விருத்த [ப்ரித] பத்ரி
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 6150 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. பத்ரிநாத் உள்பட பல புண்ணிய க்ஷேத்திரங்களுக்குச் செல்லும் ஆரம்ப வாயிலாகவும் இது விளங்குகிறது. ரிஷி கேஷத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ளது ஜோஷிமட். இதற்கு தமிழில் திருப்பிருதி என்று பெயர். இது ஹரித்வாரிலிருந்து 154 கி.மீ தொலைவில் உள்ளது.
புருஷசூக்தம், ரிஷிகேசம் முதலான ஸ்லோகத் தொகுதிகளை இயற்றிய ரிஷி நாராயணன், ஐந்து இடங்களில் தவமிருந்ததாகக் கூறுகிறார்கள். இந்த ஐந்து ஆசிரமங்களை பஞ்ச பத்ரி என்று அழைக்கிறார்கள். அவை ஆதி பத்ரி, வ்ருத பத்ரி, பவிஷ்ய பத்ரி, யோக பத்ரி, விஷால் பத்ரி என்பனவாகும். பத்ரி திருத்தலங்கள் ரிஷிகேஷ் பத்ரிநாத் மார்க்கத்தில் உள்ளன.
சிறப்புக்கள் : ஜோஷிமட்டிலிருந்து 7 கி.மீ தொலைவில் அணீமடம் அல்லது பாரிஷி ஆசிரமம் என்று கூறப்படும் விருத்த பத்ரி இருக்கிறது. ஆதிசங்கரர் முதலில் தரிசித்தது இவரைத்தான். நாரதருக்கு நாராயணன் இங்கு வயோதிகராகக் காட்சி அளித்தாராம். விஸ்வகர்மாவால் செதுக்கப்பட்ட சிலை என்று சொல்கிறார்கள். கோயில் வருடம் முழுவதும் திறந்திருக்கும். பத்ரிவிஷால் எனப்படும் நர-நாராயண மலை சிகரங்களுக்கிடையில் அலக்நந்தாவின் கரையில் அமைந்துள்ள இத்தலம் பத்ரிநாதரின் பிரதானத்தலமாகும், பூசை நடைபெறும் போது பக்தர்கள் “ ஜெய் பத்ரி விஷால் கீ “ என்று முழக்கம் எழுப்புகின்றனர்.
அலக்நந்தாவின் அழகான பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது இத்தலம், விருத்த என்றால் வயதான அல்லது பழைய என்று பொருள். இது நாரத முனிவருக்கு மிகவும் விருப்பமான இடம். நாரதருக்கு இங்கு அணிமா சக்தி சித்தியாகியதால் இவ்விடம் அணீமட் என்று அழைக்கப்படுகின்றது. நாரதர் இக்கோவிலுக்கு அடிகோலினார் என்றும், ஆதிசங்கராசாரியாரும் இங்கு பூசைகள் செய்தார் என்றும் கூறப்படுகிறது.
2400 ஆண்டுகள் வயதான கல்பவிருஷம் இன்றும் இங்கு உள்ளது. நரசிம்மர், துர்கா கோவில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. பவிஷபத்ரி 11 கி.மீ தூரத்தில் தபோவன் என்ற பள்ளத்தாக்கில் உள்ளது. பத்ரிநாதர் ஆலயம் ஆண்டுதோறும் குளிர்காலத்தில் மூடப்படும்போது, பத்ரிநாதரின் திருவுருவம் நரசிம்மர் ஆலயத்துக்குக் கொண்டு வரப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. இங்கே பத்ரி நாராயணரின் திருவுருவம் ஆராதிக்கப்படுகிறது. இங்கிருந்து நந்ததேவி, நீலகண்ட சிகரங்கள் மிகவும் அழகாக தென்படுகிறது. பத்ரிநாத் மற்றும் பல மலையேற்றப் பாதைகளுக்கு முகத்வாரம் போல உள்ளது. இந்தியாவின் கடைசி கிராமமான மானா போன்றவற்றுக்குப் போகும் பாதையும் இதுதான்.
கேரளாவில் இருந்து 8-ஆம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் தவம் செய்து ஞானம் பெற்ற மரம் கல்பக விருட்சம். பிறகு தான் அவரால் சங்கரபாஷ்யம் எழுதப்பட்டது. இந்த மல்பெரி எனப்படும் முசுக்கொட்டை மரத்தின் சுற்றளவு சுமார் 21.5 மீட்டர். இலைகள் காயாமல் இருக்கின்றன. பூக்களும் வருகின்றன. காய்கள் இல்லை. திருப்பிரிதியில் பள்ளிகொண்ட பெருமாளாக மூலவர் காட்சி அளித்தாராம். தற்போது ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட நரசிம்மர் ஆலயமும்,வாசுதேவர் ஆலயமும் உள்ளன. ஆழ்வார்கள் அருளிச்செய்ததால் திவ்யதேசங்கள் என புகழப்படுபவை 108 திருத்தலங்கள்.திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருப்பிரிதி என்னும்திவ்யதேசம் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.
ஆழ்வார் முதலில் இந்த ஸ்தலத்தை மங்களாசாசனம் செய்த பிறகு, தென்திசை நோக்கி அங்கு உள்ள பிற திவ்யதேசங்களைத் தரிசித்து மங்களாசாசனம் செய்தார். பார்வதி தேவிக்கு திருமால் நேரிடையாகத் தரிசனம் செய்த கொடுத்த அருமையான புண்ணிய பூமி.
ஸ்ரீபத்ரிநாராயணர் ஆதிசங்கரரின் கனவில் தோன்றி, தமக்கு இங்கே ஓர் ஆலயம் அமைக்குமாறு கட்டளையிட்டதாகவும், அதன்படியே ஆலயம் நிர்மாணிக்கப்பட்டதாகவும் தலபுராணம் சொல்கிறது.
சாளக்ராமக் கல்லால் உருப்பெற்றிருக்கிறார். நரசிம்மர் நடுவிலும், அவருக்கு வலப் பக்கத்தில் பத்ரி நாராயணர், குபேரர், சண்டிதேவி ஆகியோரும் காட்சி தருகின்றனர். இடப்பக்கம் கருடர், ராமர், லட்சுமணர் ஆகியோர் வீற்றிருக்கின்றனர். ஆஞ்சநேயர், விநாயகர், சூரியன் ஆகியோருக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. கருவறையை, நரசிம்மத்வார் என்கிறார்கள். நரசிம்மர் சன்னதியை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்யும்போது ஸ்ரீ சக்கர எந்திரத்தை அடியில் வைத்தாராம். அது அலகநந்தாவின் அடியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
நரசிம்மர் ஆலயத்துக்கு மிக அருகிலேயே வாசுதேவர் ஆலயம் இருக்கிறது. இங்கே கருவறையில் வாசுதேவர் என்ற திருநாமத்தோடு, சதுர்புஜங்களோடு நின்ற திருக்கோலத்தில் எம்பெருமான் காட்சி தருகிறார். ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, ஊர்வசிதேவி ஆகியோரும் தரிசனம் தருகின்றனர். நடனமாடும் விநாயகர், பிரம்மா, இந்திரன், சந்திரன் ஆகியோரது விக்கிரகங்களும் இருக்கின்றன. ஆச்சர்யமாக பெருமாளின் தொடையிலிருந்து வெளிப்பட்ட ஊர்வசியையும், தனியாக பலராமன் சன்னதி உள்ளது. நின்ற கோலத்தில் சேவை சாதிக்கும் இந்த வாசுதேவ பெருமாளைத்தான் ஆழ்வார் மங்களாசாசனம் செய்ததாகக் கூறுகின்றனர்.
ஜோஷிமட்டின் தெற்கில் திரிசூல் மலையும், வடமேற்கில் பத்ரி சிகரமும், வடக்கில் காமத் என்ற சிகரமும் பனிபோர்த்திக் காணப்படுகின்றன. பத்ரிநாத்துக்குச் செல்லும் பாதை தினமும் மாலை 4.30 மணியுடன் மூடப்பட்டு விடும். அதன்பிறகு இங்கே வந்து சேருபவர்கள், ஜோஷிமட்டில் தங்கியாக வேண்டும். ரிஷிகேஷ், பவுரி, ருத்ரபிரயாக், கர்ணபிரயாக், உக்கிமத், ஸ்ரீநகர், சமோலி போன்ற முக்கிய இடங்களிலிருந்து பேருந்துகள் மற்றும் டாக்சிகள் எளிதில் கிடைக்கின்றன. காலை 4.30 மணிக்கு தொடங்கி காலை பஸ்கள் ஹரித்வாரிலிருந்து புறப்படும். சாலையிலிருந்து சில கரடு முரடான படிகளில் இறங்கி, கோயிலை அடையலாம். இக்கோயிலின் அருகிலேயே அர்ச்சகர்கள் வசிப்பதால், சுவாமி தரிசனத்திற்கு எந்தத் தடையோ தாமதமோ ஏற்படுவதில்லை.
அருகிலுள்ள விமான நிலையம் : டேராடூன்
அருகிலுள்ள ரயில் நிலையம் : ரிஷிகேஷ்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு