காஞ்சிபுரம், கூரம் வித்ய வீனித பல்லவ பரமேஸ்வரம்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரத்திலிருந்து 10 கிமீ தொலைவில் கூரம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.
இறைவன் : வித்ய வீனித பல்லவ பரமேஸ்வரர்
தலச் சிறப்புகள் : தினமும் மாலை வேளையில், சூரியன் மறையும் நேரத்தில், சூரிய கதிர்கள் லிங்கத்தின் மீது விழும் வகையில், கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது, ராமர் வழிபட்ட தலம். ஏழாம் நூற்றாண்டில், முதலாம் பரமேஸ்வர வர்ம பல்லவ மன்னர் காலத்தில் வித்ய வினீத பல்லவரசன் என்னும் குறு நில மன்னன் இந்த ஊரில் நிலத்தை விலைக்கு வாங்கி, கோயிலை கட்டியுள்ளான். இதற்கு வித்ய வினீத பல்லவ பரமேச்வரகிருஹம் என பெயரிடப்பட்டுள்ளது.
கோயில் அமைப்பு : இக்கோயில் கருவறை தூங்கானை மாடக் கோயில் வடிவில் கட்டப்பட்டுள்ளது. தூங்கானை மாட வடிவில் உள்ள கோயில்களில் முதன்மையான கோயில் என கூறலாம். மண்டபத் தூண்களில் பல்வேறு இடங்களில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. தமிழகத்தின் கற்கோயில் , கட்டுமானக் கலைக்கும் முன் உதாரணமாக, திகழ்கிறது எனலாம். பரமேச்வரவர்மன், ராஜசிம்மன், நத்திவர்மன், நிருபதுங்கன் என நான்கு பல்லவ அரசர்கள் இவ்வூரின் மீது அதிக அளவில், ஈடுபாடு கொண்டுள்ளனர். முதலாம் ராஜராஜசோழன் காலத்தில் பெருந்திருக்கோயில் என சிறப்பு வாய்ந்ததாகும். இங்கு, ஆதிகேசவப்பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில், பல்லவர்கள் கால கோவிலாகும். வைணவத்திற்கு பெரும் தொண்டாற்றிய கூரத்தாழ்வான் அவதரித்தார். கூரத்தாழ்வானுக்கு பெருமாள் கோவிலில் ஒரு தனி சன்னிதி உள்ளது. வித்யா வீனீத பல்லவ பரமேஸ்வரர் திருக்கோவில் ஒரு கற்றளியாகும். கற்றளி கற்களால் கட்டப்பட்ட கட்டுமானக் கோவிலாகும். கற்றளிகள் கட்டும் மரபு கி.பி ஏழாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து பல்லவர்களால் தொடங்கப் பெற்றது. இக்கற்றளி திருச்சுற்றுப் பிரகாரம், மகாமண்டபம் அா்த்தமண்டபம், கருவறை ஆகிய அங்கங்களைக் கொண்டுள்ளது. கருவறையின் நுழைவாயிலில் இடப்புறம் விநாயகரும் வலப்புறம் முருகனும் கோஷ்டங்களில் காட்சி தருகிறார்கள். பல்லவ காலத்திய மூலக் கருவறை தெற்கில் ஒரு நுழைவாயில் கொண்ட மண்டபத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. கருவறை கிழக்கு நோக்கி இருந்துள்ளது. உட்சுவரில் அதிஷ்டானதிற்கு மேலே காணப்படும் உட்பகுதி வடிவமைப்புகள் காணாமல் போய்விட்டது. எனவே பிற்காலத்தில் செங்கல்லைக் கொண்டு மேற்கட்டுமானம் தட்டையான கூரையுடன் கட்டப்பட்டது.
தற்போது நாம் காணும் இந்தக் கட்டுமானம் செங்கல் அடித்தளத்தின் மீது தட்டையான பலகைக் கற்களைக் கொண்டு உபானம், ஜகதி, திரிபட்டைக் குமுதம், கண்டம், பட்டிகை ஆகிய அதிஷ்டான உறுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலே உள்ள சுவர்கள் செங்குத்து மற்றும் கிடைமட்ட பலகைகளைக் கொண்டு ஒன்றுவிட்டு ஒன்று மாற்றிக் கட்டப்பட்டுள்ளது. இதற்கு மேல் செங்குத்துப் பலகைகளைக் குறுக்காகவும் நெடுக்காகவும் அடுக்கி பெட்டியைப்போன்ற குழிவை உருவாக்கி அதில் செங்கல் கட்டுமானம் கட்டியுள்ளனர். அதிஷ்டானத்தின் மேல் அமைக்கப்பட்ட சுவர் செங்கல் மற்றும் சுண்ணாம்புக் காரையால் அமைக்கப்பட்ட கட்டுமானம் ஆகும். உட்சுவரைத் தாங்குவதற்காக உதைகால்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கருவறைக்கு எதிரே நந்தியும் பாணலிங்கமும், பலிபீடமும் அமைந்துள்ளது. இஃது இக்கோவிலின் சிறப்பு அமைப்பாகக் கருதப்படுகிறது. மகா மண்டபதிற்குள் நுழைவதற்குத் தென்புறம் ஒரு நுழை வாயில் உள்ளது. இக்கோவில் மகா மண்டபத்தில் பொய்யாமொழி விநாயகருக்கும், சுப்ரமணியருக்கும் சன்னதிகள் உள்ளன. நான்கு கரங்களுடன் காட்சி தரும் சுப்பிரமணியர் தன் மேல் இரு கைகளில் அக்கமாலையும் கமண்டலமும் ஏந்தி காட்சி தருகிறார். இவரைப் பிரம்ம சாஸ்தா வடிவமாகப் பல்லவர்கள் அமைத்துள்ளதாகக் கருதப்படுகிறது. சுப்பிரமணியர் பிரம்மனை சிறையில் அடைத்த பின் அவரது படைப்புத் தொழிலை ஏற்று நடத்தியுள்ளாராம். அந்தச் சமயத்தில் காட்சி தந்தது இந்தக் கோலத்தில் தானாம்.
கூரம் பரமேஸ்வரத்தில் சற்று மாறுபட்ட அமைப்புடன் கூடிய நடராஜரின் வெண்கலப் படிமம் ஒன்று பூமியின் அடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. இந்தப் படிமம் கி.பி. 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தெய்வப் படிமத்தைச் சுற்றிலும் வழக்கமாக அமைக்கப்படும் திருவாச்சி என்ற உலோக வளைவினைக் காணவில்லை. இப்படிமத்தில் நான்கு கரங்ககளுடன் தோன்றும் நடராஜரின் இடது மேற்கரம், வழக்கமாக ஏந்தும் அனல் கலையத்திற்குப் பதிலாக, பாம்பினைப் பற்றியுள்ளது. சிவனின் விரிசடைகளுக்கு இடையே நாம் வழக்கமாகக் கண்ணுறும் கங்கை இப்படிமத்தில் இல்லை. சிலம்பணிந்த வலக்காலை முயலகன் மீது ஊன்றியவாறு இடக்காலை தூக்கி ஊர்த்துவ தண்டவமாடும் நடராஜ மூர்த்தியின் அரிய படிமம் தற்போது சென்னை அரசு அருங்காட்சியகத்தின் வெண்கலக் காட்சிக் கூடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதோஷம், மகாசிவராத்திரி, சிவராத்திரி,பௌர்ணமி உள்ளிட்ட விழாக்கள் இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன. விருப்பங்களை நிறைவேற்றும் பரிகார தலமாக உள்ளது. சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : காஞ்சிபுரம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு