்பாள். பிற கோயில்களில் ஸ்ரீசக்ரம் இறைவியின் முன் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். இங்கோ தேவி ஸ்ரீசக்ரத்தின் மீதே நின்று அருட்பாலிக்கிறாள். காஞ்சி காமாட்சியன்னையைப் போலவே முன்பு இந்த மாணிக்காம்பாள் மிகவும் உக்ரமாக இருந்தாளாம். ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்து அம்பிகையின் கண்கள் மட்டும் பக்கவாட்டில் பார்ப்பது போன்ற அமைப்பில் மாற்றினாராம். அதனால் தேவி உக்ரம் தணிந்து சாந்த வடிவினளனாள். கண்களை கண்மலர் கொண்டு அலங்கரித்திருக்கின்றனர். தட்சயாகம் நடந்த இடம் ஆலயத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. தேவி உக்ரமாக தோன்றிய காரணமும் அதுதான். தட்சயாகம் நடந்த இடத்தில் ஒரு குட்டை உள்ளது. அதன் அருகில் தாட்சாயணி சிறிய சந்நதி கொண்டுள்ளாள்.
நடை திறக்கும் நேரம் : இந்த திருக்கோவில் காலை 5.30 மணி முதல் மதியம் 11.30 வரையிலும் மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்து இருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : இராசமுந்திரி 55 கி.மீ, விஜயவாடா 112 கி.மீ
அருகிலுள்ள ரயில் நிலையம் : பாலக்கொல்லு
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு