மேலவலம்பேட்டை, ஞானகிரீஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னையின் செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழி அடுத்த மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் இருந்து 9 கி.மி தொலைவில் உள்ளது.
இறைவன் : ஞானகிரீஸ்வரர்
இறைவி : ஞானாம்பிகை
தல விருட்சம்: கொன்றை மரம்
தல தீர்த்தம் : பஸ்மதீர்த்தம்
தலச் சிறப்புகள் : பொதுவாக வடகிழக்கு ஈசான்ய மூலையில் இருக்கும் நவக்கிரகங்கள், இத்தலத்தில் அபூர்வமாக தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ளது சிறப்பு. இராமயண காலத்திற்கு முற்பட்ட மிகவும் பழமையான ஶ்ரீ ஞானகிரீஸ்வரன், ஶ்ரீ ஞானாம்பிகாபேட்டையில் அமைந்துள்ள இத்திருகோவில் பஞ்சகிரி க்ஷேத்திரங்களில் ஒன்றாகும். இத்திருக்கோயிலுக்கு அருகில் ஶ்ரீ ஞானகிரிமலை அமைந்துள்ளது. திருக்குளநீரை பருகினாலும் நீராடினாலும் சகல நோய்கள் தீரும் என்பதுஐதீகம். மேலும்சித்தர்கள்,முனிவர்கள்,அருணகிரிநாதர்,அருட்பிரகாச இராமலிங்க ஸ்வாமிகள் போன்ற மகான்கள் பலராலும் வழிபாடு செய்த தலமாகும்.
முகப்பு கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் பலிபீடம் மற்றும் கொடிமரம் அதனைத் தொடர்ந்து நந்தி மண்டபம். தனது நான்கு கால்களும் பக்தர்கள் கண்டு தரிசனம் செய்யும் வகையில் நந்திதேவர் அருள்பாலிப்பது அபூர்வமான அமைப்பாகும். நந்தி மண்டபத்தைத் தாண்டியதும் உள்வாயிலைக் கடந்தால் மகாமண்டபம். அதில் தெற்குப் பார்த்தவாறு ஞானாம்பிகை என்ற திருநாமம் தாங்கி அம்பிகை நின்ற கோலத்தில் அபய வரத ஹஸ்த முத்திரை காட்டி அருள்பாலிக்கிறாள். மிகச் சிறிய வடிவினளாக காட்சியளிக்கிறாள். மகாமண்டபத்தைத் தாண்டியதும் அர்த்த மண்டபத்தில் பஞ்சலோக தெய்வங்கள் கொலுவிருக்க கருவறையில் பரமேஸ்வரன் ஞானகிரீஸ்வரராக லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். கோயிலுக்கு வெளிப்புறமாக இடதுபுறம் தீர்த்தம் உள்ளது. இத்திருத்தலத்தில் ஒரு காலபூஜை வழிபாடே நடந்து வருகிறது என்றாலும் பிரதோஷம், ஆடிப்பூரம், திருவாதிரை, தைமாதம் பரிவேட்டை உற்சவம் மற்றும் மகா சிவராத்திரி போன்ற விழாக்கள் பக்தர்களால் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
வெளிப்புற கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர் வீற்றிருக்கிறார்கள். சுற்றுப் பிராகாரத்தில் மூலவருக்கு இடது புறமாக சுப்ரமணியர் வள்ளி தேவசேனாதிபதியாகவும், வலதுபுறம் விநாயகப் பெருமானும் தனிச்சன்னதியில் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். மகாமண்டபத்தைத் தாங்கி நிற்கும் தூண்களில் வெளிப்புறமாக கிழக்கு நோக்கி விநாயகரும், வடக்கு நோக்கி ஆஞ்சநேயரும் புடைப்புச் சிற்பமாக காட்சி கொடுத்து நம்மை வியக்க வைக்கிறார்கள்.
தல வரலாறு : ஞானத்தையும், மேதாவிலாசத்தையும், கல்விச் செல்வத்தையும் வழங்கிடும் பரமேஸ்வரன் அருள்பாலிக்கும் தலங்களுள் ஒன்று. கருங்குழி மேலவலம் பேட்டையில் அமைந்துள்ள ஞானாம்பிகை சமேத ஞானகிரீஸ்வரர் ஆலயம். வேதகிரி, ஞானகிரி, தவளகிரி, சோணகிரி, அருணகிரி எனப்படும் பஞ்சகிரி தலங்களுள் இத்தலம் ஞானகிரி தலமாகக் கருதப்படுகிறது. இத்தலத்தையொட்டி சற்று தூரத்தில் அமைந்திருக்கும் ஞானகிரி மலையில் ரங்கநாதர் அருள்பாலித்து வருவதால் ரங்கநாதர் மலை என்றும் இது அழைக்கப்படுகிறது. கவுதம முனிவர், விபண்டக முனிவர் இந்த ஞானகிரி தலத்தில் தவமிருந்ததாக கூறப்படுகிறது. திருப்புகழில் ஒரு பாடலில் ஞானமலை மேவு பெருமானே என்று வருவதால் அருணகிரிநாதர் இத்தலத்துக்கு வருகை புரிந்து ஞானகிரீஸ்வரரை தரிசித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அருட்பிரகாசர் ராமலிங்க அடிகளாரும் இத்தலத்து பெருமாளை தரிசித்திருப்பதாகவும் அதற்கு அடையாளமாகவே இந்தப் பகுதியில் ராமலிங்க மடம் ஒன்று இருப்பதையும் குறிப்பிடுகிறார்கள். இத்தலத்தில் ஏராளமான பஞ்ச லோக உற்சவர் திருமேனிகள் காணப்படுகிறது. இவை யாவும் பாண்டிய மன்னர்கள் காலத்தில் கோயிலுக்குக் கொடுக்கப்படிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த பஞ்சலோக விக்ரகங்களில் வேறு எங்குமே காணக்கிடைக்காத அற்புத வடிவாக நடராஜன் பெருமான் காட்சி கொடுக்கிறார். இவர் மார்பில் மீன் வடிவமும் காணப்படுகிறது.
ஶ்ரீ ஞானாம்பிகை சமேத ஶ்ரீ ஞானகிரீஸ்வரரை வழிபடும் அனைவரும் கல்வி,செல்வம், ஞானம்,மற்றும் மன அமைதியும் பெற்று சிறப்புடன் வாழ்வார்கள். குழந்தைகள் இத்திருக்கோவிலுக்கு வந்து ஈசனை வணங்கி தங்கள் படிப்பை தொடங்கினால் படிப்பில் சிறந்து விளங்குவர். சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 6.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : செங்கல்பட்டு
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை