திருவல்லிக்கேணி, திருவேட்டீஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னை நகரின் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையிலுள்ள தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள பிள்ளையார் கோவில் தெருவில் சென்று இக்கோவிலை அடையலாம்.
இறைவன் : திருவேட்டீஸ்வரர்
இறைவி : செண்பகாம்பிகை
தல தீர்த்தம் : செண்பக தீர்த்தம்
தல விருட்சம் : செண்பகம்
தலச் சிறப்புகள் : இங்கு சுயம்பு மூர்த்தியாய், லிங்க வடிவில் சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். ராகு , கேது பரிகார தலம். தேவார திருப்பதிகங்களில் திருநாவுக்கரசரின் காப்புத் திருத்தாண்டகத்தில் இக்கோயில் பற்றிய குறிப்பு உள்ளது. எனவே, இதை தேவார வைப்புத்தலம் எனச் சிறப்பித்துச் சொல்கிறார்கள்.
கோயில் அமைப்பு : சிவன், அம்பாள், சண்முகர் என மூவருக்கும், மூன்று கொடிமரத்துடன் அமைந்த தலம். மகாலட்சுமி, திருமாலை மணந்து கொள்வதற்காக இங்கு சிவனை வணங்கியதாக ஐதீகம். இதன் அடிப்படையில் இங்குள்ள ஒரு தூணில் மகாலட்சுமி கைகளில் கலசத்தை வைத்து, சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தபடி காட்சி தருகிறாள். மகாலட்சுமி, சரஸ்வதியும் மற்றொரு சன்னதியில் அருகருகே இருக்கின்றனர். சரஸ்வதியிடம் வீணை கிடையாது. விநாயகர் தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். பிரகாரத்தில் சண்முகர் தனிச்சன்னதியில் ஆறு முகங்களுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். ஒவ்வொரு சஷ்டியின் போதும் இவருக்கு 6 மலர்கள், 6 நைவேத்யம், 6 வகையான பழங்கள் படைத்து, 6 குருக்கள் “சத்ருசம்ஹார திரிசதை’ பூஜை செய்வது சிறப்பு. பிரகாரத்தில் விநாயகர், சண்முகர், சூரியன் மனைவி சங்கிலி நாச்சியாருடன் சுந்தரர் மற்றும் வள்ளலாருக்கு சன்னதி இருக்கிறது.கோஷ்டத்தில் யோக தெட்சிணாமூர்த்தியும் அருள்பாலிக்கிறார்கள். சிவன் கோயில்களில் அர்த்தஜாம பூஜை முடிந்து, பள்ளியறை பூஜையின் போது பெரும்பாலும் சிவனின் பாதமே கொண்டு செல்லப்படும். ஆனால், இங்கு பள்ளியறைக்குள் சிவனே செல்கிறார். இதற்காக சிலை ஒன்று செய்யப்பட்டுள்ளது. இவர் அர்த்த மண்டபத்தில் காட்சி தருகிறார்.
தல வரலாறு : மிகப்பழமையான இத்திருக்கோயில் 7-ம் நூற்றாண்டில் இருந்துள்ளது. இயற்கை, போரின் காரணமாக இக்கோயில் முற்றிலும் அழிந்து மூலவர் சிவலிங்கம் மட்டும் செண்பக மரங்கள் அடங்கிய புதரில் மறைந்து இருந்தது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் பசு ஒன்று தினமும் சிவலிங்கத்தின் மீது பால் சுரப்பதைக் கண்ணுற்று மக்கள் சுயம்பு லிங்கமாக இருந்த லிங்கத்தின் மீது வெட்டுகாயம் இருந்ததால் “திருவேட்டீஸ்வரர்” என அழைத்து திருக் கோயில் எழுப்பினர். மொகலாய பேரரசர் காலத்தில் மான்யங்கள் இத் திருக்கோயிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. நவாப் காலத்தில் மான்யங்கள் தரப்பட்டு இத்தலம் விருத்தி அடைந்ததாக வரலாற்றுச் செய்திகள் சொல்கின்றன. இன்றும் அர்த்தசாம பூஜைக்கு பால், புஷ்பம் நவாப் பரம்பரையினர் மூலமாக இத்தலத்து இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.
வியாச முனிவர் செய்த பதினெண் புராணங்களையும் கற்றுணர்ந்த சூத முனிவரே திருவேட்டீஸ்வரன் தலப் பெருமையைக் கூறுகிறார். இத்தலம் காசி, காளத்தி போல் மிக சிறந்ததென்றும், எத்தலத்துக்கும் இது ஒக்கும் என்றும் இறைவனே அசரீரி வாக்காக அருள அந்த அசரீரி திருவேட்டீஸ்வரர் திருக்கோயிலில் சூசகமாக இருந்து பதினேழு நித்திய லிங்கங்களில் ஒன்றாக திகழ்கிறது என்று தலபுராணம் கூறுகிறது.
அர்ஜுனன் பல திருதலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டார். அப்போது செண்பக காடு வழியாக வந்த போது ஒரு பன்றி வித்தியாசமான நிறத்தில் இருப்பதை கண்டார். அர்ஜுனன் அந்த பன்றியை வேட்டையாட எண்ணி அம்பு ஏய்தார். அம்புபட்டு பன்றி இறந்து விழுந்த இடத்தை நெருங்கி சென்று பார்த்த போது அந்த பன்றியின் உடலில் இரண்டு அம்புகள் குத்தி இருந்ததை கண்டார் அர்ஜுனன். அப்போது எங்கிருந்தோ வந்த வேடன் ஒருவன், “இந்த பன்றியை நான்தான் குறி வைத்து வேட்டையாடினேன். ஆகவே இது எமக்கே சொந்தம்.” என்றான். “வேடனே இந்த பன்றி நான் ஏய்த அம்புபட்டுதான் இறந்தது. பிறகே உன் அம்பு இதன் உடலில் தைத்துள்ளது. ஆகவே முதலில் வேட்டையாடிய எமக்குதான் இந்த பன்றி சொந்தமாகும்.” என்றான் அர்ஜுனன். இதனால் கோபம் அடைந்த வேடன் ஒரு அம்பை எடுத்து அர்ஜுனனை குறி பார்த்தான். தன்னை இந்த வேடன் கொன்று விடுவானோ என்ற பயத்தில் அவசர அவசரமாக அர்ஜுனன், தானும் ஒரு அம்பை வேடனின் தலையை குறி பார்த்து ஏய்தான். அர்ஜுனன் ஏய்த அம்பு வேடன் தலையில் பட்டு ரத்தம் வடிந்தது. அடுத்த விநாடியே வேடன் சிவபெருமானாக தோன்றினார். ஈசனை கண்ட அர்ஜுனன் பதறினான். “தங்களை காயப்படுத்திவிட்டேனே” என்று கண்ணீருடன் வருந்தினான்.
“கவலை வேண்டாம் அர்ஜுனா. காரணம் இல்லாமல் எதுவும் நடப்பது இல்லை. இதுவும் ஒரு காரணத்தால்தான் நடந்திருக்கிறது. நீ அடுத்த பிறவியில் கண்ணப்பராக பிறந்து என்னை வணங்கி வழிபட்டு என்றென்றும் உன் புகழ் உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்.” என்று அர்ஜுனனுக்கு ஆசி வழங்கினார் சிவபெருமான். சிவன் ரத்தம் கொட்டிய இடத்தில் சிவலிங்கம் உருவானது. சிவ பெருமான் வேடன் வடிவில் தோன்றியதாலும், ஸ்ரீமகாலஷ்மி சிவபூஜையும் தவமும் செய்த இடம் என்பதாலும் *“திருவேட்டீஸ்வரர்” * என்று இந்த ஆலயத்திற்கு பெயர் உருவானது. சிவன் வேடராக வந்தபோது, அர்ஜுனன் அவரை அறியாமல் அடித்துவிட்டதற்கு வருந்தினான். அவனே, அடுத்த பிறப்பில் கண்ணப்பன் என்னும் வேடனாக பிறந்தான். சிவனுக்கு தன் கண்ணையே கொடுத்து பரிகாரம் தேடிக்கொண்டான். சிவனருளால் நாயனாராகவும் அந்தஸ்து பெற்றார். அர்ஜுனன் வழிபட்ட தலமென்பதால் இங்கு கண்ணப்ப நாயனார் உற்சவராக இருக்கிறார். இவர் தை மிருகசீரிஷத்தில், குருபூஜையின் போது வீதியுலா செல்கிறார். பிரகாரத்தில் மனைவி சங்கிலி நாச்சியாருடன் சுந்தரர் மற்றும் வள்ளலாருக்கு சன்னதி இருக்கிறது. பூச நட்சத்திரத்தில் வள்ளலாருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. தைப்பூசத்தன்று உற்சவ வள்ளலார் வீதியுலா செல்கிறார். இதுதவிர உற்சவர் சண்முகர் சன்னதியிலும் வள்ளலார் சிலை உள்ளது.
சித்திரையில் பிரம்மோற்ஸவம், வைகாசி விசாகம், புரட்டாசி மகாளய அமாவாசை, மாசி மகத்தில் தீர்த்தவாரி, பங்குனி உத்திரம், பிரதோஷ நாட்களில் மூலவருக்கும் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பெற்று, பிரதோஷ நாயகர் வெள்ளி ரிஷபத்தில் பக்தர்கள் புடைசூழ ‘பிரதோஷ உலா’ வருவதைக் காணக் கண்கோடி வேண்டும். பக்தர்கள் விநாயகருக்கு தேங்காய் மாலை சாத்தி, தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். அறியாமல் செய்த தவறுக்கு வருந்துபவர்கள், நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். சுவாமிக்கு அபிஷேகம் செய்து தஙகள் நேர்த்திக்கடனை செலுத்துகி்ன்றனர். ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இந்த கிரகங்களுக்குரிய தானியமான உளுந்து, கொள்ளு தானியம், மந்தாரை மற்றும் செவ்வரளி மலரை திருவேட்டீஸ்வரருக்கு படைத்து வழிபடுகிறார்கள்.
இத்தலத்தில் சிவனை, இந்திரன் வழிபட்டதாக ஐதீகம். இதனடிப்படையில் புரட்டாசியில் இந்திரபூஜை விழா நடக்கிறது. அப்போது, சுவாமி சன்னதி முழுவதும் காய்கறி, பழம் மற்றும் இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்படுகிறது. இக்கோயிலில் தினமும் காலை பூஜையின் போது மூலவர் அருகில் ஸ்படிக லிங்கத்தையும், அருகில் நவக்கிரகங்களுக்கு உரிய நவரத்தினங்களையும் வைக்கின்றனர். பின்பு, ஒவ்வொரு கிரகத்திற்குமான தானியம் மற்றும் மலர்களை படைத்து பூஜை செய்கின்றனர். அதன் பிறகு, சூரியனுக்கு வைத்த மலரை, பிரகாரத்திலுள்ள சூரியன் சிலை முன்பு வைத்து தீபாராதனை செய்யப்படுகிறது. இதன் பின்பே, மூலவருக்குரிய பூஜை நடக்கிறது. அப்போது சிவனுக்குரிய 300 திருமந்திரங்கள் சொல்லி “ருத்ரதிரிசதை அர்ச்சனை’ செய்கின்றனர்.
காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரையும், மாலை 5.00 மணி முலை 9.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருவல்லிக்கேணி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு