கோலாப்பூர் - மகாலட்சுமி
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் தென்மேற்கு பகுதியில் கோலாப்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் பஞ்சகங்கா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
அம்மன் / மூலவர் : மகாலட்சுமி
பீடம் : ஸ்ரகரவீரபீடம்
கண்கள் விழுந்த இடம்.
தல சிறப்புகள் : ஜனவரி 31, நவம்பர் 9 தேதிகளில் பலகணி வழியாக சூரியன் கதிர்கள் மாலை வேளையில் அம்மனின் பாதத்தில் விழுகின்றது. பிப்ரவரி 1, நவம்பர் 10 தேதிகளில் சூரியன் கதிர்கள் மார்பில் விழுகின்றது. பிப்ரவரி 1, நவம்பர் 11 தேதிகளில் மஹாலக்ஷிமி உடல் பகுதி முழுவதும் விழுகின்றது. சூரிய கதிர்கள் அம்மனின் மேல் விழும் போது தரிசிப்பது மிகவும் சிறப்பு. அன்னையின் சிற்பம் 1300 ஆண்டுகள் பழமையானது. மிகவும் அரிதான கரும் ரத்தினக்கல்லால் ஆனது. ஆதிசேஷன் குடை பிடிக்க அன்னை கையில் அமுதசுரபி ஏந்தி இருகிறாள்.
40 கிலோ எடையுள்ள மிக உயர்ந்த ஒளி பொருத்திய கல்லும், வைரமும் கலந்து செய்யப்பட சிலா ரூபத்தில் காட்சி தரும் அன்னை, அதே போன்று ஒளி பொருந்திய சதுர வடிவ கல்லின் மீது நின்றபடி அருள் செய்கிறாள். கீழுள்ள கல் ஆவுடையாகவும், மேலே நிற்கும் அன்னை சிவலிங்கம் போன்ற தோற்றம் தருவது சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்துகிறது.
அம்பிகையின் சிரத்தில் ஆதிஷேஷ குடையாக விளங்க, சிம்ம வாகனத்தில் முன்பு தாமரையின் மீது மனித சிருஷ்டிக்கு ஆதாரமாக விளங்கும் வடக்கு திசை நோக்கி நின்றபடி காட்சி தருகிறாள். சதுர்புஜதாரியாக மேலிரண்டு கைகளில் கேடயமும், வாளும் , கீழ் வலக்கையில் ஒருவகை கனியும், இடது கையில் பாத்திரமும் கொண்டு அன்னபூரணியாக காட்சி தருகிறாள். உட்பிரகாரம் சுற்றும் போது சுவர்களில் லக்ஷ்மி மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலக்ஷ்மி யந்திரமும் பொறிக்கப் பட்டுள்ளது.
கோயில் அமைப்பு : கோவிலின் வெளிப் பிரகாரமும், உட்பிரகாரமும் நமது சிந்தையின் கற்பனைக்கு அப்பாற்ப்பட்டது. உள்ளே வீற்றிருக்கும் நாயகி மஹாலக்ஷ்மி. குஞ்சலம் போன்ற தோற்றம். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி வானளவு என்பதற்கு ஒரு அற்புத எடுத்துக்காட்டு. கோவிலின் நிலைகள் கண்களுக்கு வெறும் ஆச்சரியத்தை மட்டுமே நிலையாய் நிறுத்தி வைக்கிறது. ஆலயத்திற்கு நான்கு வாயில்களும், ஐந்து கோபுரங்களும், ஏழு உயர்ந்த தீபஸ்தம்பமும் உள்ளன. ஆலயத்துள் நுழைந்ததும், ஒளி நிறைந்த கண்களுடன் கம்பீரமாக அமர்ந்து காட்சி தரும் கணபதியை வணங்கி விட்டு உள்ளே செல்ல வேண்டும். இரண்டு துவார பாலகர்கள் காவல் புரியும் தேவியின் சன்னதிக்கு நுழைந்தால், அன்னையின் தரிசனம் தூரத்திலிருந்தே நம் மனத்தைக் கொள்ளை கொள்ளும் அளவு பெரிய கர்ப்பகிரகத்தில் உள்ள மகாலட்சுமியின் விக்ரஹம் 6000 ஆண்டுகள் பழமையானது.
தல வரலாறு : இந்தத் திருத்தலத்தை மஹாலக்ஷ்மி தனது கைகளால் தூக்கி நிலப்பரப்பில் வைத்து கோயில் கொண்டதால் இவ்வூர் 'கரவீர்' என்றும் அன்னை ' கரவீர நிவாஸினி ' என்றும் அழைக்கப் படுகிறாள். இன்றும் இந்த ஆலயம் உள்ள இடம் பள்ளமாகவே உள்ளது. மேலும் இந்த ஆலயம் 108 கல்ப காலத்திற்கும் முந்தையது எனப் புராண நூல்களில் காணப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னே நைமிசாரண்யத்தில் வசித்த காச்யபர், கௌதமர், காக்கியர், ஆங்கிரஸர், பிருகு, வசிஷ்டர், முதலான 80,000 ரிஷிகள் ஒன்றுகூடி சுதமுனியாய் காசி, கங்கை,பிரயாகை, கோகுலம் இவை அனைத்தும் இணைந்த ஓரிடத்தைக் காட்டும்படி கூற, அவரும் கோலாப்பூரே அவற்றுக்கு இணையானதொரு புனித க்ஷேத்திரம் என்று உரைத்தார்.
அச்சமயம் அடர்ந்த பயங்கரக் காடுகள், மலைகளால் சூழப்பட்ட இவ்விடத்தில் பல அரக்கர்களும், யட்சர்களும், துவம்சம் செய்து வந்தனர். அவர்களின் தலைவனான கோலாசுரன் முனிவர்களுக்கும், தவத்திற்கும், இடையூறு செய்ய, முனிவர்கள் மகா லட்சுமியிடம் அவனை அழிக்க வேண்டினார். தேவியும் 9 கோடி சைனியத்துடன், நவ துர்கைகளுடனும், பைரவர், வீரபத்திரர், சித்த பாதுகேஷ்வர், சோதியா, காத்யாயினி, ஆகியோருடன் இணைந்து போர் செய்து கோலாசுரனை அழித்தாள். இறக்கும் சமயம் அவன் வேண்டிக்கொண்டபடி இவ்வூர் கோலாப்பூர் ஆயிற்று. தேவர்களும், முனிவர்களும் வேண்டி கேட்டுக்கொண்டதற்கு இணங்கி தேவியும் அந்த ஊரிலேயே கோவில் கொண்டாள்.
நடை திறக்கும் நேரம் : இந்த திருக்கோவில் காலை 6.00 மணி முதல் மதியம் 10.00 வரையிலும் மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் இருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : புனே
அருகிலுள்ள ரயில் நிலையம் : கோலாப்பூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு