திருச்சிராபள்ளி
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தின், திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீஐயப்பன் ஆலயம். திருச்சி நீதிமன்ற வளாகம் அருகே ஐயப்பன் ஆலயம் உள்ளது.
தல சிறப்புகள் : இந்தியாவின் புண்ணியத் தலங்களிலிருந்து பக்தர்களால் கொண்டுவரப்பட்ட 444 புனிதக் கற்கள், இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அந்தப் புனிதக் கற்களை அனைவரும் வணங்கி வழிபட்டுச் செல்கின்றனர். சிவனின் பஞ்சபூத தலங்கள், இமயமலை, கைலாஷ், காசி, ராமேஸ்வரம், ஆஞ்சநேயர் அருள்பாலிக்கும் நாமக்கல், சுசீந்திரம், ஆனந்தமங்கலம், முருகனின் அறுபடைவீடுகள், காவிரி, தாமிரபரணி, கிருஷ்ணா, கங்கை, பம்பை, சரஸ்வதி, கோதாவரி, யமுனா, நர்மா போன்ற புண்ணிய நதிகள், நவகிரக தலங்கள், திருப்பதி, குருவாயூர், மதுரை, திருக்கடையூர், சோட்டானிக்கரை, கொல்லூர், சபரிமலை சன்னிதானத்துக்கு செல்லும் பாதையில் உள்ள முக்கிய இடங்கள் என இந்த ஊர்களில் உள்ள கற்களெல்லாம் பக்தர்களின் பார்வைக்கு மேடை மேல் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை வணங்கினால் நாம் அனைத்து இடங்களுக்கும் ஒரே நேரத்தில் சென்று தரிசித்த பலன் கிடைக்கிறது.
கோயிலில், ஒவ்வொரு நட்சத்திரத்துக்கான ஆலயங்கள், அந்த நட்சத்திரக்காரர்களுக்கு உகந்த மரங்கள் என அறிவிப்புப் பலகைகள். அதுமட்டுமின்றி, அந்தந்த மரங்களையும் அங்கே நட்டு வளர்த்து வருகின்றனர். ரத்த தானம். கண் தானம், உடலுறுப்பு தானம், கல்விச் சேவை, மருத்துவ உதவி, யோகா மற்றும் மூச்சுப் பயிற்சிகள். தேவார - திருவாசக வகுப்புகள் என ஆன்மிகம், உடல்நலம், பொதுநலம் ஆகிய மூன்றையும் போதிக்கின்றனர், ஆலயத்தில். இந்த அருள்மிகு ஐயப்பன் கோயில் திருச்சி பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலில் சுத்தம் என்னும் சுபிட்ச மொழியும், மௌனம் என்னும் தெய்வீக மொழியும் மட்டுமே பேசப்படுகிறது. இந்தக் கோயிலில் ஐயப்பன் சன்னதியைச் சுற்றி பல கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தங்களின் கோரிக்கைகள் நிறைவேற இங்கு வந்து சாஸ்தாவை பிரார்த்தனை செய்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் மாலை அணிவித்து விரதமிருந்து இக்கோயிலுக்கு வருகிறார்கள். கார்த்திகையில் விரதம் துவங்கிய ஐயப்ப சாமிகளும் திரளென வருகின்றனர். திருச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலிருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வந்து ஸ்வாமி தரிசனம் செய்கின்றனர். தினமும் சுமார் 2,000 பக்தர்கள், இங்கு வந்து ஸ்வாமி தரிசனம் செய்கின்றனர். சித்திரை விஷு, பங்குனி உத்திரம், கார்த்திகை மாதப்பிறப்பு ஆகியவை சிறப்பு பூஜையும் வழிபாடுகளுமாக நடைபெறுகிறது.
அருகிலுள்ள விமான நிலையம் : திருச்சிராபள்ளி
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருச்சிராபள்ளி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு