ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயில்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவின் கேரள மாநிலத்தில், கொல்லம் மாவட்டத்திலுள்ள ஆரியங்காவு எனும் சிற்றூரில் அமைந்துள்ளது. இக்கோவில், கொல்லத்திலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவிலும் புனலூரிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவிலும் உள்ளது.திருவனந்தபுரம்- நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. செங்கோட்டையிலிருந்து சுமார் 23 கி.மீ தூரத்தில் உள்ளது.
மனித வாழ்க்கையை ஐந்து பருவங்களாக சாஸ்திரங்கள் பிரித்துச் சொல்கின்றன. பத்தொன்பது முதல் முப்பத்தைந்து வயது வரை உள்ள இளமைப் பருவம், `யவன பருவம்’ எனப்படுகிறது. இந்தப் பருவத்தை விளக்கும் ஐயப்பன் தலமாக ஆரியங்காவு இருக்கிறது.
தல சிறப்புகள் : சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் முதலில் தரிசிக்க வேண்டிய கோவில் இதுவாகும். மூலவராக ஐயப்பன் தம்பதியராகக் காட்சி தருகின்றார். அருகில் சிவ லிங்கம் காணப்படுகின்றது. இங்கு அய்யப்பன் சௌராட்டிர குலப் பெண்ணான புஷ்கலா தேவியுடன் அரசராக காட்சி அளிக்கிறார். கோயிலின் இடப்புறம் அய்யப்பனின் காவல் தெய்வங்களாகிய கருப்பசாமியும் கருப்பாயி அம்மையும் வீற்றிருக்கின்றனர். சபரிமலையில் பிரம்மச்சாரியாக உள்ள ஐயப்பன் இக்கோவிலில் புஷ்கலை என்னும் பெண்ணைத் திருமணம் செய்தவராகக் காட்சி தருகிறார். சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்பன் பிரம்மச்சாரியாகவும், அவரை தரிசிக்க ஆண்கள் மட்டும் சென்று வருகின்றனர். ஆனால் தம்பதியாக காட்சி தரும் ஆர்யங்காவ் சாஸ்தா கோவிலில் பெண்கள் தம்பதியராக தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மார்கழி மாதத்தில் அய்யப்பன் புஷ்கலா தேவி கல்யாண உற்சவம் நிகழ்ச்சி நடைபெறும். ஆர்யங்காவு கோயில், கேரளம் தமிழ்நாடு எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது எனவே அம்பலத்தினுள் மலையாள ஆச்சாரங்களும், உற்சவத்தின்போது தமிழ் ஆச்சாரங்களும் கடைபிடிக்கப்படுகின்றன.
கோவில் அமைப்பு : ஒற்றைக்கல்லில் தீர்த்த திருக்கல்யாண மண்டபம். திராவிட கட்டிடக் கலைப் பாணியில் கட்டப்பட்டது. ஆரியங்காவு ஐயப்பன் கோவில் கேரளக் கட்டிட அமைப்பைச் சேர்ந்தது. இங்கு சடங்குகளும் பூசைகளும் தமிழ்நாட்டுக் கோவில் முறையில் நடைபெறுகின்றன. கருவறையில் பார்வதி, லிங்க வடிவில் சிவன், ஐயப்பனின் உருவச் சிலைகள் உள்ளன. நடுவில் பாலகனாக ஐயப்பனும் அவருக்கு இடப்புறம் அம்மனும் வலப்புறம் சிவனும் அமைந்துள்ளனர். பரசுராமரால் உருவாக்கப்பட்டத் தலங்களில் இதுவும் ஒன்று என்ற நம்பிக்கை உள்ளது. ஐயப்பன் வலது காலைக் கீழே ஊன்றியும், இடது காலைச் சிறிது உயர்த்தியும் வைத்து அமர்ந்த நிலையில் அரசர் தோற்றத்தில் இருக்கிறார். இவருக்கு வலது புறம் சிவபெருமான் லிங்க வடிவிலும், இடதுபுறம் புஷ்கலை நின்ற நிலையிலும் இருக்கின்றனர். இக்கோவில் வளாகத்தில், நாகராஜர், கணபதி, வலியக்கடுத்தா கருப்பசாமி, கருப்பாயி அம்மாள் ஆகியோரும் துணைக் கடவுள்களாக இருக்கின்றனர்.
தல வரலாறு : மதுரையிலிருந்து திருவிதாங்கூர் மன்னருக்கு துணி நெய்துதரும் சௌராஷ்டிர இன வியாபாரிகள் இருந்தனர். அவர்களில் ஒருவர் அவ்வாறு மதுரையிலிருந்து திருவிதாங்கூருக்கு துணி விற்கச் செல்லும்போது தனது மகள் புஷ்கலையைக் கூட்டிச் சென்றார். ஆனால் பாண்டிய நாடு தாண்டி ஆரியங்காடு சென்றதும் புஷ்கலை அடர்ந்த காட்டில் பயணம் செய்யப் பயப்பட்டாள். அதனால் வியாபாரி தன் மகளை ஆரியங்காவு ஐயப்பன் கோவில் பூசாரியின் வீட்டில் பாதுகாப்பாக விட்டுவிட்டுத் தன் பயணத்தைத் தொடர்ந்தார். புஷ்கலை ஐயப்பன் கோவிலுக்கு வேண்டிய கைங்கரியங்கள் செய்து வர, அவள் ஐயப்பனிடம் கொண்ட பக்தி காதலாக மாறியது.
திருவிதாங்கூரில் தன் வியாபாரத்தை முடித்துவிட்டுத் திரும்பிய வியாபாரியை ஒரு மதயானை துரத்தியது. ஒரு இளைஞன் மதயானையை விரட்டியடித்து, பயந்து ஓடிய அவரைக் காப்பாற்றினான். வியாபாரி தன்னைக் காப்பாற்றிய அவ்விளைஞனுக்குத் தான் செய்யக்கூடிய உதவி என்ன என்பதை வினவ, அவன் அவரது மகளைத் தனக்குத் திருமணம் செய்துதரும்படிக் கேட்டான். அவரும் அவ்வாறே செய்வதாக உறுதியளித்தார்.
ஆரியங்காடு வந்த வியாபாரி தான் காட்டில் கண்ட இளைஞனின் உருவம் போன்றேயுள்ள ஐயப்பனைக் கோவிலில் கண்டு ஐயப்பனின் கருத்தை உணர்ந்து கொண்டார். திருவிதாங்கூர் மன்னரின் சம்மதத்துடன் மதுரையிலிருந்த சொந்தபந்தங்கள் சீர்வரிசை எடுத்துவர ஐயப்பனுக்கும் புஷ்கலைக்கும் திருமணம் ஏற்பாடாகியது. ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் இத்திருமண விழா கொண்டாடப்படுகிறது. இன்றும் தர்மசாஸ்தா, பூரணை, புஷ்கலை திருக்கல்யாணத்திற்கு மதுரையிலிருந்து சௌராஸ்டிர மக்கள் சீர் கொண்டு போவதை வழக்கத்தில் வைத்திருக்கின்றனர்.
காலை 5.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : திருவனந்தபுரம், சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : ஆரியங்காவு , செங்கோட்டை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு